Mar 26th, 2005 by இரா. செல்வராசு
ஊரைச் சுற்றும் நகரப் பேருந்துகளில் ஏறி ஈரோட்டில் வலம் வந்தீர்களானால் பூங்காவின் சுவடே இல்லாத பன்னீர் செல்வம் பூங்காவை அடைவீர்கள் (எப்போதோ பூங்கா இருந்த இடத்தில் இப்போது ஒரு கட்டணக் கழிப்பிடம் மட்டுமே இருக்கும்). அதைத் தாண்டிச் சில நிமிடங்களில் “மணிக்கூண்டெல்லாம் எறங்குங்க” என்ற நடத்துனரின் குரல் கேட்டு இறங்கி ‘அங்கியும் இங்கியும் அன்னாந்து’ பார்த்தீர்களானால் மணியையும் பார்க்க முடியாது; ஒரு கூண்டையும் பார்க்க முடியாது. ஆனால் இங்கிலாந்தின் ஃப்ரொட்ஷம், செஸ்டர் போன்ற சிற்றூர்களில் நூற்றாண்டுக் கட்டிடங்களாய் இருந்தாலும் சரி, குறுஞ்சாலையிடைச் சிறு தூண்களாய் இருந்தாலும் சரி, அங்கு பொருத்தப் பட்டிருக்கும் கடிகாரங்கள் இன்னும் சரியாக வேலை செய்து மணி காட்டிக் கொண்டிருக்கின்றன.

நிற்க. இதை எழுதி முடித்த பின் ‘மணிக்கூண்டு’ என்றால் என்ன என்று சந்தேகம் வந்துவிட்டது. உயரக் கட்டிடம் ஒன்றில் மாட்டி வைத்திருக்கிற கடிகாரமா? நீதிகேட்டு மக்கள் அடிக்கவென்று மன்னராட்சிக் காலத்தில் கயிறுகட்டி வைக்கப்பட்ட பெருமணியா? மாடு வந்து மணி அடித்த கதைத்தனமாக இருப்பதாலும், ‘கடலோரக் கவிதை’யாய் ஈரோடு இல்லை என்பதாலும், மணிக்கூண்டு என்பது இரண்டாவதன் பொருளாய் இன்றி மணி பார்க்கும் கூண்டாக – ஒரு கடிகாரச்சுவராகத் – தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்கிறேன்.
Continue Reading »
Posted in பயணங்கள் | 1 Comment »
Mar 22nd, 2005 by இரா. செல்வராசு
“சும்மா வந்த மாட்டப் பல்லப் புடிச்சுப் பாத்தவன்” கதையாய் எனது முந்தைய இணையதளச் சேவை நிறுவனத்தார் சொல்லாமல் கொள்ளாமல் பெரிய நெற்றிப் பட்டையாய் கூகிள் விளம்பரத் தட்டி வைக்கத் தொடங்கியது பிடிக்காமற் போயிற்று. இலவசமாய்ச் சேவை கொடுக்கிற எங்களுக்குத் தள மாற்றங்கள் செய்ய உரிமை இருக்கிறது என்று தான்தோன்றித்தனமாக அவர்கள் நடந்து கொள்ள, இணையம் ஒரு சுதந்திரமான இடம், நான் வேறிடம் பார்த்துக் கொள்கிறேன் போ என்று மாறிவிட்டேன். அந்த விளம்பரத் தட்டியைத் தூக்கி எறியக் கேட்ட காசு அதிகமில்லை. மாதம் ஒரு டாலர் தான். ஒருவேளை அவர்களுக்கு அதைத் தந்துவிட்டு அதே விளம்பரப் பலகையை நானாக வைத்திருந்தால் அந்தக் காசை ஈட்டி இருக்கலாமோ என்னவோ. இருந்தாலும் முன்னறிவிப்பின்றி அவர்கள் அப்படிச் செய்தது ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கவில்லை. அதே நேரம் விருப்பம் இருந்தால் மட்டும் காசு கொடுங்கள் என்று சொல்லி அருமையான சேவையை வழங்கி வருகிற ஜேடியின் வெப்லாக்ஸ் தளத்திற்கே மீண்டும் வந்துவிட எண்ணிவிட்டேன். சென்ற ஆண்டு இங்கே தான் வலைப்பதிவை வைத்திருந்தேன். இப்போதும் கட்டணம் ஏதும் தரவேண்டியதில்லை என்றாலும் நல்ல சேவையை வழங்கி வருகிறவருக்கு ஊக்கமளிக்கும் வண்ணமாக இவருக்கு ஒரு பே-பால் எள்ளுருண்டை வழங்கலாம் என்றிருக்கிறேன்.
Continue Reading »
Posted in இணையம், கணிநுட்பம் | 1 Comment »
Mar 3rd, 2005 by இரா. செல்வராசு
இரண்டு நாளாய் மீண்டும் பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் க்ளீவ்லாண்டுப் பகுதியில் இருந்து வருபவனுக்கு இங்கிலாந்தின் பருவநிலை அப்படியொன்றும் குளிரைத் தரக் கூடாது. ஆனால், கடுங்காற்று வீசிக் குளிரை அதிகப் படுத்தியதால் எப்போதும் முக்காட்டைப் போட்டுத் தலையை மூடியபடியே தான் சென்று கொண்டிருந்தேன். இந்தக் குளிரிலும் தலையை மொட்டையடித்துக் கொண்டு நடப்பவர்களைப் பார்த்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
பொது இடமென்றும் பாராமல் மேலை நாட்டுக் காதலர்கள் கட்டிப் பிடித்துக் கொள்வது புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது! பாவம், குளிருக்கு இதமாய் இருக்குமாய் இருக்கும் ( 🙂 ). காதலனோடு இல்லாத இளம் பெண்கள் காதருகே ஒரு கைவைத்துச் செல்பேசியில் பேசிக் கொண்டு, மறுகையில் ஏதேனும் பை வைத்து ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். உடல்வடிவு பற்றிய தன்னுணர்வும் கவலையும் இன்றிப் பெண்கள் பெருந்தொப்பை வெளியே தெரிய உடையணிகிறார்கள்.
துணிவாங்கும் கடையில் பணிப்பெண்ணொருவர் நெஞ்சில் கடைப்பெயர்ப்பலகை குத்தியிருந்த இடத்தருகே ஒற்றைச்சாவி தொங்க விட்டிருந்தார். எதற்கென்று கேட்க எண்ணிப் பின் தெரியாத ஊரில் தர்ம அடி வாங்கவேண்டாம் என்று வந்துவிட்டேன்!
Continue Reading »
Posted in பயணங்கள் | 5 Comments »
Mar 2nd, 2005 by இரா. செல்வராசு
விமான நிலையத்தில் எனக்கு முன்னிருந்த பல பேர் ஆறேழெட்டடி உயரப் பைகள் வைத்திருந்தார்கள். பனிச்சறுக்கு உபகரணங்களை எடுத்துக் கொண்டு விடுமுறைக்குப் போகிறவர்களாய் இருக்கும். பக்கத்து இருக்கைக்காரர் கூட ‘எல்.ஏ’ சென்று அங்கிருந்து ‘ஹவாய்’ செல்கிறாராம். அவர் இருக்கும் இடத்தில் நிறையப் பாகிஸ்தானியர்கள் இருக்கிறார்கள் என்றார். இங்கிலாந்து முழுதுமே பாகிஸ்தானியர்கள் நிறைய இருப்பார்களோ? பங்களாதேசத்தவரையும் இவர்கள் பாகிஸ்தானியர்கள் என்றே சேர்த்து வழங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். என்ன மொழியில் எழுதுகிறேன் என்று கேட்டுத் தமிழைத் தெரிந்து கொண்டு தன் வாழ்க்கைக்கு ஒருநிமிடப் புண்ணியம் சேர்த்துக் கொண்டார்! 🙂
இங்கிலாந்தில் பணியிற்சேர்ந்த முதலாண்டே வருடத்திற்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொள்ளும் உரிமை உண்டு. பிறகு விடுமுறைக்கு வெளிநாட்டில் பனிச்சறுக்கப் போவதில் என்ன தயக்கம்? எனக்கு அதில் பாதியாகப் பதினைந்து நாள் விடுப்புரிமை பெறுவதற்கே இங்கே ஐந்து ஆண்டுகள் பணி பூர்த்தியாகி இருக்க வேண்டும். (வார இறுதியையும் சேர்த்து இந்தப் பதினைந்து நாளைக் கௌரவமாய் மூன்று வாரங்கள் என்று சொல்லிக் கொள்ளலாம்!). இதே நிறுவனத்தில் இன்னும் மூன்றரை மாதங்கள் கழிந்தால் நான் அந்த இலக்கை எட்டி விடுவேன்.
பவுண்டுக்கு எதிராய் டாலரின் மதிப்புக் குறைந்து கொண்டிருக்கிற இந்நாட்களில் இங்கிலாந்தவருக்குக் சற்று வசதி தான். சமீப காலங்களில் விமானப் பயணமும் மிகவும் குறைந்த விலைக்கு வந்துவிட்டது. புதிது புதிதாய் ஐரோப்பியக் குறைந்த விலை விமானங்கள் (ரயன் ஏர், flybe, jet2.com, bmi baby, EUJet, GB Air) காளான்களாய் முளைத்ததில் ஏலம் போட்டு விற்காத குறையாய் 15 பவுண்டுக்கும் 19 பவுண்டுக்கும் மான்செஸ்டர்/லிவர்பூலில் இருந்து பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி என்று பல இடங்களுக்குப் போகச் பத்திரிக்கைகளிலும் செய்தித்தாள்களிலும் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். சற்றே யோசித்து அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு சுமாரான உணவகத்தில் ஒரு வேளை நல்ல சாப்பாடு சாப்பிட அதைவிட அதிகக் காசு வேண்டும்! ஒரு அரை மணி நேரம் அமெரிக்காவிற்குத் தொலைபேசினால் அதைவிடப் பல மடங்கு அதிகம் கொடுக்க வேண்டும்!
இந்தப் புதிய விமானங்கள் கொங்கு நாட்டுத் தனியார் உள்ளூர்ப் பேருந்துகளை நினைவுபடுத்துகின்றன (சென்னையில் எல்லாம் தனியார் ‘டவுன்பஸ்’ கிடையாதே!). ஒரு பேருந்து மட்டும் வாங்க முடிந்தவர் எல்லாம் தனி நிறுவனம் ஆரம்பித்து விடலாம்.
Continue Reading »
Posted in பயணங்கள் | 5 Comments »
Mar 1st, 2005 by இரா. செல்வராசு
சிகாகோ விமான நிலையத்தில் விறைப்பான குரலில் இம்மிகிரேஷன் (தமிழில்?) குடியேற்ற அதிகாரி ‘எவ்வளவு காலம் வெளியே போயிருந்தீர்’ என்று வரவேற்புத் தந்தார். மாற்றல் விமானத்திற்காகக் காத்திருக்கையில் தாமதமாகிவிட்ட முன்விமானத்தில் மாற்றிக் கொண்டதில் க்ளீவ்லாண்டிற்கு நினைத்ததை விட ஒரு மணி நேரம் முன்னரே வந்து சேர முடிந்தது. அகன்ற நெடுஞ்சாலைகளின் ஓரம் மிச்சமிருந்த பனியின் வெண்மையும், மேலெழும்பிய மணற்குன்றில் இலையிழந்த குச்சி மரங்களும் ஒரு பழகிய உணர்வைத் தந்தன. பலகாலம் இருந்து பழகிய ஊரும் நாடும் ஒரு சொந்தத்தைத் தருகின்றன என்று க்ளீவ்லாண்டுச் சாலைகளில் வாடகை வண்டியில் வீடு நோக்கிப் போகும் போது தோன்றியது. இங்கிலாந்தில் இருந்து என்ன, இந்தியாவில் இருந்து திரும்பி வரும்போதும் இந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
bmi விமானப் பயணம் இனிதாகவே இருந்தது. காலை நன்கு நீட்டி வைத்துக் கொள்ள இடமிருந்தது. கேட்காமலே படிக்கப் பத்திரிக்கையும், புட்டிகளில் தண்ணீரும் கொடுத்தார்கள். சிக்கன் குருமா சாப்பாடும் நன்றாகவே இருந்தது. ஒவ்வொரு இருக்கையின் பின்னாலும் ஒரு காட்சித்திரை வைத்திருக்கிறார்கள். ‘இந்தப் படத்தைத் தான் நீ பார்க்க வேண்டும்’ என்று கட்டாயப் படுத்தாமல் ஏழெட்டுப் படங்களை வெவ்வேறு அலைவரிசைகளில் போட்டு ‘எதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்’ என்கிறார்கள். ‘விமான ஓட்டியின் பார்வையில்’ என்று படக்கருவி வைத்து அங்கிருந்தும் சலனப் படம் காட்டுகிறார்கள். வெறும் மேகக் கூட்டங்களைப் பார்ப்பதில் என்ன பலனோ? ஒருவேளை ஏறு இறங்கு முகத்தில் தெரியும் காட்சிகள் நன்றாக இருக்கலாம்.
மான்செஸ்டர் விமான நிலையத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது அந்தக் குழந்தையைப் பார்த்தேன். ஒன்றரை இரண்டு வயதுக்கு மேல் இருக்காது அவளுக்கு. வெளியூர் செல்லவிருந்த தன் தந்தையின் கால்களைக் கட்டிக் கொண்டும் சுற்றிக் கொண்டும் இருந்தது. அவரின் முழங்கால் உயரமே இருந்த அவளது பிஞ்சுப் பாதங்களில் குட்டியாய் கருப்புப் பாத அணிகள். மிருதுவான நிறத்தில் உடையணிந்து உயிருள்ள ஒரு பொம்மைக் குட்டியாய் எந்தத் தயக்கம், பயம், கலக்கம், இலக்கு, எதுவுமின்றி அங்கும் இங்கும் அலைந்தபடி திரிந்து கொண்டிருந்தது. நிமிடத்திற்கு ஒருமுறை ‘ஆன்யா… ஆன்யா…’ என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தபடி அவளது அம்மா ஓரத்தில் அசதி களைய அமர்ந்திருந்தார். அருகே வயதிற் சற்றே பெரியவனாய் ஒரு பையன். இரு சிறு குழந்தைகளைப் பெற்று அவர்கள் அலைகிற பக்கமெல்லாம் சதா கவனத்தையும் பார்வையையும் வைத்திருக்க வேண்டிய அம்மாக்களுக்கு நிச்சயம் ஓய்வு தேவை தான்.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | 5 Comments »