Feed on
Posts
Comments

எவ்வளவு முறை பார்த்தாலும் மீண்டும் சுண்டி இழுக்கிற படம். அருமையான கதை. படப்பிடிப்பு. எல்லா அம்சங்களும் நிறைந்த உணர்ச்சி பூர்வமான சித்தரிப்பு. பார்த்து முடித்த பிறகும் நீண்ட நேரம் ரீங்காரமிட்டுக் கொண்டு நெஞ்சில் நீங்காதிருக்கும் இனிய இசையும் பாடல்களும். நடிக நடிகையர் எல்லோருடையதுமான அளவான நடிப்பு.

இது விமர்சனமோ சிறுகுறிப்போ கதைச்சுருக்கமோ எல்லாம் கலந்த என்னவோ ஒன்று. சில மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தொலைக்காட்சி நிலையம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட இந்த அருமையான படத்தை மீண்டும் பார்க்க நேரிட்டபோது எழுத ஆரம்பித்த பதிவு இது. எனது சுறுசுறுப்பில் சுமார் நான்கே மாதத்தில் வெளிவருகிறது!!

Picture Courtesy: http://en.panoramatours.com/soundofmusic/julie.htm

ஆஸ்திரிய நாட்டுப் பின்புலத்தில் அமைந்த கதை. படத்தின் நாயகன் வான் டிராப் மனைவியை இழந்து ஏழு குழந்தைகளைத் தானே தனியாக வளர்க்கும் ஒரு ஓய்வுபெற்ற கடற்படைத் தலைவன். வீட்டில் கண்டிப்பும் கறாருமாக ஒரு படையைப் போல நடத்துவதும், விளையாட்டிற்கெல்லாம் நேரமில்லாமல், எப்போதும் ஒழுக்கமாக இருப்பதே முக்கியம் என்று வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காத ஒரு கண்டிப்பான தளபதி. குழந்தைகளை வளர்க்க, பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேடி அருகில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு ஆள் அனுப்புகிறார். துறவறம் மேற்கொள்ளப் பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் மரியாவை வாழ்வனுபவம் பெற்று வா என்று அங்கு அனுப்பி வைக்கிறார் தலைமைப் பெண்.

மரியா… ஜூலி ஆண்ட்ரூஸ்’ற்காகவே அமைந்தது போன்றவொரு இனிமையான பாத்திரம். எப்போதும் உற்சாகமும் துள்ளலும் நிறைந்த ஒரு சுதந்திரப் பறவை அவர். ஆஸ்திரிய நாட்டுப் பனிமலைப் பிரதேசங்களின் பின்னணியில், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பசும்புல் தொடர்வெளிகளில் உற்சாகமாகப் பாட்டுப் பாடி இயற்கையை ரசித்திருக்கும் காட்சியில் நமக்கு அறிமுகமாகிறார். சிறு நீர்த்தேக்கங்களில் கல்லெறிந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டு போகிறார். பசுமையின் இடையே நீர்நிலைகளின் கரையிலே கட்டப்பட்ட மாட மாளிகைகள் கூட அழகு நிறைந்து ஒரு மாயையை உண்டாக்குகிறது.

“மரியா போன்ற சிக்கல் தீர்ப்ப தெப்படீ ?
நிலவின் ஒளியைக் கையில் அடைப்ப தெப்படீ ? ”

Continue Reading »

பொதுவாய்க் குளிர்காலத்தின் உச்சம் என டிசம்பர், சனவரி மாதங்களில் பனிமழைப் பொழிவுகளைப் பார்ப்பது வழக்கம். அதற்கு முன்னும் பின்னும் இரண்டு மாதங்கள் என்று கொண்டு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை க்ளீவ்லாண்டில் பனி என்பதும் கூடப் பழகிய ஒன்றே.

மார்ச் மாதத்தில் இருந்து இம்மி இம்மியாய் மேலேறும் வெப்ப நிலையில் கனத்த குளிராடைகளை விடுத்து சுமை குறைந்திருந்தன தோள்கள். வந்து கொண்டிருக்கும் வசந்தத்தின் அறிகுறியாய்ப் புள்ளினங்கள் அதிகாலையில் ட்வீட் ட்வீட்டிக் கொண்டிருந்தன. புல்வெளிகள் உறக்கம் கலைந்து எழுந்து மீண்டும் பசுமையைப் பூசிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. குளிர்காலச் சோம்பல்களை விடுத்து உயிருக்கே கொஞ்சம் ஊக்கம் வருவதாய்த் தான் இருந்தது.

April 24, 2005 - Snow1

இருந்தும் கிளீவ்லாண்டுப் பருவநிலையை அப்படியே நம்பிவிட முடியாது. இவ்வாரம் பனி வரும் என்று சொன்னபோது ஆச்சரியம் தரவில்லை. ஆனாலும் அரையடிக்குக் குவியும் வண்ணம் இவ்வளவு பனி வந்ததில் ஒரு வியப்புணர்ச்சி மேலிடுகிறது. நாள் பூராவும் இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிற பனியில் ஒரு ஞாயிற்றுச் சோம்பலாய் வீட்டினுள்ளேயே அடைக்கலம். வீட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்திருந்த அணிலொன்று பனியைப் பார்த்துப் புரியாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது.

Continue Reading »

வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வந்த பெரும்பான்மை இந்தியர்கள் சமீப ஆண்டுகளில் சொந்தமாய் வீடு கட்டிக் கொள்வது அதிகமாயிருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சியின் வேகம் குறையப் போவதில்லை என்று ஆய்வுகளும் புள்ளியல் கணக்குகளும் தெரிவிக்கின்றன. சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை வருடத்திற்குச் சுமார் 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று இவை அனுமானிக்கின்றன.

இந்த வளர்ச்சிக்குப் பல காரணங்கள். பொருள் நிலையில் மேம்பட்டுக் கொண்டிருக்கிற நடுத்தர வருக்கத்தினர், குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் கடன், கட்டும் வட்டிக்கு உண்டான வரிச்சலுகை, குறைந்து கொண்டிருக்கும் செலுத்தக் கட்டணம் (processing fee), கடனளிக்க ‘நீ முந்தி, நான் முந்தி’ என்று போட்டியிடும் வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள்… இப்படி.

வீட்டுக் கடன் என்பது நீண்ட காலக் கடன். ஆனால் இதுபோன்ற கடன்களை வைத்துக் கொள்வது இந்தியர்களுக்குப் பழக்கமில்லை என்பதால் பெரும்பாலானோர் விரைந்து கடனைக் கட்டி முடித்துவிட முனைகின்றனர். ஆனால் இப்போது கிடைக்கக் கூடிய வரிச் சலுகைகளை வைத்துப் பார்க்கும் போது அப்படி விரைந்து கட்டாமல், வாங்கிய காலம் வரை கட்டுவது சிறப்பாய் இருக்கலாம் என்று சில கருத்துக்கள் உலவுகின்றன.

அதே சமயம் பலவித சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தவித்துப் பின்விளைவுகளுக்கு ஆளாவோரும் உண்டு. வீணில் கடன் சுமையை பெரிதாக்கிக் கொள்வோரும் உண்டு.
Continue Reading »

இங்கிலாந்தின் ரயில் பயணங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. உலகிலேயே பெரிய நிறுவனமான “இந்திய ரயில்வே”விற்கு வித்திட்டவர்களின் நாட்டிலே கிழக்கு-மேற்கு ரயில்பயணத்திற்குப் பெரும் சிக்கல். மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரையோரம் இருக்கிற நண்பன் ஒருவனைச் சந்திக்க இரண்டு மூன்று இடங்களில் வண்டி மாற்றிச் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் இடையில் சந்திக்கவேண்டியிருந்தது. அதிலும் வார இறுதிகளில் சில பகுதிகளில் ரயில் நிறுத்தப் படும் என்று பாதி தூரம் ரயிலிலும் மீதி ஒரு பேருந்திலும் கொண்டுபோய் விட்டார்கள்!

பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் ஏறிக் கொண்டால் பரிசோதகரிடம் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். (பேருந்து நடத்துனரிடம் பெற்றுக் கொள்வது மாதிரி!). ஃப்ரொட்ஷம் மாதிரி சின்ன ஊர்களின் ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு வாங்கும் இடமே இல்லை. நிலையம் என்று சொல்லிக் கொள்ள ஒரு கட்டிடம், உட்கார இரண்டு பக்கமும் ஒரு மரப்பலகை, ஊர் பேரைச் சொல்ல ஒரு பலகை, மறுபக்கம் செல்ல ஒரு நடைப்பாலம் இவ்வளவு தான்.

Frodshom Railway Station

Continue Reading »

மீண்டும் ஒருமுறை இங்கிலாந்துப் பயணமாகச் சுருக்கமாய் ஒரு வாரம் சென்றுவிட்டுத் திரும்பி வந்து இரு வாரங்களாகி விட்டது. அதே வழியில் அதே விமானங்களில் பயணித்து அதே ஊருக்குச் சென்றாலும் இம்முறை சற்று வித்தியாசமாய் இருந்தது பயணம். உடன் இன்னும் இருவர். வாரம் முழுதும் அலுவலகத்தின் அதே கட்டிடத்தில் சந்திப்புகள்; அதே காலை உணவு; அதே மதிய உணவு. ஊர் திரும்புவதற்குச் சனி, ஞாயிறு, இரண்டு நாட்களுக்கும் இடையே விமானக் கட்டணத்தில் இருந்த நாலாயிரம் டாலர் வித்தியாசம் ஒரு நாள் அதிகம் தங்கிவிடச் செய்தது. கிடைத்த அந்த ஒரே நாளில் இம்முறை பார்க்கச் சென்ற ஊர் லிவர்ப்பூல்.

Beatles-Thanks https://i0.wp.com/www.magixl.com/caric./globe/beatles.gifலிவர்ப்பூல் என்றவுடனே பலருக்கும் உடனே நினைவு வருவது பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவினராகத் தான் இருக்கும். ஊருக்குள் நுழையும் போதே பீட்டில்ஸ் குழுவினரில் ஒருவரான ஜான் லென்னனின் பெயரை விமான நிலையத்திற்குச் சூட்டி இருப்பது கண்ணில் படும். இதில் இருந்தே இந்த ஊரினர் எந்த இடத்தில் இந்தக் குழுவினரை வைத்திருக்கின்றனர் என்பது புரியும். உலகப் புகழ் பெற்றிருந்த இந்தக் குழுவினரின் பாடல்களையோ பெருமைகளையோ அதிகம் அறியாத நான் இதற்கு மேல் எழுதுவது தவறு.

ஆல்பர்ட் டாக் (Albert Dock) என்னும் இடத்தில் The Beatles Story என்னும் காட்சியகத்தின் முன் நின்று கொண்டிருந்தபோது, பீட்டில்ஸ் பற்றி நினைவுகூர்ந்து என்னுடன் இருந்த இருவரும் மலரும் நினைவுகளாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். இடையில் நுழைந்து வேண்டுமென்றே,

“பீட்டில்ஸ் என்பது ஒருவகைப் பூச்சி தானே?” என்றேன்!

Continue Reading »

« Newer Posts - Older Posts »