Jan 1st, 2009 by இரா. செல்வராசு
“புத்தாண்டுக்கு என்ன தீர்மானம் பண்ணியிருக்கீங்க?” என்று சிலர் கேட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்.
“அந்த மாதிரில்லாம் தீர்மானம் பண்றதில்லைன்னு தீர்மானம் பண்ணியிருக்கேன்”, என்று அவர்களிடம் விளையாட்டாகச் சொன்னது கூடப் பழையதாகத் தெரிகிறது, இப்போதெல்லாம்.
தொடரோட்டத்தின் இடையே சில கணப்பொழுதுகளில், இருப்பு இருத்தல் குறித்த கேள்விகளும் அங்கங்கே சிலவற்றிற்கு அர்த்தம் தேடிக் களைப்பதும் திகைப்பதும் விடுப்பதுமாக நகருகின்ற நாட்களுக்கிடையே, புத்தாண்டு என்று ஒரு நாளில் மட்டும் சில தீர்மானங்களைச் செய்து கொள்வதென்பது, எனக்கு, இப்போது, சற்றே பொருள் குறைந்ததாகப் படுகிறது.
ஒரு நாள் தீர்மானங்கள் எனக்கு வேலை செய்வதில்லை. எனக்கு மட்டுமல்ல; பெரும்பாலும் யாருக்குமே அது வேலை செய்வதில்லை என்பதையே குமுக நிகழ்வுகள் செய்திகள் உணர்த்துகின்றன. அதற்குப் பதிலாக அவசர வாழ்வின் இடையே நிதானித்துச் சுய ஆய்வில் ஈடுபடும் நேரங்களைச் சற்றே அதிகரிக்கலாம். இருக்கும் நிலையை இனம் காணுதலே அடுத்துச் செல்லும் திசையையும் வேகத்தையும் தீர்மானிக்க உதவும். புத்தாண்டுத் தீர்மானம் என்பதும் அதற்கு உதவும் என்றாலும், வருடம் ஒருமுறை மட்டுமே செய்துகொள்ளும் ஆய்வுகள் பெரும்பயனைத் தருவதில்லை. தொடர்ந்த தீர்மானங்களும், முன்னேற்றங்களும் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும் அவற்றில் மிகுமத்தை எய்தக் குறி வைக்கலாம். விலகீடுகளில் தொய்வுறாமல், ஓய்வுற்று, மறுநாள் விடியலில் மீண்டும் மலரலாம்.
Continue Reading »
Tags: தீர்மானம், புத்தாண்டு, மகிழ்வு
Posted in வாழ்க்கை | 5 Comments »
Nov 17th, 2008 by இரா. செல்வராசு
சோதனைக்கு ரெண்டு அர்த்தம் சொல்லலாம். எதையாவது செஞ்சுட்டு அது வேல செய்யுதான்னு பாக்கறது ஒண்ணு. அட, இப்படி ஆயிருச்சேன்னு அலுத்துக்கறது ஒண்ணு. இன்னைக்கு ரெண்டு அர்த்தமும் பொருந்துனாலும், என்னவோ அலுத்துக்க வேண்டாமுன்னு தோணுது. அதனால இது மொத அர்த்த சோதனை தான்.
தூக்கத்தக் கெடுத்துக்குட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும், தூக்கங்கெட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்னு நெனைக்கிறேன்.
வர்ட்டுங்களா? அப்புறம் பாக்கலாம்.
Tags: test, சோதனை
Posted in இணையம், வாழ்க்கை | 4 Comments »
Oct 27th, 2008 by இரா. செல்வராசு
“தீபாவளியா? அது எப்பவோ வந்துட்டுப் போயிருச்சே”, என்று வீரப்பன் சத்திரத்துப் பேருந்து நிறுத்தத்தில் மூன்றாம் எண் நகரப் பேருந்து குறித்துப் பேசுவது போல, சலனமின்றிச் சென்றுவிட்ட புலம்பெயர் தீபாவளிகளும் பண்டிகைகளும் சில உண்டு. இந்திய, தமிழக மக்கள் நிறைய வசிக்கும் பெருநகர்க்குப் பெயர்ந்ததும், அதிகரித்த தொலைத்தொடர்பு, இணைய வசதிகளும் இப்போதெல்லாம் அப்படி முழுவதுமாய் மழுங்கடித்து விடுவதில்லை. ஏதோ ஒரு வழியில் ‘இந்த வாரம் தீபாவளி’ என்று முன்னதாகவே தகவல் வந்துவிடுகிறது. இருப்பினும் சக்கரத்துச் சுழற்சி போன்ற வாழ்வு முறையில் ஒரு உணர்வோடு முன்னதாகவே தீபாவளியைக் கொண்டாடுதல் பற்றி யோசனைகள் விடுபட்டுப் போய்விடுகின்றன.
எப்போதும் போல் அலுவம் செல்லும் முன் அவசரப் பார்வையிட்ட இணையத்தில் வெங்கட்டின் தீபாவளி நினைவுகள் சற்றே நிறுத்தி யோசிக்க வைத்தது. இது போன்ற பண்டிகைகள் நமது கலாச்சாரம், பழக்க வழக்கம் முதலியனவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் என்பதால், அவர்களுக்காகவேனும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணினாலும், அது குறித்த தீவிரமான சிந்தனை, திட்டங்கள் இன்றிப் போவதும், போனதை நினைத்துப் பேசுவதும், பேசுவதை விட்டுத் தள்ளுவதுமாய்ப் போகிறது காலம். கலாச்சாரம் என்பதும் கூடப் பெரிதாக ஒன்றுமில்லை; ஆனால் அதனூடான அடிப்படை இயல்பாக ஒரு இயந்திர வாழ்க்கையின் இடையில் உண்டாக்கிக் கொள்ளும் கொண்டாட்ட உணர்வும், ஆழ்மன உற்சாகப் புதுப்பித்தல் வாய்ப்பும் (நன்றி: வெங்கட்) பற்றிய அனுபவத்தை ஏற்படுத்தித் தரவேண்டும்.
மாலையில் மனைவியிடம் கேட்டேன், “நாம ஏன் தீபாவளிக்கு ஒண்ணும் பண்ணல?”
Continue Reading »
Tags: தீபாவளி, பண்டிகை, புதுத்துணி
Posted in வாழ்க்கை | 9 Comments »
Oct 25th, 2008 by இரா. செல்வராசு
From Tamilnation.Org:
The struggle for Tamil Eelam is about the democratic right of the people of Tamil Eelam to govern themselves in their homeland – nothing less and nothing more.
Voice on Wings: Eelam for Indians, Indians for Eelam
மனிதம் தொலைந்த தருணங்களில் இருந்து தலைமுறைகளைக் காப்போம்.
I urge the world to support the right to self determination of the Tamil People of Tamil Eelam in Sri Lanka, and to oppose the oppression, genocide and institutionalized terrorism by the Govt. of Sri Lanka.
Tags: Self Determination, Tamil Eelam
Posted in பொது | 4 Comments »
Oct 23rd, 2008 by இரா. செல்வராசு
பூச்சிகள் பற்றிய பாடம் அக்குவேறு ஆணிவேறாக இரண்டாம் வகுப்பில் எதற்குச் சொல்லித் தரப்படவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதும், வகுப்பறையில் வளர்க்கும் பூச்சிகளும், அவை பற்றி எழுதப்படும் புனைகதைகளும், பூச்சிகளுக்கும் அரக்னாய்டு எனப்படும் சிலந்தி, பூரான் வகையறாவிற்குமான வித்தியாசங்களும் நிச்சயமாய் எனக்குத் தேவையில்லை. ஆனால், இரண்டாம் வகுப்பில் படிப்பது நானல்ல. மகள். எதையேனும் கற்றுக் கொள்ளத் திரியும் வயது போல. சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்கிறார்கள். இவற்றைத் தெரிந்து என்ன செய்யப்போகிறார்கள்?
பூச்சிகளுக்கு என் வீட்டிலோ இடமில்லை. நினைவு தெரிந்த முதல் பயக்கனவு எனக்குப் பூச்சிகளோடு தான். இத்தனைக்கும் அவை என்ன அழகு என்று வியத்தகு பட்டாம்பூச்சிகள் தாம். அழகென்றாலும் இருட்டரையில் நூற்றுக்கணக்கில் உங்கள் முகத்தில் வந்து மொச்சினால், தூக்கத்திலென்றாலும் கத்தத்தானே செய்வீர்கள். சின்னதாய் இருந்தாலும் பறக்கத் தெரிந்த பூச்சிகள் என்னைவிடச் சக்திவாய்ந்தவை என்பது என் எண்ணம். அதனால், அவை ஏமாந்த சமயம் பார்த்து பழைய செய்தித்தாளோ, பிய்ந்த செறுப்போ அந்நேரம் எது கையில் கிடைக்கிறதோ அதனைக் கொண்டு ஒரு கொலை அங்கு நிகழும். ஆனால், கருணை இல்லாதவன் நான் என்று நினைத்துவிடாதீர்கள். அவற்றை ஒருபோதும் துடிதுடிக்க விடமாட்டேன். முடிந்தவரை உடனடி மரணமே. வீணாக ஒரு உயிரைக் கொள்ளும் குணம் என்னிடம் இல்லை. சொல்லப் போனால், மரணதண்டனையையே நான் எதிர்க்கத் தான் செய்கிறேன். ஆனாலும், எனக்கென்று வட்டம்போட்டு நான் அமைத்துக் கொண்ட இடத்தில் பூச்சிகளை வரவேண்டாம் என்று யாராவது சொல்லிவிடுங்கள். எல்லோரும் நிம்மதியாய் இருக்கலாம்.
பூச்சிகளைப் பற்றிய அறியாமை கூட அவற்றின் மீதான என் வெறுப்பிற்கும் பயத்திற்கும் காரணமாய் இருக்கலாம். என் பயத்தையோ வெறுப்பையோ பெண்களிடம் காட்டாதிருக்க முயல்கிறேன். தான் வரைந்த ஓவியங்களைக் கண் முன் கொண்டு வந்து காட்டி இடிக்கிறாள் மகள்.
“அப்பா, இது கிரிக்கெட் பூச்சி, இது தேனீ, இது லேடி-பக்…”
பார்த்து முடித்து மற்ற தாள்களோடு குப்பையில் தான் போகின்றன இவையும், அவசரமாக. “டே, நல்லா இருக்குடா…”.
ஆரம்பப் பள்ளியிலே எனக்குப் ‘பூச்சி’ என்று இன்னொரு பெயரும் இருந்தது.
* * * *
Tags: insect, பூச்சி
Posted in வாழ்க்கை | 4 Comments »