Feed on
Posts
Comments

appaa.jpg
எனது பெரிய மகளின் (Kinder Garten) பள்ளியில் இன்று முதன் முறையாக ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு. நான் செல்லவில்லை எனினும் மனைவி கூறத் தெரிந்துகொண்டேன். எல்லா மதிப்பீடுகளிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றிருந்தாள் நிவேதிதா. வகுப்பிலேயே சிறப்பானவர்களுள் ஒருவராய் அடையாளம் காட்டப் பட்டிருக்கிறாள் என் மகள். நுழைவு மதிப்பீட்டின் போதே திறமையானவர்களுள் ஒருவர் என்று தனக்குச் சுட்டிக் காட்டப் பட்டதாகவும் வகுப்பில் இவளுக்குச் சுவாரசியக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குச் சொல்லப் பட்டதாகவும் ஆசிரியை கூறியிருக்கிறார். என் உள்ளத்தில் ஆனந்தம். பெருமை. பூரிப்பு.
Continue Reading »

ஆஸ்டின் பல்கலைக் கழகத்தில் எனக்கு எந்தவித வேலையும் இருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஒன்றரை நாள் ஆஸ்டின் பயணத்தின் போது கிடைத்த ஒரு மூன்று மணி நேர இடைவெளியில் அந்தப் பல்கலைக்கழகத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்ததன் பின்னணியில் எனது மனவிருப்பம் ஒன்று காரணமாய் இருந்தது. அங்குள்ள ஒரு நூலகத்தில் அருந்தமிழைப் பார்க்க முடியும் என்னும் ஒரு சாத்தியத்தின் பேரில் ஏற்பட்ட ஒரு ஆவல் தான் அது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கக் கல்லூரி ஒன்றின் நூலகம் வழியாகத் தமிழ்ப் புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியும் என்று அறிந்து முயன்று சிலவற்றை (நூலக இடைப் பரிமாற்றம் – Inter Library Loan – வழியாக) வாங்கிப் படித்திருக்கிறேன். அந்தப் புத்தகங்கள் குறிப்பாகச் சிகாகோ மற்றும் ஆஸ்டின் பல்கலைக்கழகங்களில் இருந்து வந்திருக்கின்றன என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.

Continue Reading »

க்ளீவ்லாண்டில் இருந்து ஆஸ்டின் செல்லும் விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் மேகக் கூட்டங்களுக்கு மேலெழும்பிப் பறந்து கொண்டிருக்கிறது. சாளரத்தின் வழியே பிரகாசமாய்ச் சூரிய ஒளி சுள்ளென்று உள்ளே பாய்ந்து கொண்டிருக்கிறது. மேலே தெளிந்த நீல வானம், கீழே வெண்பஞ்சுப் பொதிகளாய் மேகக் கூட்டங்கள். விமானம் இன்னும் மேலே செல்லச் செல்ல அந்தப் பஞ்சுப் பொதிகள் வெகு தொலைவில் இப்போது மிருதுவாய் வெறும் அலைகளாகத் தெரிகின்றன.

இது வேறு உலகம். சிலுசிலுவென்று மழை தூறி மப்பும் மந்தாரமுமாய் ஒளி குறைந்து ஒரு உலகம் தரையளவில் கிடக்கிறது. அதே நிகழ்கணத்தில் மேலே, மேகங்களையெல்லாம் தாண்டி உன்னதமான ஒரு உலகம் இங்கே ஒளி சூழ்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

சில நிமிடங்களுக்கு முன் பின்னிருக்கைக் குழந்தை ஒன்று “ஆ…ஊ..” என்று ஆனந்த ராகமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது அதன் சத்தத்தைக் காணோம். காதிலே நிறையும் பறக்கும் விமான இயந்திர ஒலி தாலாட்டாகித் தூங்க வைத்திருக்கும்.

நேற்றிரவு நான் வீட்டுக்குச் செல்லும் முன் நந்திதா தூங்கியிருந்தாள். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப வழக்கத்தை விடத் தாமதம் ஆகியிருந்தது. “அப்பா எங்கே அம்மா ?” என்று கேட்டபடி தூங்கியிருக்கிறாள் பாவம். பெரியவள் நிவேதிதா மட்டும் அப்பாவிற்குக் “குட் நைட்” சொல்ல வேண்டும் என்று கண் விழித்தபடி இன்னும் உறக்கத்தைத் தள்ளி வைத்துக் கொண்டிருந்தாள். அள்ளி அரவணைத்தபடி சொன்னேன்,

“அப்பா நாளைக்கு ஊருக்குப் போறேன் செல்லம்”.

Continue Reading »

சில வாரங்களுக்கு முன் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பலவற்றைப் பற்றி பத்ரி ஒரு நல்ல கட்டுரை எழுதி இருந்தார். முறைசாரா நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சீட்டு, பைனான்ஸ் நிறுவனங்கள் முதலிய பல நிறுவனங்களைத் தொட்டுச் சென்றிருந்தார். ஒரு சீட்டு நிறுவன நிர்வாகத்தில் சில காலம் சிறு பங்காற்றி இருக்கிற அனுபவத்தில் அவற்றில் சிலவற்றைப் பற்றி என்னுடைய சில கருத்துக்கள். குறிப்பாகச் சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள் பற்றி.

சமீப ஆண்டுகளில் சில சீட்டுக் கம்பெனிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் கெட்ட பெயர் வாங்கிய காரணத்தால், பல நல்ல நிறுவனங்களும் இன்று சீரிழந்து கிடக்கின்றன. வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பொதுவாகவே பொருளாதாரத்திற்கு உதவியிருக்கிறது என்பதை ஒரு பக்கம் ஏற்றுக் கொண்டாலும், இன்னொரு வகையில் தனிமனிதப் பொருளாதார ஒழுங்கீனத்திற்கும் அது வித்திட்டு இருக்கிறது. பொருளாதார நிலையில் கீழ்த்தட்டில் இருக்கிற மக்களுக்கும் கூட முதலுக்கு இவை வழி வகுத்தன என்பது உண்மை தான். தெரு முக்கில் பெட்டிக் கடை வைத்து வெற்றிலை-பாக்கு, பீடி-சிகரெட் விற்றுக் கொண்டிருந்தவர், தினமும் பத்து ரூபாய் அளவில் சீட்டுப் போட்டு, காலப்போக்கில் பெரிய கடைக்குச் சொந்தக்காரராகி, இன்னும் பெரிய சீட்டுப் போட்டு அதில் கிடைத்த முதலை வைத்து ஓட்டல் ஒன்றை ஆரம்பிக்கும் அளவிற்கு வளர்ந்திருந்ததைக் கண்டிருக்கிறேன். ஒரு கட்டாயச் சேமிப்புத் திட்டம் போல் செயல்பட்டு இது பலருக்குப் பெரும் பயன் தருவதாய் இருந்தது.
Continue Reading »

கூட்டம் கூட்டமாய் வௌவால்கள் தொங்கும் மரத்தை அங்கு மட்டும் தான் பார்த்திருக்கிறேன். கோடந்தூர் ராசாக் கோயிலைச் சிலர் வௌவால் கோயில் என்று கூறும் அளவிற்கு அது பிரபலம். யாரோ ஒரு முறை கல்விட்டு எறிய, கோபங்கொண்ட வௌவால்கள் வேறிடம் எங்கோ சென்று விட, பிறகு ஊர் மக்கள் மங்கல இசை முழங்கக் கூட்டமாய்ச் சென்று, சீர் செய்து அப்பறவைகளை மீண்டும் வருமாறு வருந்தி அழைத்து வந்தார்கள் என்று ஒரு பேச்சு வழக்குக் கதை கூட இருக்கிறது. அது தவிர ஏன் அந்த இடத்தில் அந்த மரத்தில் மட்டும் அத்தனை வௌவால்கள் என்று எனக்கும் புரிந்ததே இல்லை.

“நம்ம ராசாக்கோய(ல்) கும்பாபிசேவம் ஆவணி மாசத்துல வச்சுருக்காங்க. நம்ம பங்குக்கு ரெண்டு ட்யூப் லைட் போட்டுத் தரோம்னு சொல்லி இருக்கோம்”.

தொலைபேசியில் அம்மா கூறியபோது, எங்கள் குலதெய்வம் கோயிலில் பார்த்த குழல் விளக்குகளும் பிறவும் கண் முன் விரிந்தன. சிவப்பு வண்ணத்தில் கொட்டை எழுத்தில் உபயம் போட்டு, இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த இந்த ஊர்க்காரர் பேரனும் இவரின் மகனுமான இவர் வழங்கியது என்று பட்டையடித்திருக்கும் பலகைகளைக் கண்டு முன்பும் யோசித்திருக்கிறேன். இவற்றின் நோக்கம் கோயில் சேவையா, சுயவிளம்பரப் படுத்திக் கொள்ளலா என்று.
Continue Reading »

« Newer Posts - Older Posts »