Feed on
Posts
Comments

maandavan kathai (c) R.Selvarajநேற்று இரவு எட்டு மணிக்கு நான் செத்துப் போனபோது எனக்கு வயது நாற்பத்தியிரண்டு தான். நூறு வயது வரை வாழவேண்டும் என்று எண்ணியிருந்தேன். உட்கார்ந்த இடத்திலே வேலை, உட்கார்ந்தே கார்ப்பயணம், உட்கார்ந்தே தொலைக்காட்சி என்று ஊக்கமற்ற வாழ்க்கைமுறைக்கு ஒரு பத்துப் பன்னிரண்டு வருடம் குறைத்தாலும் எண்பத்தெட்டாவது பார்த்திருக்கவேண்டும். அதெல்லாம் இன்றி இப்படி அற்ப ஆயுளிலே சாவேன் என்று நினைக்கவில்லை. என்ன காரணமாய் இருந்து என்ன? ‘போய்விட்டேன்’. அவ்வளவு தான்.

கொஞ்சம் தனிமையாய் இருக்கிறது. இனி என்னவென்று யோசனையாய் இருக்கிறேன். கணக்குப் பார்ப்பதற்கோ தீர்ப்புச் சொல்வதற்கோ யாராவது வருவார்களா என்று சில மணி நேரமாய்ப் பார்க்கிறேன். ஒருவரையும் காணவில்லை. கடவுள் என்றாவது யாரேனும் வந்து அடுத்தது என்னவென்று சொல்வாரா என்றும் இருந்த ஓர் எதிர்பார்ப்பும் நேரம் ஆக ஆகக் குறைந்து கொண்டேயிருக்கிறது.

சாறிழந்த சக்கையாகி வெறும் சதைப்பிண்டமாய்க் கிடக்கும் உடலொன்றின் அருகே அவள் அமர்ந்திருக்கிறாள். வசந்தி! எனது பெயர் தான் இப்போது மறந்து போயிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் பழசு மறந்து கொண்டிருக்கிறது. இன்னும் அவளை மட்டும் மறக்க முடியவில்லை. இடிந்து போய் இருக்கிறாள். கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது. வேறு அரற்றலோ ஆர்ப்பாட்டமோ இல்லை. வசந்தி என்றும் இப்படித் தான். வெகு நிதானம். முன்பும் கூட ஒரு முறை… ஊஹும்… என்ன யோசிக்கிறேன் என்பது நினைவில் இருந்து நீங்கிவிட்டது போலும். அவளின் நிதானம் என்கிற பண்பு மட்டும் ஒரு விளக்கமாய் இருக்கிறது. கூடவே அவளை நினைக்கும்போதே ஒரு குளுமை கூடுகிறது.
Continue Reading »

“நூற்றாண்டுகளின் காயத்தழும்புகளைத் துடைத்தெறிய, ‘இதோ, இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; விரும்பும் தலைவரை ஏற்கலாம்’ என்று வெறும் வாயில் சொல்லிவிட்டுச் சென்று விட முடியாது. ஆண்டாண்டு காலமாகச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒருவனை விடுவித்துப் பந்தயத்தின் ஆரம்பக் கோட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு, ‘நீ பிறரோடு போட்டியிட இனித் தளையில்லை…போ!’ என்று சென்றுவிடமுடியாது. அப்படிச் சொல்லிவிட்டுப் பின்னும் முழு நயன்மையுடன் நடந்துகொண்டதாக நாமே நம்பிக்கொள்ள முடியாது. பொது (சிவில்) உரிமைக்கான போராட்டத்தில் இது அடுத்த கட்டமும் ஓர் ஆழ்ந்த கட்டமும் கூட. ஒடுக்கப்பட்டவர்களுக்காக நாம் தேடுவது ஒரு தளையற்ற நிலையை மட்டுமல்ல, மேலேறும் வாய்ப்புக்களையும் தான்; அவர்களின் சரிசம நிலையை ஒரு உரிமையாகவும் தேற்றமாகவும் மட்டும் கருதுவதல்ல, ஒரு உண்மையாகவும் நடைமுறை விளைவாகவும் தான்”

இது இந்தியச் சூழலில் கேட்கவேண்டிய குரல்களில் ஒன்றாகத் தோன்றினாலும், 1965ல் அமெரிக்க அதிபராய் இருந்த லிண்டன் ஜான்சன் ஒரு பல்கலைக்கழக உரையில் பேசியது. உலகத்தின் பழம்பெரும் மக்களாட்சி குமுகாயமான அமெரிக்காவிலும் வரலாற்று ஒடுக்குமுறைகளால் நிறைந்திருந்த ஏற்றத்தாழ்வுகளை நீக்க, அறுபதுகளில் எடுக்கப்பட்ட திட்டங்களின் பின்னணியிலேயே அவரது குரல் அப்படி ஒலிக்கிறது. 1961ல் ஜான் கென்னடி அதிபராய் இருந்தபோது ‘சம வேலை வாய்ப்புச் சட்டமும்’ (Equal Employment Opportunity), அதன்பின் 1964ல் லிண்டன் ஜான்சன் காலத்தில் பொது உரிமைச் சட்டமும் (Civil Rights Act) பேதமற்ற நிலையை அடைவதைக் குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. அந்த ஆண்டுகளில் தான் பாகுபாடற்ற குமுகாயத்தினை ஏற்படுத்த ‘உறுதியான செயல்பாடு’ (Affirmative Action) கைக்கொள்ள வேண்டும் என்கிற அமெரிக்க அரசின் நடவடிக்கைகளால் இனம், நிறம், மொழி, மதம், பால் போன்ற எல்லாப் பேதங்களும் தடை செய்யப்பட்டன.

உலகின் இருபெரும் மக்களாட்சிக் குமுகாயங்கள் என்று அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு கூட்டில் வருபவை என்பதால் அமெரிக்கக் குமுகாயத்தில் இருந்து சிலவற்றை அவதானிக்கலாம். ஒப்பிடலாம். ஒரு நேர்மையான குமுகாயத்திற்கு, மக்களாட்சி அரசுக்கு, பலவிதக் குறிக்கோள்கள் இருப்பது இயற்கையானது. சிலசமயம் அவை ஒன்றுக்கு ஒன்று சிறிது முரண்பட்டிருப்பதும் கூடத் தவிர்க்க முடியாதது. தகுதியும் தரமும் வாய்ந்தவர்களுக்கே முன்னுரிமையும் உயர்வும் என்பது ஒரு குறிக்கோள் என்றாலும், எல்லா சமூகத்தினருக்குமான சமநிலையை அடைய முற்படுதல் இன்னொன்று.
Continue Reading »

பூரண நிலவு மாலைக்குப் பொன்னிறம் பூசும் நாளொன்றில், கடற்கரை மணலில் மல்லாக்கப் படுத்துக் கிடக்கிறேன். இப்படித்தான் மனசு கிடந்து தவிக்கிறபோதெல்லாம் ஆறுதல் தேடி இந்த அலைகளைப் பார்க்க வந்துவிடுவதுண்டு. இனம்புரியாத, என்னவென்று சொல்லமுடியாத தவிப்பு என்று பலநாள் நாட்குறிப்பில் கூட எழுதி வைத்திருக்கிறேன். இதுபோன்ற நாட்களில், சில மணி நேரங்கள் கடற்கரைக் காற்றில் ஊறிப் பின் விறுவிறுவென்று வேகமாக மிதிவண்டியை விடுதி நோக்கிச் செலுத்துவேன். சீறிப் பாயும் இரத்தம் எல்லா கசடுகளையும் குழப்பங்களையும் கரைத்து விடும். ஹ்ம்… மனமென்பது சிந்தனைகளின் வடிவமென்கையில் எந்த நாளம் வழியாய் இரத்தம் அங்கு பாய்கிறது? தெரியவில்லை.

படுத்துக்கிடந்த என்னை மீண்டும் மீண்டும் முயன்று தீண்ட முடியாத அலைகள், ‘ஹோ’வென்ற இறைச்சலோடு காற்றில் கலந்து சாரல்களாய் என்னை வந்து அடைகின்றன. உப்புக்காற்றின் பிசுபிசுப்பு முகத்தில் படிய ஆரம்பிக்கிறது. எழுந்து ஒருமுறை முகத்தைத் துடைத்துக் கொண்டு இரு கைகளையும் பின்புறம் ஊன்றியமர்ந்து கடலைப் பார்க்கிறேன். ஆர்ப்பரிக்கின்றன அலைகள். இந்த அலைகளைப் போலத் தான். இன்றென்னவோ பெரும் பாடாய்ப் படுத்துகிறது இந்தப் பாழாய்ப் போன மனசு.

“டேய், உண்மையச் சொல்லுடா! நெசமாவே என்ன குழப்பம்னு புரியலியா?”

மனதுக்குப் பதில் சொல்லப் பிடிக்காமல் திரும்பிப் பார்க்கிறேன். என்னைச் சுமந்து கொண்டு வந்த மிதிவண்டி மட்டும் தூரத்தில் மௌனமாக நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சுண்டல் விற்ற சிறுவன் கூட மிச்சமிருந்த இரண்டு பொட்டலத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். சோடி சோடியாய் வந்தவர்கள் எல்லாம் திரும்பிச் சாலையை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கியிருந்தார்கள். அதில் சில பெண்களின் நீளக் கூந்தல் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த காட்சி எனக்கு மீண்டும் கவிதாவையே நினைவுக்கு மீட்டது.

“பாத்தியா… அவள் தானே காரணம்? அதை ஒத்துக்கக் கூட உன்னால முடியலியா?” இம்சைப் படுத்துகிறது மனது.

malar poo

Continue Reading »

பகுதி-1 |பகுதி-2 | பகுதி-3

வேதிப்பொறியியல் கோட்பாடுகளும் நுட்பங்களும் காரணமாக விளையும் இன்னும் சிலவற்றைப் பார்ப்போம். எண்ணெய் விள்ளெடுப்பு ஆலைகளில் தொடங்கிய பயணத்தைத் தொடர்ந்தால், பலவித வண்டிகள், ஊர்திகள், பறனைகள் இவற்றின் எரிபொருளைத் தருவது தவிர, இன்னும் பல வேதிப்பொருட்களுக்கு அவை ஆரம்பமாய் இருப்பது புலப்படும். பல்வேறு பாறைவேதி ஆலைகளுக்கு (petrochemical plants) மூலப்பொருட்கள் தருவனவாய் அவை அமைகின்றன. விள்ளெடுப்புக் கோபுரங்களின் உச்சியில் வெளிவரும் வாயுக்கள் வழியே தான் வீட்டில் சமையலுக்குப் பயன்படும் இழிக்கிய பாறைநெய் வாயு (LPG – அல்லது நீர்ம எரிவளி), இயல்வாயு (natural gas) முதலியன தயாரிக்கப் படுகின்றன.

Img courtesy: http://twilightglade.blogspot.com/2005_04_01_twilightglade_archive.html

அசிட்டிலீன், எத்திலீன், புரொப்பிலீன், போன்ற கரிம வேதிப்பொருட்களும், அதனைச் சார்ந்த பலமங்கள் (polymers) (பாலி-வைனைல்-குளோரைடு, பாலி-எத்திலீன், பாலி-புரொப்பிலீன், முதலியன) தயாரிக்கவும் ஆரம்பநிலை இயல்பொருட்கள் (raw materials) இந்த பாறைநெய் சுத்தகரிப்பு ஆலைகளின் வழியே தான் கிடைக்கின்றன. இந்தப் பலமங்களின் வழியாகக் கிடைக்கும் ஞெகிழிகளை (plastics) மட்டும் வைத்தே ஒரு பெரிய உலகம் இருக்கிறது.

காட்டாக, சதா செல்லமாய்ச் சிணுங்குகின்ற செல்பேசிகள் கூட எடை குறைவாய் ஆகிக் கொண்டிருப்பதற்கு அவற்றைத் தயாரிக்க உதவும் ஞெகிழிப் பொருட்கள் காரணம். மருத்துவத் துறையிலும் ஞெகிழிகளால் செய்யப்பட்ட தூம்புகள் (tubes) உடலினுள் உணவு, மருந்து, குளுக்கோசு முதலியன செலுத்தும் குழாய்களாகவும், ஊசிமருந்துக் குழாயாகவும் பயன்படுகின்றன. அங்கும் பிற இடங்களிலும் பயன்படும் கையுறைகளும், ரப்பர் விரிப்புகளும், இன்னும் பலவும் ஞெகிழிகளின் வழியே தான் கிடைக்கின்றன.

PVC hose

நீர்ப்பாய்ச்சலுக்குக் கூடப் பல இடங்களில் புழம்பாகப் (pipe) பயன்படுவது ‘பிவிசி பைப்பு’ என்று சுத்தத்தமிழில் (:-)) சொல்லப்படும் பாலி-வைனைல்-குளோரைடு என்னும் பலமமே. பொட்டலங்கட்டவும் பிறபயன்களும் கொண்ட ‘மழைக்காகிதம்’ என்று பொதுமையாகச் சொல்லப்படுகிற ‘பாலித்தீன்’ என்பதும் பாலி-எத்திலீன் என்கிற பலமமே.

கொங்குநாட்டிலே அதிகம்பேருக்கு ‘ழ’ தகராறு உண்டு. மழைக்காகிதம் பேச்சுவாக்கில் மலக்காய்தம் (!) ஆகிவிடும். சொல்லும்போதும் பேசும்போதும் அப்பகுதியிலிருந்து வந்தவனுக்கு வித்தியாசம் தெரிவதில்லை என்றாலும், அதை எழுதும்போது அடிப்பொருளே மாறி உறைக்கிறது. சற்றே உதைக்கிறது. இருந்தாலும், அந்தப் பொருளிலும் கிடைக்கும் ஒரு புதுக்கு (product) உருவாவதும் வேதிப்பொறியியல் முறையாலேயே! :-). மேலை நாடுகளில் அது ஒரு பெரிய வணிகம். அட! அதற்கும் கூட ஒரு தனி வலைத்தளம் வைத்து விற்று ஜார்ஜ் புஷ்ஷை வைத்துத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading »

பகுதி-1 | பகுதி-2 |பகுதி-3

வேதிப்பொறியியல் நுட்பங்கள் நமது அன்றாட வாழ்வை எப்படித் தொட்டிருக்கின்றன என்று பார்க்க, காட்டாக, நமது நாளொன்றைக் கருத்தில் கொள்வோம். காலை எழுந்து சற்றே சோம்பல் முறித்துவிட்டுக் குளியலறைக்குள் செல்வோம். அங்கே பல் துலக்கப் பயன்படுகிற பசையில்(பேஸ்ட்டு) இருந்து குளிக்கும் போது பயன்படும், சோப்பு, ஷாம்பூ, கண்டிஷனர், லோஷன் போன்ற சகல தைலங்களும் களிம்புகளும் வேதிப் பொருட்களே. வேதிப்பொறியியல் முறைகளில் தயாராவது தான். நல்ல மென்மையான துண்டில் ஈரத்தைத் துவட்டிக் கொள்கிறீர்களா? அதிலே அழகான படமோ, வடிவோ, வண்ணமோ இருக்கிறதா? அவற்றை உருவாக்கப் பயன்பட்ட சாயங்களும் வேதிப்பொருட்களே.

Consumer Products

தலைவாரப் பயன்படும் சீப்புக் கூட ஒரு ஞெகிழி (பிளாஸ்டிக்) – பலமர் (பாலிமர்) இவற்றால் செய்யப்பட்டிருக்கும். உடுத்திக் கொள்ளும் உடையில் வேதிநுட்பங்கள் சம்பந்தப் பட்டிருக்கும். அரையிறுக்கியும் (பெல்ட்), காலணியும், தோல் பொருளாய் இருந்தால் அந்தத் தோலைப் பதப்படுத்தித் தயாரிக்கவும், பலமர்/ஞெகிழியாய் இருப்பின் அதைத் தயாரிக்கவும் வேதிநுட்பங்கள் பயன்பட்டிருக்கும்.

காலையில் உட்கொள்ளும் உணவு முதல், நாள் முழுதும் உட்செலுத்தும் உணவு, தீனி, வெவ்வேறு வித பானங்கள் என்று எல்லாவற்றிலும் வேதிப்பொருளும் நுட்பங்களும் நிறைந்திருக்கும். உணவுச்செலுத்தத் தொழில்முறை (food processing industry) கூட வேதிப்பொறியியலின் ஒரு உட்பிரிவு தான். அதோடு நுகர்வோர் பொருட்கள் என்று வகைப்படுத்தப் படுகிற வாசனைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள், இதழ்_மை, கண்_மை போன்றவை, சோப்புக்கள், கழிவுக்காகிதங்கள், இவையெல்லாவற்றையும் தயாரிப்பதிலும் வேதிப் பொறியியல் சம்பந்தப் பட்டிருக்கிறது.
Continue Reading »

« Newer Posts - Older Posts »