Jul 9th, 2005 by இரா. செல்வராசு
நுகர்வோர் சேவையில் நாம் போக வேண்டிய தூரம் வெகுதூரம் என்று பலமுறை நினைத்துக் கொள்கிறேன். அது மீண்டும் ஒருமுறை இந்தியா வந்த முதல் நாள் இரவு இரண்டு மணிக்கு எங்கள் நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில் என்னைப் பார்த்துத் தூக்கக் கலக்கத்தில் கேட்டது.
“என்னங்க, தனியாள் தானே வருவதாய்ச் சொன்னாங்க. ஒரு குடும்பமே வரும்னு யாரும் சொல்லலையே?”
இத்தனைக்கும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை. தொலைபேச்சுக்கள். ஏற்பாடுகள். மின்மடல்கள். கையொப்பங்கள். “நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். எல்லாம் நாங்க பாத்துக்கறோம்” என்று யாராவது சொன்னால் உடனே கவலைப்படுங்கள். தலைமாட்டில் மூவரும், மகள்களின் கால்மாட்டில் இருந்த இடத்தில் குறுக்கிக் கொண்டு நானும், குறுக்கும் நெடுக்குமாய்ப் படுத்துறங்க முயன்ற அனுபவத்தில் சொல்கிறேன். உணவு பற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டைத் திறந்துவிட்டுவிட்டு அவர் போய் படுத்துக் கொள்ள விடியற்காலையில், உறக்கம் வராமல் பசி எடுத்தது. புலி பசித்தால் பிள்ளைகளுக்கு விமானப் பயணத்தில் சாப்பிட வைத்திருந்த கேரட் துண்டு மிச்சங்களையும், மிக்சர் பொட்டலத் துகள்களையும் கூடச் சாப்பிடும் என்று அறிக.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | 6 Comments »
Jul 8th, 2005 by இரா. செல்வராசு
மூன்று நாட்களாக மட்டுமே ஒரு ஊரில் இருப்பவர்கள் அந்த ஊரைப் பற்றி எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் இருந்தால் முதலில் என்னைத் தான் பிடித்து உள்ளே தள்ளுவார்கள். அப்படி ஒன்றும் இல்லாத காரணத்தால் பெங்களூர் பற்றிய சில அனுபவ மற்றும் எண்ணக் குறிப்புகள்.
பெங்களூரின் சர்வதேச விமான நிலைய அனுபவம் வழமைக்கு மாறாய் இனிமையாய் இருந்தது. சரியாகப் படிவங்கள் பூர்த்தி செய்யாது வரிசையில் நின்ற போதும் குடிவரவு அதிகாரிகள் முறைப்புக் காட்டாமல் பொறுமையாய் இருந்தார்கள். வெளியே வந்தபின் உள்ளனுப்பிய பெட்டிகளுக்காகக் கால்கடுக்க நின்ற முன் அனுபவங்கள் போலன்றி, பெட்டிகளை ஏற்கனவே வெளியே எடுத்துத் தயாராய் வைத்திருந்தார்கள். சுங்க அதிகாரியின் நியாயமான சில கேள்விகளுக்குப் பிறகு வெளியே வந்தவர்களைப் பெங்களூரின் இளம்பெண்கள் இருவர் எதிர்கொண்டு மலர் கொடுத்து வரவேற்றார்கள். அது பிளாஸ்டிக் பூ தான் என்றாலும், ஏதோ குழந்தையர் உலகம் (கெம்ப் கிட்ஸ்) குறித்த வணிக விளம்பர நோக்கில் அமைந்திருந்தாலும், அது ஊருக்கு வருபவர்களை எல்லாம் இன்முகத்தோடு வரவேற்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. மொத்தத்தில் அடுத்த முறையும் பெங்களுர் வழியாகவே வரலாமே என்று யோசிக்க வைத்தது.
நெரிசலில்லாத நள்ளிரவில் ம.கா.சாலையில் சிலுசிலுவென்று இளங்காற்று முகத்தைத் தழுவ, சாலை விளக்குகளின் பொன்னொளியோடு கலந்து தலையசைத்த பச்சை மரங்களைப் பார்த்தபடி சிற்றுந்தில் சென்ற முதல்க் கணங்களிலேயே இந்த நகரத்தோடு காதல் கொண்டேன். சிற்றுந்து ஓட்டுனர்கள் (பொதுவாகவே எல்லா ஓட்டுனர்களும்) எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறார்கள் என்று இந்தச் சில நாட்களிலேயே உணர முடிகிறது. சிறு சந்து பொந்துகளிலும், நிறுத்துமிடங்களிலும் ஒடித்து வளைத்து அவர்கள் ஓட்டிவிடும் லாகவம் தனி.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | 13 Comments »
Jul 1st, 2005 by இரா. செல்வராசு
ஒரு நீல வண்ணக் கட்டியை எடுத்து நந்திதா படம் வரைந்திருந்தாள். எலிக்குட்டி நன்றாக இருக்கிறது என்று நல்ல வண்ணப் பேனா ஒன்றைக் கொடுத்து மீண்டும் வரைந்து தருமாறு கூறினேன். மீண்டும் வரைந்த எலியோ உட்கார்ந்து கொண்டது.

“இல்ல நந்து. எனக்கு அதே மாதிரி வேணும்”
இப்போது எலி எழுந்து நின்றது. இருந்தாலும் முதல் எலி மாதிரி இல்லை.

“நந்து. இதுவும் நல்லா இருக்கு. ஆனா எனக்கு இன்னொன்னும் வேணுமே”
இது உங்களுக்கு; இது அம்மாவுக்கு; இது சகோதரிக்கு என்று, கேட்கிறோமே இல்லையோ எங்கள் வீட்டில் நிறையப் பட விநியோகங்கள் நடைபெறும். இன்று அப்பா கேட்டு வாங்கிக் கொள்கிறார் என்று சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.
மூன்றாவது எலி வந்தது. இது கொஞ்சம் கூன் போட்டுக் கொண்டதா? இல்லை, நாங்கள் ஊருக்குப் போகிறோம் என்று ‘டாட்டா’ காண்பிக்கிறதா?
“ஆறு மாசம் பெங்களூர் போறோம். டாட்டா”

பெரிய காது வைத்து ஒரு நடன நிலையில் இருந்த அந்த முதல் நீல எலி போல இல்லையே என்று மீண்டும் ஒன்று கேட்டேன். உற்சாகத்துடன் போனவள் ‘இது சிறப்பான எலியப்பா’ என்று வந்தாள்.
“என்ன சிறப்பு?”
“இந்த எலிக்கு மட்டும் தான் மூக்கு இருக்கு. சிறப்பான எலி என்பதால் இது உங்களுக்கு இல்லை. தித்துவுக்கு (நிவேதித்தாவுக்கு)”

“ப்ளீஸ், ப்ளீஸ், எனக்கு இன்னும் ஒண்ணே ஒண்ணு. முதல் எலி மாதிரி வேணும்”
துள்ளலுடன் ஒரு எலிக்குட்டி மீண்டும் ஓடிப்போனது. அலுவலகத்தில் இருந்து கொண்டு வருகிற “ஒருபுறத் தாள்”கள் (ஒருபுறம் மட்டுமே அச்சடித்துக் குப்பையில் போகும் வீண் தாள்கள்) தாம் மொத்தமாய் வீண் போகவில்லையே என்று கொஞ்சம் மகிழ்ந்து கொள்ளும்.
ஐந்தாவது படத்துடன் ஓவியர் வந்தார்.
“அப்பா, என்னால் முடியாது. இது ஒரு சிறப்பான படம். ஒரு முறைக்கு மேல் அதே மாதிரி இதனை வரைவது என்னால் இயலாதது!”

எனக்குப் புரிந்துவிட்டது. இன்னும் எத்தனை எலிகள் வேண்டுமானாலும் எனக்குக் கிடைத்திருக்கும். அந்த முதல் நீல நிற எலி மட்டும் கிடைக்கப் போவதில்லை.
Posted in கண்மணிகள், வாழ்க்கை | 15 Comments »
Jun 30th, 2005 by இரா. செல்வராசு
உறங்காத ஓர் இரவில் வெளியே வந்தேன். பொன்னிற ஒளியிற் சந்திரன் குளித்துக் கிடந்தான். சந்திரன் ஆணா பெண்ணா? நிலவென்றால் பெண். சந்திரன் என்றால் ஆண்? ம்? அந்தக் கவலையெல்லாம் இன்றி ‘அது’ அதைச் சுற்றிக் கொண்டிருந்தது. சுற்றுவது அந்த நிமிடம் பார்க்கத் தெரிவதில்லை. சுற்றுகிறது என்பது கற்றது தானே. இங்கே கல்வி என்பது பார்த்து உணர்ந்து அறிந்தவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது. ஆனால் எல்லாக் கற்பிதங்களையும் ஏற்க இயலாமல் போகிறது. சிலவற்றைக் கட்டுடைக்க வேண்டியிருக்கிறது. கல்வி வேறு, கற்பிதம் வேறு.

கண் கொண்ட அளவு கருவி கொள்வதில்லை. ஆனால் நினைவை விடக் கோப்பு நிலையானது என்பது வேடிக்கையாய் இருக்கிறது. மறந்து போயிருப்பேன். ஆனால் கோப்பை வெட்டிச் செதுக்கி வடிவமைக்க, மீண்டும் நினைவில் சேர்ந்து கொள்கிறது இந்த நிலவு. அப்படியென்றால் மீண்டும் நினைவு தான் வெல்கிறதோ? கோப்பு ஒரு மீட்டுக் கொடுக்கும் துணை(வன்) மட்டுமோ?

இருட்டில் செடிகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தன. ஒளிபாய்ச்சி ஒரு படம் எடுக்கப் பளிச்சென்று பிரகாசிக்கும் இலைகள். இது செயற்கைத் தனமா? இல்லை இந்த ஒளியையும் வாங்கிக் கொள்ள முடிகிற இலைகளின் இயல்பென்று இதுவும் இயற்கையிற் சேர்த்தி தானா? பொன்னிற ஒளிச் சந்திரன், தூங்கும் இலைகள், கோப்பில் சிறை என்று தற்குறிப்பை மனிதன் ஏன் இயற்கை மீது ஏற்ற வேண்டும்? இவை கல்வியின் படிநிலைகளில் ஒன்று? கருத்துருவாக்கமும், கட்டுடைப்பும், மீண்டும் கருத்துருவாக்கமும் கட்டுடைப்புமாகக் கல்விப் பயணம் தொடர்கிறது. அது சுயமாய் இருக்கும் போது சிறக்கிறது. வெளியிருந்து வரும்போதும் யோசித்து ஏற்றுக் கொள்ள வேண்டியது முக்கியமாகப் போகிறது. அப்படி இல்லாத போது தலை சூடேறி அறிவு மயக்கமுற வைக்கிறது.
உறங்காத நிலவில் மனம் லயிக்கும் போது எல்லா இசங்களும் தளமுடைந்து போகும். போக வேண்டும்.
Posted in பொது | 11 Comments »
Jun 29th, 2005 by இரா. செல்வராசு
ரவி ஸ்ரீனிவாஸ், பத்ரி, வெங்கட் முதலானோர் ஒரு புத்தகப் பட்டியல் தரவுதளம் உருவாக்குவது பற்றிக் கருத்துக்களை எழுப்பியும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டும் இருக்கின்றனர். பலரும் இது போன்ற ஒரு வசதிக்காக ஏங்கி இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு நல்ல முயற்சி. கிடைக்கிற சில நேரத்தில் படிக்க நல்ல (தம் விருப்பத்திற்கேற்ற) புத்தகங்கள் தெரிவு செய்ய இது போன்ற ஒரு தரவுதளம் உதவும் என்பது உறுதி.
இப்படியான ஒரு பட்டியலுக்கும், தரவுதளத்திற்கும், விமர்சனங்களுக்கும் நானும் ஏங்கி இருக்கிறேன். அப்படி ஒன்றும் இல்லாத பட்சத்தில் நானும் ஒரு சிறு சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். பிரகாஷ் வழியாகத் தமிழ் வலைப்பதிவுகளுக்கு வந்த புத்தக மீம் (சங்கிலிச் சிந்தனைகள்) வழியாக வெளிப்பட்ட பட்டியலைச் சேர்த்து வைக்க ஒரு தரவுதளம் அமைத்து உள்ளிட ஆரம்பித்தேன். நேரமின்மையால் முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. ஒரு ஆரம்பநிலை வடிவை இங்கே பார்க்கலாம்.
Continue Reading »
Posted in கணிநுட்பம், பொது | 7 Comments »