Feed on
Posts
Comments

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு இந்த வாரம் நடுவண் அரசின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. படம் வந்தபோது பார்த்து, அதனால் உந்தப்பட்டு அதன் மூலக்கதையான பூமணியின் வெக்கையைப் படித்து, அதுபற்றிய ஒரு பதிவையும் எழுதிவிட்டு, ஏனோ வெளியிடாமல் இருந்துவிட்டேன். 2020ஆம் ஆண்டின் போக்கு இப்படியாகத் தான் இருந்தது. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட இந்தக் காலத்தின் பொறுத்தப்பாட்டை எண்ணி அதனை இப்போது வெளியிட்டு விடலாம் என்று துணிந்துவிட்டேன். 

* * * *

vekkai‘கையைத்தான் வெட்ட நினைத்தான். ஆனால் சற்று எட்ட விழுந்ததில் விலா எழும்பில் பாய்ந்து ஆளே காலி’, என்று எடுத்தவுடனேயே உச்சநிலையைத் தொட்டுவிடுவதில் சட்டென நம்மை உள்ளே இழுத்துக் கொள்கிறது கதை. பூமணியின் "வெக்கை" புதினம் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இதுவரை தேடிச் சென்று படிக்க முனைந்ததில்லை.

வெற்றிமாறனும் தனுசும் உருவாக்கியிருக்கும் அசுரனைச் சில காலம் முன்பு பார்த்தது பிடித்திருந்தது. அதன் மூலக் கதையாய் அமைந்திருந்த வெக்கையைப் பெரிதும் சிதைக்காமல் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்னும் கருத்துகள் செவிகளுக்கெட்டவே அதனையும் படிக்கலாமே என்று தோன்றியது. புத்தாண்டில் புதுப்பிக்க நினைக்கும் நூல்வாசிக்கும் பழக்கத்திற்கு இதனை ஒரு தொடக்கமாக எடுத்துக் கொள்ளலாமே என்று நினைத்தேன்.

வெக்கையின் மூலத்திற்கு நெருக்கமாய் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஒரு திரைக்கதைக்கும் ஓர் இலக்கியப்படைப்புக்குமான களங்கள் வேறு வேறு என்பதை விரைவில் உணர்ந்துகொள்ளலாம். வெவ்வேறு வகைப்பாட்டில் எனக்கு இரண்டும் பிடித்திருந்தது. திரைக்கதையின் தாக்கத்தில் நூலின் கதைப்போக்குத் தொடக்கத்தில் சற்றுத் தளைப்பட்டிருந்தாலும், பூமணியின் எழுத்தின் வீரியம் விரைவில் அதனை உடைத்துத் தனக்கான இருப்பை நிலைநாட்டிவிடுகிறது. முதற்சில பக்கங்களில் சீரோட்டம் சற்றுத் தடைப்படத் தான் செய்தது. சிறுசிறு துண்டாய் இருந்த வாக்கியப் பயன்பாடுகளா? பெரும்பகுதியில் உரையாடலிலேயே நகரும் கதையின் சில செயற்கைத் தனங்களா? அல்லது கரிசற்காட்டு வட்டார வழக்கிற்குப் பழக்கமில்லா அந்நிய உணர்வா? ஆனால், இவையெல்லாம் சில பக்கங்களுக்குத் தான். கதாசிரியனும் விரைவில் அமைந்துவிடுகிறான். நமக்கும் அதனுள் ஆழ்ந்துவிடும் தன்மை அமைந்துவிடுகிறது.

Continue Reading »

"வங்கிகளின் திருட்டு வேலை" என்று வீட்டுக்கடன் பற்றிய ஒரு பதிவும் ஒலிப்பதிவும் சில நாள்களாகக் கண்ணில் பட்டுக்கொண்டிருந்ததை இன்றுதான் கேட்க நேர்ந்தது. எச்சு.டி.எப்.சி வங்கி மேலாளர் ஒருவருக்கும் கடன் வாங்கிய மருத்துவர் ஒருவருக்கும் இடையே நடந்ததாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு ஒலிக்கோப்பு. இப்படி ஒரு பதிவைச் சமூக ஊடகத்தில் போடவேண்டும் என்ற முன்முடிபுடன் மருத்துவர் பேச்சை அமைத்துக் கொள்வதைக் கவனிக்க முடிகிறது.

என் கருத்தில் இது ஒரு அயோக்கியத்தனமான பதிவு. கடுஞ்சொற்களுக்கு வருந்துகிறேன். குறைந்தபட்சம், படித்த மக்களாய் இருந்தாலும் தம் பொருளாதார அறிவின்மையைப் பறைசாற்றும் பதிவு இது. தனது தவறு, ஏமாற்றம் என்று மருத்துவர் ஆதங்கப்படுவதில் மீச்சிறு நியாயம் மட்டுமே இருக்கிறது. வங்கி மேலாளரின் மீது பெரிய தவறொன்றும் இல்லை என்பதோடு, இவ்வாறு எள்ளலும், நயந்தும் பேசும் ஒருவரோடு மிகவும் பொறுமையாக அவர் பேசிய விதமும் நன்றே.

ஒன்று நிச்சயம். கண்ணை மூடிக் கொண்டு கடனைத் தரும் வங்கிகளும், வாங்கும் மக்களும், அதுகுறித்த போதிய அறிவின்றி இச்சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின் பொருளாதார அறிவைப் பெருக்கிக் கொள்ள அவசர ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதுமே அது.

அடிப்படைச் செய்தி இதுதான். மருத்துவர் 2006ல் வாங்கிய கடன் ரூ.51 இலட்சம். 14.75% வட்டி விகிதத்தில் வாங்கிய கடனுக்கு மாதத் தவணையாக ரூ.57 ஆயிரம் கட்டுகிறார். அவர் பேசும் 2020 காலக்கட்டத்தில் இதுவரை கட்டிய தொகையின் கூட்டல் ரூ.91 இலட்சம். ஆனால், கட்டிய அசல் போக இன்னும் மிச்சமிருக்கும் கடன் தொகை ரூ 40+ இலட்சம்.

இவர் (அநியாயப்) பொங்கல் வைப்பதற்கு இரண்டு காரணங்களைப் பார்க்கலாம். ஒன்று, வாங்கிய கடனுக்கு மேல் 40 இலட்சம் ரூபாய் கட்டிய பிறகும் இன்னும் 40+ இலட்சம் அசல் மட்டுமே இருக்கிறது. இது வங்கிகளின் கொள்ளை அல்லவா என்பது முதல் கேள்வி. இரண்டாவது, வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை ரிசர்வுவங்கி 6-8% என்று குறைத்துவிட்டபோதும், வங்கி மேலாளர் இவரை அழைத்துச் சொல்லித் தன் தார்மீகக் கடமையை ஆற்றாமல் மோசம் செய்கிறார் என்பது இரண்டாவது. இவை ஏன் நியாயமற்றவை என்பதை இங்கே பார்ப்போம்!

Continue Reading »

எண்பத்தேழில் அழகப்பர் நுட்பியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் படிக்க முதல் பட்டியலிலேயே இடம் கிடைத்தது எனக்கு. அறுபது இடங்கள் தான் என்றாலும் குவிந்துவிடும் விண்ணப்பங்களின் காரணமாய் இங்கு இடம் கிடைப்பதில் பெரும்போட்டி இருக்கும். பன்னிரண்டாவது பொதுத்தேர்வும் நுழைவுத்தேர்வுமான மதிப்பெண் புள்ளிகளில் 250க்கு 240க்கும் மேல் பெற்றிருந்தும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்காமல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தான் இடம் கிடைத்தது. ஆனாலும், திறந்த ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்றவர்கள் மருத்துவப்படிப்போ, பிற நல்ல கல்லூரிகளோ என்று சென்றுவிட்டதில், அன்று அறுபதுக்கு அஞ்சு பேர் மட்டும்தான் சேர்ந்திருந்தோம்.

தூத்துக்குடி, நாகர்கோயில், ஈரோடு என்று அன்றுசேர்ந்த அனைவருமே மாவட்டங்களில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வந்தவர்கள் தாம். அதன்பிறகு இரண்டாவது பட்டியல், மூன்றாவது பட்டியல் என்று இடவொதுக்கீட்டு மதிப்பெண் புள்ளிகள் கீழே இறங்கிவந்தாலும், முதலில் சேர்ந்த எங்களைப் பிற்படுத்தப்பட்டோர் இடங்களில் தான் சேர்த்திருந்தார்களே தவிர, திறந்த ஒதுக்கீட்டிற்கு மாற்றவில்லை என்பது ஓர் ஏமாற்றுவேலை தான். அந்த அரசியல் எல்லாம் அன்று புரியவில்லை. இன்றும் நுணுகி முழுவிவரத்தை அறிந்தவர் யார்?

இருந்தாலும், கடும்போட்டிச் சூழலில் மாநகரங்கள் அல்லாத மாவட்டச் சிற்றூர்களில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்தும் முதன்மையான இடத்திற்கு வந்து சேரத் தமிழகத்தின் திராவிட இயக்க இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் தான் காரணமாக இருந்தன. வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு, என்று வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது தான் அதன் அடிப்படைச் சித்தாந்தம். ஆனால், அப்படிப் பயன்பெற்ற சிலரே இன்று இவ்விடவொதுக்கீட்டுக் கொள்கைகளில் ஐயம் கொள்வதும், நிலையற்ற தன்மையில் இருப்பது ஏன் என்பது ஓர் உளவியற் சிக்கல் தான். அசுரபலம் கொண்டோர் ஒன்றிய அரசு இடவொதுக்கீடு இல்லை என்று சொன்னாலும் எம் கொங்குநாட்டுத் தங்கங்கள் காதிலே பூச்சுற்றிக் கொண்டு, ‘எண்ணிக்குங்க’ என்று ஏன் தோப்புக் கரணங்கள் போடுகிறார்களோ, தெரியவில்லை!

Continue Reading »

வணிகப்பெயர்களையும் நிறுவனங்களின் பெயர்களையும் தமிழ்ப்புலத்தில் சொல்லும்போது அவற்றை மொழிபெயர்க்கலாமா கூடாதா என்னும் கேள்வி குறித்துச் சிலநாள் முன்னர் ‘பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்’ என்று எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் இது. ஒரு குறிப்பிட்ட பெயரை எடுத்து அலச இருப்பதால், ஒரு கட்டின் ஆய்வு அல்லது அலசல் என்போம்.

[Case என்னும் சொல்லுக்குத் தமிழில் கட்டு என முன்வைத்திருந்தார் இராம.கி. அதையொட்டி, Case analysis என்பதற்குக் கட்டு+ஆய்வு எனக் கட்டாய்வு என்று கொண்டேன். கட்டலசல் என்றும் கூறலாமோ?].

வேற்றுமொழி ஒன்றில் வழங்கும் பெயர்களை அப்படியே ஏற்பதா, அல்லது இலக்குமொழிக்கு ஒத்து மாற்றி எழுதுவதா என்னும் சிக்கல் அல்லது கேள்வி பொதுவாய்ப் பல மொழிகளிலும் இருக்குமொன்றுதான். ஆனால், உலகமயம் பெருகும் இந்நாளில், உள்ளூர்ச் சந்தைக்கும் பண்பாட்டிற்கும் முதன்மைத்துவம் அளித்து அம்மொழிக்கு ஏற்ப ஒரு வணிக நிறுவனத்தின் பெயரையோ, அவர்களின் பொரிம்பு அல்லது புதுக்கு/படைப்பு இவற்றின் பெயரையோ மாற்றி எழுதிக்கொள்வதும் இயல்புதான் என்று பல்வேறு மொழியினரும் இப்போது ஏற்றுக்கொள்வதைப் பார்க்கலாம்.

சென்னையில் வேதிப்பொறியியல்சார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் நண்பர் எடுவின் சில நாள்களுக்கு முன்னர் அவருடைய நிறுவனப் பெயரைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். தற்போது எழுதியிருக்கும் முறை நிறைவைத் தரவில்லை என்று கூறியிருந்தார்.

clip_image001

ஒருவேளை ‘இன்னோவேடிவ் சொலுஷன் பிரைவேட் லிமிடெட்’ என்று எழுதியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் அதற்கான தமிழாக்ககத்தைக் கேட்டிருக்கலாம். ஆனால், நாம் இங்கு மொத்தப் பெயரையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வணிகப்பெயர்த் தமிழாக்கத்துக்கான ஒரு கட்டாய்வாக அலசுவோம். 🙂

ChemSys – Innovative Solutions Private Limited என்பது தான் நமக்கு முன்னிருக்கும் நிறுவப்பெயர். இதில் இரண்டாம் பகுதியை மாற்றிக் கொள்வதில் சிக்கல் இல்லை. அவை பொதுவான பொருள்பொதிந்த சொற்கள் என்பதால் எளிதில் தமிழாக்கம் செய்துகொள்ளலாம். Innovative Solutions என்பதற்குப் புதிய தீர்வுகள் அல்லது புதுமையான தீர்வுகள் என்று நான் முன்வைப்பேன். சுருங்கச் சொல்வது நலம்பயக்கும் என்பதால் புதுமைத்தீர்வுகள் என்றே கொள்ளலாம். Private Limited என்பதை Private Limited Company என்பதாகக் கொண்டு தனியார் நிறுவம் என்றே சொல்லிவிடலாம். ஆக, பெயரின் இரண்டாம் பகுதியைப் "புதுமைத் தீர்வுகளுக்கான தனியார் நிறுவம்" என்று வைத்துக் கொள்வோம்.

Continue Reading »

Brand என்னும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பொரிம்பு என்றொரு சொல்லைப் பல்லாண்டுகளுக்கு முன்னரே முன்வைத்திருந்தார் இராம.கி ஐயா. அவர் முன்வைக்கும் சொற்கள் சிலசமயம் ஆங்கிலச் சொல் ஒலிப்புக்கு நெருக்கமாக இருப்பதையொட்டிச் சிலர் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், பிற தமிழ்ச்சொல் மூலங்களிலும் வேர்களிலும் இருந்து அவர் அவற்றை வருவித்துக் காட்டும்போது அவற்றில் பிடித்தவற்றை ஏற்றுக் கொள்வதில் எனக்குச் சிக்கலில்லை. பொரிம்பும் அப்படியான ஒன்றுதான்.

clip_image001

பொரித்தல் என்னும் வினை தமிழில் தீயிலிட்டோ, சூடுவைத்தோ, வறுத்தோ செய்யும் ஒரு செயலைக் குறிப்பது என்பது நமக்குத் தெரிந்ததே. பொரிகடலை, பொரியல், பொரித்த குழம்பு, பொரிக்கும் வெய்யல், சுட்டுப்பொரித்தது, என்று அளவற்ற காட்டுகளைப் பார்க்கலாம். Branding என்பது அக்காலத்தில் குதிரை, எருமை, மாடு முதலான விலங்குகளின் உரிமையாளர், தனது உரிமையின் அடையாளமாக இரும்புக் கம்பியைச் சூடாக்கி அதன் மூலம் அவற்றின்மேல் ஏற்படுத்தும் ஒரு குறி அல்லது தழும்பைக் குறித்ததே. பின்னர், வணிக நிறுவனங்கள் தமக்குரிய ஒரு முத்திரை, சின்னம் அல்லது தனித்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள உருவாக்கிக் கொண்ட ஒரு குறி, பெயர், எழுத்துரு, வண்ணம், அல்லது அனைத்தும் சேர்ந்த ஒரு கலவையை brand, branding என்று அழைத்தனர். சூட்டுத் தழும்பு >>பொரித்தழும்பு என்று கொண்டு அதைச் சுருக்கிப் பொரிம்பு என்கிறார் இராம.கி.

நிற்க. பொரிம்பின் பொருத்தப்பாட்டைப் பற்றிப் பேசுவதல்ல இப்பதிவின் நோக்கம். Brand = பொரிம்பு என்பது இன்றைய சில இணைய அகரமுதலிகள் வரை போய்ச்சேர்ந்திருக்கிறது. வலியது நிலைக்கும். ஆனால், இன்று இப்பதிவு பேச விழைவது, பிறமொழிகளில் வழங்கப்படும் வணிகப்பெயர்கள், பொரிம்புப்பெயர்கள் ஆகிய இவற்றை தமிழில் நாம் எப்படி அழைப்பது என்பதைப் பற்றியது தான்.

பதிவுசெய்யப்பட்ட பிறமொழி வணிகப் பெயர்களை, நிறுவனங்களின் பெயர்களை, அல்லது அவர்களின் புதுக்குகளின் பெயர்களை, அப்படியே அவற்றின் ஒலிப்பு மாறாமல்தான் எழுதவேண்டும் என்பது ஒரு பார்வை. ஏன்! ஏறத்தாழப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர், அறியாத வயதில் (!) நானே கூட அப்படியான எண்ணம் கொண்டிருந்தவன் தான். காட்டாக, "தயவுசெய்து யூனிகோடு என்னும் சிறப்புப்பெயரை ஒருங்குறி என்று தமிழாக்க வேண்டாம்", என்று வலைப்பதிவில் எழுதியிருக்கிறேன்! (https://blog.selvaraj.us/archives/65). ஆனால், இன்று தமிழில் ஒருங்குறி என்னும் பெயர் வலுவாக நிலைத்துப்போன ஒன்று. நானும் அதனை ஏற்றுக் கொண்டு ஒருங்குறி பற்றிய வேறு பதிவுகளை அடுத்தாண்டுகளில் எழுதியிருக்கிறேன். (ஒருங்குறியில் தமிழுக்கான ஒதுக்கீட்டின் நிறை குறைகள் என்பன வேறு!).

கடந்து போன ஆண்டுகளின் பட்டறிவும், சான்றோரோடு உரையாடலும் பெயர்களைத் தமிழ்வழிப்படுத்துவதில் இன்று எனக்குச் சில தெளிவுகளைக் கொடுத்திருக்கின்றன. அது போன்ற வாய்ப்புகள் வாய்க்கப் பெறாததாலோ, தமக்கே எல்லாந்தெரியும் என்னும் இளங்குருதிப் பாய்ச்சலாலோ சில புதிய இணையத்தம்பிகள் தெளிவற்று அண்மையில் எழுதியிருந்தவற்றைப் படிக்க நேர்ந்தது. அறியாமை மட்டும் என்றால் கூடப் பரவாயில்லை. ஆனால், அதீதம், முட்டாள்த்தனம், கேலிக்கூத்து, பித்தலாட்டம் என்னும் சுடுசொற்களைப் பயன்படுத்திச் சாடியிருந்தது உவப்பானதாய் இல்லை. (அவர்தம் பதிவை இங்கே நேரடியாகச் சுட்டுவதைத் தவிர்க்கிறேன்).

Continue Reading »

Older Posts »