Feed on
Posts
Comments

"அங்க்கிள்… இது ஏன் தப்புன்னு போட்டிருக்கீங்க?"

அண்மையில் எங்கள் தமிழ்ப்பள்ளியின் நிலை-4 மாணவி ஒருவர் தேர்வு முடிவினைப் பார்த்து விட்டுக் கேட்டார். ஆங்கிலத்தில் இருந்து ஒரு சொற்றொடரைத் தமிழாக்கம் செய்திருந்ததில் சில ஒற்றுப் பிழைகளைச் சுழித்திருந்தேன்.

"ஓ! அதுவா… அந்த இடத்துல ஒற்று வரவேண்டும். (கதவைத் திறந்தான்). இது பத்தி அடுத்த வருசம் இன்னும் விரிவாப் படிப்போம்"

"ஆனா… இதுக்கு மார்க் குறைக்கலியே?"

"இல்லம்மா… பரவாயில்ல. இத நீங்க தெரிஞ்சுக்கணும்னு தான் குறிச்சிருக்கேன். பெரியவங்களே பல பேரு இதச் சரியாச் செய்யறதில்ல! அதனால இதுக்கு நான் முழு மதிப்பெண்ணும் கொடுத்துட்டேன்.

இதுக்கு நிறைய விதிகள் இருக்கு. நாம அப்புறம் படிக்கலாம். இப்போதைக்கு, ஒரு object -அ எழுதும்போது அதுக்கப்புறம் வரும் ‘ஐ’க்கு அடுத்துக் க, ச, த, ப எழுத்து வந்தா அப்போ அந்த எழுத்த இரட்டிச்சு எழுதணும். அத மட்டும் ஞாபகம் வச்சுக்குங்க"

ATA Nilai4ஆர்வமாகக் கற்றுக் கொள்கின்றனர் அயலகத்துத் தமிழ்ச் சிறார்கள். வெறும் தமிழ்ச்சூழலும், அறிமுகத் தமிழும் தாண்டி அமெரிக்கத் தமிழ்க்கல்வி இலக்கணமும், சற்றே இலக்கியமும் கற்றுத் தரவும் தொடங்கியிருக்கிறது. ஆரம்பக் கட்டங்கள் தான். ஆனால் வளர்முகமாகச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அயற்சூழலில் தமிழ்க்கல்வி என்பது அதன் தனிச் சவால்களைக் கொண்டது என்பதைக் கற்றுத் தருவோர் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம். இந்தச் சிக்கல்களையும் சவால்களையும் கூட்டாகச் சமாளிக்க அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் போன்ற அமைப்புகள் பெரும் உதவியாக இருக்கின்றன. தனித்தனியே ஆங்காங்கே நண்பர்கள் தமிழ் அறிமுகம் செய்து வைத்தது போய், அனைவரது உழைப்பையும் அனுபவத்தையும் பகிர்ந்து பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள இது வழிவகை செய்கிறது. அடுத்த கட்ட நகர்வுக்கு இது அவசியமும் கூட.

Continue Reading »

பூரண குணம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி, மருத்துவமனை நீங்கி வீடு வந்த பின்னொரு நாள், பின்னொரு பொழுதொன்றில் சொல்லுவார் அப்பா,  "பரவால்லப்பா! பெரிய கண்டத்துல இருந்து இந்தத் தடவ தப்பிச்சாச்சு. பெரிய ஆபத்தே நீங்கிடுச்சு போ!"

நிம்மதி கலந்த பெருமூச்சொன்றோடு முன்னறைச் சோபா இருக்கையில் அமர்ந்திருப்பார். முகத்தில் ஒரு அமைதியான நிறைவு மலர்ந்திருக்கும். அவருக்கும், அருகே அமர்ந்திருக்கும் எனக்குமாகக் காப்பியோ தேநீரோ கொண்டு வந்து, மேலே சுழலும் மின்விசிறியின் காற்றில், ‘சித்த ஆறட்டும்’ என்றபடி கீழே அமர்வார் அம்மா.

"ஏதோ… கெட்ட நேரத்துல ஒரு நல்ல நேரம். வேற என்னாலும் ஆயிருந்தா என்ன பண்றது!" என்று நடந்துவிட்டதும், நடந்துவிடக் கூடாததுமாக எண்ணி அசை போட்டுக் கொண்டிருப்பார் அம்மா.

ஒரு பார்வை. ஒரு சிரிப்பு. ஒரு தலையசைப்பு. அவ்வளவு தான். அப்பா காப்பியைக் குடித்துவிட்டுக் கிளம்பிவிடுவார். "நான் அப்படியே அந்தப் பொட்டிக் கட வரை போய்ட்டு வரேன்". கட்டில் மெத்தையடியில் மடித்து வைத்திருந்த சட்டையை மாட்டிக் கொண்டு அதில் கண்டுபிடித்துவிட்ட சிறு சுருக்கம் ஒன்றை நீவி விட்டபடி வெளியே செல்வார் அப்பா.

சில காலமாகவே என் அப்பாவின் உலகம் சுருங்கி இருந்தது. நான்காண்டுகளுக்கு முன் உண்டான ஒரு இதயக் கோளாறின் காரணமாக அதன் இறைப்புக் கொண்மை குறைந்திருந்தது. ‘அதிக அலைச்சல் வேண்டாம்’ என்னும் மருத்துவ அறிவுரையின்படி வெளியூர், பண்டிகை, விழா என்று எதுவும் இல்லாமல் வீடும், வீட்டை ஒட்டிய ஐந்து நிமிட நடைச் சுற்றளவும் மட்டுமே அவருடைய உலகமாக இருந்தது.

ஒரு பெட்டிக் கடை, வங்கி, இரண்டு கோயில், மருந்துக் கடை, கடிகாரக் கடை என்று தன்னுலகம் சுருங்கி இருந்தாலும் அது பற்றி எந்தக் கவலையையும் வெளிக் காட்டிக் கொண்டவரில்லை அப்பா. வருடம் ஒரு முறை நான் விடுப்பில் ஊர் வரும்போது மட்டும் இராசாக் கோயிலுக்கும் தான் பிறந்து வளர்ந்த ஊருக்கும் போய் உறவுகளைப் பார்த்து வரலாம் என்று இருப்பார்.

அழுத்தக்காரர் அவர் என்பார் அம்மா. "எதையாச்சும் சொல்லுதா இந்த மனுசன்? ஒரு கவலை உண்டுமா? ஆசை, சந்தோசம்; ஒரு வருத்தம், கோபம்; ஒண்ணயும் சொல்றதில்ல! நான் தான் இப்படிக் கவலப் பட்டுக்கிட்டு, ஆத்திரப் பட்டுக்கிட்டு… இப்படிக் கெடக்குறன். எதையாச்சும் சொல்லலாமுல்ல?"

"ஏங்ப்பா? அம்மா இப்படிச் சொல்றாங்களே?" என்று நான் கேட்டால், ‘இப்ப என்ன ஆயிருச்சு?’ என்றாற்போல் உதறி எறிந்து விட்டு, "கெடக்குது உடு. அதையும் இதையும் நெனச்சுக் கொழப்பிக்கிட்டு இருந்தா என்ன வரப் போவுது?" என்பார்.

Continue Reading »

அனிடோரி-கிளாட்ரா டாலியாண்ணா இசிலீ என்கின்ற அழகு இளவரசியைப் பற்றி எப்போதாவது நீங்கள் அறிந்திருந்தால் உங்களுக்கு நிச்சயமாய் முன்பதின்ம வயதில் பெண்கள் இருந்திருக்க வேண்டும். அதோடு, அவர்கள் படிக்கின்ற ஆங்கிலப் புனைவுகளை நீங்களும் படிக்க எத்தனித்திருக்கலாம் என்பதும் புலனாகும். பிறக்கும் போதே தம் நாவில் தமக்கான பெயர்களைத் தாங்கி வருகிற குதிரைகளும், அக்குதிரைகளோடு பேசத் தெரிந்த இளவரசியுமாக அப்புனைவுலகம் அழகான ஒன்று.

clip_image001அப்படியானதொரு புனைவுலகில் நுழைந்து பார்க்க எனக்கொரு வாய்ப்பினை என் மகள்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

அதிலே, மூஞ்சூறு வீரர்களும், அவை போர் தொடுத்து வெல்லும் வில்லத்தனம் நிறைந்த எலிகளும், உலகம் பிரகாசமானது என்று எப்போதும் பேசித்திரிந்து எல்லோருக்கும் உதவும் நாய் ஒன்றும், உலகப் பயணம் கிளம்பிச் செல்லும் தேவதைகளும், இளவரசிகளும், மாய மந்திரங்களும் ஒரு புறம். சாதாரணர்களால் புரிந்து கொள்ள இயலாத தனிச்சிறப்பும் அறிவுமுடைய சிறுவர்கள், ஏழ்மை, தனிமை, உறவின்மையை விடுத்து வாழ்வில் பெறும் வெற்றிகள் என்று இன்னொரு உலகம் மறுபுறம். கிரேக்கக் கடவுள்களின் அரசியலும், சேக்சுப்பியர் காலத்து இரகசியங்களும், அவற்றோடு மல்லுக்கட்டும் இக்காலப் பள்ளிச் சிறார்களுமாய் இன்னொரு உலகம். புதிது புதிதான உலகங்களுக்குள் சென்று அவற்றினின்று மீண்டு நிகழ்வாழ்விற்கு வரப் பிடிக்காத என் பெண்களை அனுதினமும் இரவு படிப்பதை நிறுத்தச் சொல்லி நித்திரைக்கு அனுப்பி வைப்பதும் ஒரு தனிக் கதை தான்.

சுமார் இரண்டு வயது இருக்கையில் அஞ்சல் செலவு மட்டும் பெற்றுக் கொண்டு வால்ட்-டிசுனிக்காரர்கள் அனுப்பி வைத்த எட்டுப் புத்தகங்களையே படி படியென்று படித்துக் கிழித்த போது நிவேதிதாவும் நந்திதாவும் எங்களின் கைகளைப் பிடித்துக் கொண்டே தான் அவர்களின் புனைவுலகினுள் தடம் பயின்றனர்.

Continue Reading »

IMG_1213அனைவருக்கு இனிய பொங்கல்/புத்தாண்டு வாழ்த்துகள். வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் வடை பாயசமுமாகக் கொண்டாடியதில் Smile நேற்றே வாழ்த்தினைச் சொல்ல ஒணாமல் (!) போய்விட்டது. வாழ்க என் மனைவியார்.  (வயிற்றுக்கு நல் உணவுண்டு என்றால் மரியாதை மட்டற்று வருகிறது!).

எல்லா ஆண்டுகளும் இப்படியாக இருப்பதில்லை. இரண்டாண்டுகளுக்கு முந்தைய இதே பொங்கல் நாளில் பொங்கலை நான் வைக்கிறேன் என்று இறங்கி நானும் என் பெரிய மகளும் சர்க்கரைப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்பைத் தேடி இணையத்தில் அலைந்தோம். பெரியவளுக்குத் தான் சர்க்கரைச் சங்கதிகள் அதிகம் பிடிக்கும் என்பதால் சின்னவள் அங்கிருக்கவில்லை.

மகாநந்தியின் இனிப்புப் பொங்கலுக்கான செய்முறைக் குறிப்புகளைச் சார்ந்து செய்ய முடிவு செய்தோம். குறிப்பினில் படிப்படியாகக் கொடுத்திருந்த முறைகளைக் கடந்து வருகையில், ‘பொங்கல் ஆனதும் முதலில் இறைவனுக்குப் படைத்துவிட்டுப் பிறகு பரிமாறவும்’ என்னும் குறிப்பைக் கண்டு விளையாட்டாய் நான், “நமக்குச் சாப்பாடு கெடச்சாப் போதும்; சாமியெல்லாம் தேவையில்லை” என்றேன்.

இதைக் கேட்டுக் கலகலவென்று முத்துதிரச் சிரித்த பன்னிரண்டு அகவையாள் அந்நாளை என் நினைவகத்தில் ஏற்றி வைத்தாள். பள்ளி நிகழ்வொன்று நினைவுக்கு வந்தவளாய் என்னைப் பார்த்து,

“அப்பா! இப்போதெல்லாம் நீ என்ன மதம் என்று யாரேனும் என்னைக் கேட்டால், நான் பாதி இந்து, பாதி நாத்திகர் என்றே சொல்கிறேன்”, என்றாள்.

Continue Reading »

இது கொஞ்சம் சிக்கலான தலைப்பு என்பதால் முதலிலேயே கொஞ்சம் ‘தெளிவு’ படுத்தி விடுவது நல்லதெனப் படுகிறது.  முதலில், இந்த இடுகைக்கும் பனைமரத்தில் இருந்து இறக்கும் சரக்குக்கும் தொடர்பு கிடையாது.   Smile

நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்

சில நாட்களுக்கு முன்னர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்னும் தமிழ்ப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அண்மையில் வந்த ‘பீட்சா’ படம் போன்றே இந்தப் படமும் எங்கள் மகள்களுக்கும் பிடித்திருந்தது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் தமிழ்ப் படங்களில் வருவது ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. என்றாலும், இந்த இடுகை இந்தப் படம் குறித்த விமர்சனப் பதிவும் கிடையாது!

‘கொஞ்சம்’ என்று பன்மைக்கான முன்னொட்டைக் கொண்டு வரும் பெயரில் ‘கள்’ என்னும் பன்மை விகுதியைக் காணோமே என்னும் தமிழ் இலக்கணச் சிந்தனை தொடங்கி வைத்த ஒரு எண்ண ஓட்டம்.  இருந்தாலும், இது போன்ற பாவனையில் தவறொன்றுமில்லை என்று அண்மையில் எங்கோ படித்த நினைவு வரவே அதனைத் தள்ளிப் போய்விட்டேன். இங்கே இருக்கும் வார இறுதித் தமிழ்ப் பள்ளியில் நிலை-4ன் தமிழ் ஆசிரியனாக இருப்பதில் இந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமாகத் தமிழ் இலக்கணக் குறிப்புகளைப் பார்த்து வருகிறேன். அதில் எங்கேயாவது பார்த்திருக்கலாம்.

இதே கேள்வியையும் ஐயப்பாட்டையும் துவிட்டர்ச் சந்தில் (ஏன் சந்து எனப் பெயர் வந்தது எனத் தெரியவில்லை; அதுவும் ஒருவகையில் நன்றாகவே இருக்கிறது!) இளாவும் பலராமனும் எழுப்பவே, இது சரியான பயன்பாடே என்னும் குறிப்பிற்கான உசாத்துணையைப் பிடிக்க இறங்கினேன்.

Continue Reading »

« Newer Posts - Older Posts »