Jan 3rd, 2005 by இரா. செல்வராசு
ஒரு கிறித்துவப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற போது விவிலியம் கற்றிருக்கிறேன். பெரிதாய் ஒன்றும் நினைவில் இல்லை என்றாலும், “ஆதியிலே கடவுள் சொர்க்கத்தையும் பூமியையும் படைத்தார்” என்னும் ஜெனிஸிஸ் (1:1) வாசகம் மட்டும் மறவாதிருக்கிறேன். அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிகளும், இன்ன பிறவும் கடவுளின் இருப்பையே இப்போது கேள்வி கேட்க வைத்தாலும், அந்த நாட்களில் கடவுளின் குழந்தை கிறிஸ்து கட்டுத்தறியில் பிறந்தார் என்று நட்சத்திரங்கள் வழிகாட்டிய நாடகங்களில் மண்டிபோட்டுக் கொண்டு நடித்திருக்கிறேன்.
காணாமல் போன ஆட்டுக் குட்டியின் மீது அன்பு வைத்த ஆட்டு இடையன் கதையைக் கேட்டுக் கொண்டு, “கும்பாயா, ஓ மை லார்ட் கும்பாயா”, என்று கூட்டத்தோடு சேர்ந்து ஒருங்கிசைப் பாட்டுப் பாடியிருக்கிறேன். வெள்ளைப் பஞ்சைத் தாடியாக ஒட்டிய ஒரு சாந்தா கிளாஸ் தாத்தா கிறிஸ்துமஸ் சமயத்தில் கொடுத்த பரிசுக்கு நானே வகுப்பில் முன்னரே காசு கொடுத்திருந்தேன் என்று தெரிந்தாலும் பூரித்து நன்றி சொல்லிக் கொண்டிருந்திருக்கிறேன்.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 5 Comments »
Dec 29th, 2004 by இரா. செல்வராசு
Blog என்ற சொல்லிற்குச் சரியான தமிழாக்கம் என்னவென்று வெங்கட் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
வலைப்பூ கவித்துவமாய் இருக்கிறதே என்றாலும் நுட்பத்தைச் சரியாகக் குறிக்காமல் இருக்கிற காரணத்தால் அது வேண்டாம் என்னும் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மற்ற இரு சொற்களான வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டும் சரியே. நானும் இது நாள் வரை மாற்றி மாற்றி இரண்டையும் பாவித்து வந்திருக்கிறேன். என்னுடைய முதல் பதிவிலும் இது பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால், இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டுமெனில், வலைப்பதிவே சரியாக இருக்கும் என்று எனக்கும் தோன்றுகிறது.
Continue Reading »
Posted in இணையம், தமிழ் | Comments Off on வலைப்பதிவா வலைக்குறிப்பா ?
Dec 28th, 2004 by இரா. செல்வராசு
வட அமெரிக்காவில் கடுங்குளிரும் பனி வீச்சுமாய் இயற்கை சீறிக் கொண்டிருக்கிறது என்று காட்டப் படம் பிடித்து வைத்திருந்தேன். எல்லா வருடமும் இருப்பது தான் என்றாலும், சடாரென்று கொட்டிச் சற்றே கடுமையாகத் தாக்கியதில் சற்றுத் திணறித் தான் போயிருந்தோம்.

மூன்றடிக்குக் குவிந்து கிடக்கிற இந்தப் பனியாவது இன்னும் மூன்று நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கரைந்து போகும். மூழ்கிக் கடலடியில் கரைந்த உயிர்கள் மீளாவே!
இங்கே பொழிந்த பனியை மிகச் சாதாரணமாக்கி விட்டது இயற்கையின் தெற்காசியச் சீற்றம். கடல் கொந்தளிப்பும் பேரலைகளும் மூழ்கிய பெருநகரங்களும் வரலாற்றிலும் வரலாற்றுக் கதைகளிலும் தான் படித்திருக்கிறோம். வாழ்நாளில் பார்த்ததில்லை. கேட்டதில்லை. பெருமழையும் புயலும் பிளக்கின்ற பூமியும் கடுந்தீயும் கூடப் பேருயிர்களைக் கவர்ந்து அழிவுக்குள்ளாக்கியதை உலகில் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இம்முறை கொந்தளித்த கடல் தமிழ் மண்ணில் அழிவினை உண்டாக்கியதில் இதயத்திற்கு அருகே சற்றே அதிகத் தாக்கம் தான்.
அதிலும் அந்தக் கடல்!
Continue Reading »
Posted in பொது | Comments Off on இயற்கையின் சீற்றம்
Dec 19th, 2004 by இரா. செல்வராசு
“நந்து… இந்தியாவுக்குப் போயிடலாமா?”
நண்பர் ஒருவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததன் தாக்கத்தில் நான்கு வயதினளிடம் கேட்டேன். திரையில் ‘லயன் கிங்’ பார்த்துக் கொண்டிருந்தனர் மகள்கள். பெரியவள் ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘லயன் கிங்’ படம் கூட இன்னும் சிறிது அச்சத்தைத் தருவதாய் இருக்க, சின்னவள் என்னுடன் பேசும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன் பார்வையைத் தொலைக்காட்சித் திரையில் இருந்து விலக்கிக் கொண்டாள்.
“நந்து… இந்தியாவுக்குப் போயிடலாமா?”
“யேய்” என்று உற்சாகமான பதில் வந்தது.
Continue Reading »
Posted in வாழ்க்கை | Comments Off on இந்தியாவுக்குப் போயிடலாமா?
Dec 14th, 2004 by இரா. செல்வராசு
பார்க்கின்ற எவரையும் கவர்ந்திழுக்கும் அழகான கண்கள் அங்கும் இங்கும் அலைந்தபடி, ‘இனி எல்லாமும் உங்கள் கையில்’ என்று முழு நம்பிக்கையையும் நம்மில் வைத்து, நம் கைகளில் ஒரு பிஞ்சு தவழ வருவது ஒரு உன்னத அனுபவம். ‘உங்கள் அருகாமையில் நான் நிறைவாய் இருக்கிறேன்’ என்று காட்ட விழைவதைப் போல் விரிந்த விரல்களோடு சிறு கரங்களும் கால்களும் மேலும் கீழும் உதற, அவசர அவசரமாய் மூச்சுக் காற்று உள்ளும் வெளியுமாகத் ததும்பும். விரல் நீட்ட, தளிர்க்கரங்கள் இறுகப் பற்றும். மெய் சிலிர்க்கும். சங்கீத அறிவே துளியும் இல்லாதவனைக் கூடத் தாலாட்டுப் பாடி மெய்யுருகச் செய்யும். அது ஆழ்ந்து உறங்கையிலே, அமைதியாக அருகமர்ந்து தலை கோதி, ‘யார் நீ?’, ‘எங்கிருந்து வந்தாய்?’, ‘என்னை எப்படித் தேர்ந்தெடுத்தாய்?’ என்று வினவத் தோன்றும். ஒரு குழந்தைக்குத் தாயாக, தந்தையாக இருப்பது ஒரு பேரானந்தம். பேரனுபவம்.
குழந்தை வளர்ப்பு என்பது பெரும் பொறுப்பும் கூட. ஆனால் அதைச் சரியாகக் கற்றுக் கொள்ளப் பாடங்களும் இல்லை. பள்ளிகளும் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் பிற அனுபவித்தவர்களின் பட்டறிவையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது. இது நமக்கே உரித்தான ஒரு தனி வாழ்க்கைப் பாடம். பொதுவான திசையை அறிந்து கொண்டு, அன்பு ஒன்றையே அடிப்படையாக வைத்துக் கொண்டு பிறவற்றை எல்லாம் போகப் போகக் கற்றுக் கொள்ள வேண்டியது தான். சில சமயம் இந்தச் செலுத்தத்தில் நாம் தவறுகள் செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடங்கற்றுக் கொண்டு பயணம் செய்ய வேண்டும்.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 7 Comments »