அல்போன்சு சார்
Feb 26th, 2004 by இரா. செல்வராசு
சமீபத்திய இந்தியப் பயணத்தில் ஒருநாள். அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் மதிய வேளை. ஏதோ சாமான் வாங்கிவரக் கடைவீதிப் பக்கம் சென்று மூன்று மணிக்கே மூடஇருந்த ‘சங்கீதா’வில் வாங்கிக் கொண்டு அந்தச் சாலை முக்கில் திரும்பும் போதுதான் அவரைப் பார்த்தேன். ‘ஸ்கூட்டி’ மாதிரி இருந்த ஒரு வண்டியை ஓட்டிச் சென்று கொண்டிருந்த அவரைத் துரத்திப் பிடித்து நிறுத்தியபோது உடனே என்னைத் தெரிந்துகொண்டார்.
“டே செல்வராஜ்”, என்று நடு ரோட்டிலேயே வண்டியை நிறுத்தி விட்டு, அன்பாய் விளித்தார், அல்போன்சு சார். கூட்டமில்லாத ஞாயிறு ஆனதால் கடந்து சென்ற ஓரிருவர் எதுவும் குறை பட்டுக் கொள்ளாமல் சாலை நடுவில் நின்று கொண்டிருந்த எங்களைச் சுற்றிக் கொண்டு சென்றனர்.
“எப்படி சார் இருக்கீங்க?” உயர்நிலைப் பள்ளியில் இயற்பியலை இனிமையாக்கித் தந்த ஆசிரியர் மெலிதாய்ச் சிரித்தார். எனக்குக் கெப்லரையும் கோபர்னிக்கஸையும் ஐசக் நியூட்டனையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தவர். பாடத்தில் அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென விழித்து வரிசையாய் நின்ற எங்களிடம் வந்து கழுத்தைப் பிடித்து வளைத்து முதுகில் ‘தொம்’ ‘தொம்’ என்று சத்தம் வர, ஆனாலும் அதிகம் வலிக்காத, அளவான அடியைக் கொடுப்பார். இன்று சற்றே அயர்வாய்த் தெரிந்தார்.
“நல்லா இருக்கேம்ப்பா. ஆனாக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு இதயக் கோளாறு வந்துருச்சு. பை-பாஸ் பண்ணியிருக்கு. ஆனா இப்போப் பரவாயில்லே. நீ எப்படி இருக்கே, லீவுக்கு வந்திருக்கியா ?”
அல்போன்சு சார் எங்களுக்கு வெறும் இயற்பியல் வாத்தியார் மட்டுமல்ல. பல வகைகளில் எங்களோடு கலந்திருந்தவர். ஒவ்வொரு நாளும் மாலை மணி அடித்தபின் கட்டாயம் அவரை விளையாட்டு அரங்கத்தில் பார்க்கலாம். பள்ளியில் சரியான விளையாட்டுப் பயிற்சியாளர்கள் எல்லாம் இல்லாத ஆரம்ப காலத்தில் இருந்து, வேறு பயிற்சியாளர்கள் அமைந்துவிட்ட பிற்காலத்திலும் கால்பந்தாட்டம் என்று வந்து விட்டால் அவர் தான் முதல் ஆள்.
“வெளையாடாம ஒழுங்காப் படி” என்று என் வீட்டில் சொன்னதாலோ என்னவோ அதிகமாய் விளையாட்டில் ஆர்வம் காட்டாத சற்றே “பழமான” ஒரு மாணவன் நான். ஏதோ பள்ளிப் பேருந்தில் வந்து கொண்டிருந்த காலத்தில் அது இரண்டாம் சுற்று வரும் வரை இருந்த ஒன்றரை மணி நேரத்தில் அந்த மைதானத்தில் கால்பந்தின் பின்னாடியே ஒரு ஐந்து நிமிடம் ஓடிவிட்டுக் களைத்துப் போய் அமர்ந்துவிடுவது தான் என் வழக்கம். ஆனால் தீவிரமான விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார்ப் படுத்தி, பள்ளிக்கென்று ஒரு அணியை உருவாக்கிப் பல விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர் அவர்.
“சார், இன்னும் நீங்க ஸ்கூலுக்குப் போயிட்டு இருக்கீங்களா ? இல்லை ஓய்வு பெற்றுவிட்டீர்களா ? ”
“இல்லப்பா, இன்னும் போய்க்கிட்டுத் தான் இருக்கேன். இன்னும் ஒரு நாலஞ்சு வருஷம் இருக்கு ரிட்டயராக”
கால்பந்தாட்டத்தைத் தவிர அல்போன்சு சாரின் இன்னொரு பெரிய ஈடுபாடு ஆண்டு விழாவிற்கு அவர் அமைக்கும் நாடகங்கள். தானே கதை, வ்சனம் எழுதி, இயக்கி, இசையமைத்து (தேவையான பாட்டுக்களை வெட்டி ஒட்டி ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டு வருதல்), சிலசமயம் புதுமையான செட் போட்டு அவர் அமைக்கும் நாடகங்கள் பள்ளியில் பிரசித்தம். ஒரு முறை ஒரு தொலைக்காட்சிச் செய்தி போன்ற காட்சியை அமைக்க ஒரு பெட்டிக்குத் தொலைக்காட்சி போல் வேடம்(!) போட்டு அதன் அடியில் இருந்த துளை வழியாக ஒர் தலையை ஒரு சிறு பெண்ணை விட வைத்து செய்தி வாசிக்கச் சொன்னது மேடைக்குக் கீழ் இருந்த பார்த்தவர்கள் அருமையாய் இருந்ததாகச் சொன்னார்கள். பெட்டிக்குள் தலையை விட்டுக் கஷ்டப் பட்டது அவருடைய சிறு பெண் தான் (சின்னத் தலையாய் வேணுமே!).
பொதுவாகவே அவருடைய நாடகங்கள் தான் ஆண்டு விழாவில் கடைசியானதாய் இருக்கும். அதிலும் பல வருடங்கள் விழாவின் முன் நாள் நடக்கும் ஒத்திகையின் போது கூட அவருடைய நாடகத்தின் கடைசிக் காட்சி காட்டப்பட மாட்டாது (சஸ்பென்ஸ்!). சில சமயம் ஆர்வத்தைத் தூண்டிவிடும் மர்மக் கதைகளாய் இருக்கும்.
வகுப்பறைக்கு வெளியே வேடிக்கையாய்ச் சில சமயம் அவரிடம் பேசிடும் போது, “நாடகம் எல்லாம் நடிச்சு இப்போ நல்லா பேசிப் பழகிட்டானுங்க!” என்று அவரும் வேடிக்கையாய்ச் சொல்வதுண்டு. அது வெறும் வேடிக்கையானதில்லை. ஓரளவு உண்மையானதும் தான் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகிறது.
பாலச்சந்தர் படத்தில் வரும் கதாநாயகர்கள் போல அல்போன்சு சாரின் நாடகங்களுக்கு என்று ஒரு தனியான நடிகர் பட்டாளம் இருந்தது. ஒவ்வொரு வருடமும், இவனுக்கு இந்தப் பாத்திரம் என்று தனது ஆஸ்தான நடிகர்களை மனதுள் வைத்தே அவர் நாடகம் எழுதுவதை உணர்ந்திருக்கிறேன். ஆறு வருடம் படித்த அந்தப் பள்ளியில் முதல் வருடம் தவிர ஐந்து வருடங்கள் அவர் நாடகங்களில் நடித்த நல்ல அனுபவமும் பெருமையும் எனக்கும் உண்டு.
இயற்பியலோ முதல் மூன்று வருடங்களுக்குத் தான் அவரிடம் பாடம் (11ஆவது 12ஆவதுக்கு அவர் பாடம் நடத்தவில்லை). ஆனால் இந்த நாடக அனுபவம் அதிக நாட்கள். இயற்பியல் பரிசோதனைக்கூடம் தான் எங்களது நாடக பயிற்சிக் கூடமும் ஒத்திகைக் கூடமும்.
இது தவிர, அறிவியற் பொருட்காட்சிக்கென்று ஏதேதோ செய்து சென்ற நேரங்கள் நினைவு இருக்கின்றன. (என்ன செய்தோம் என்று நினைவில்லை.)
புதிது புதிதாய் எதையேனும் முயற்சி செய்து பார்ப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம் என்று எண்ணுகிறேன். ஒரு ராக்கெட்டில் நிலவுக்கு ஒரு parabolic mirror ஒன்றை அனுப்பி இரவில் சூரிய ஒளியைப் பூமிக்குப் பாய்ச்சலாம் என்பது போன்ற ஒரு திட்டத்தை வைத்திருந்தார். இந்துப் பேப்பரில் எல்லாம் அது பற்றி எழுதி வெளிவந்த தாள்களை வெட்டி வைத்திருந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பின் ரஷ்யர்கள் அதே போன்றதொரு திட்டத்தைச் செயல்படுத்தியது பற்றிய ஒரு செய்தியும். அவர்களுக்கு முன்பே தான் அந்தத் திட்டத்தை யோசித்தவர் என்பதற்குச் சான்றாக வெட்டி வைத்திருந்தார். அவருடைய மாணவர்கள் நாங்கள் சிலர் அமெரிக்கா வந்த போது NASAவிற்கெல்லாம் அது பற்றி விவரம் எழுதி அந்த ஆய்வில் ஈடுபட வசதிகள் தருமாறு விண்ணப்பித்திருந்தார். ஒரு ஈரோட்டுப் பள்ளியின் ஏழை வாத்தியாரை நாஸா கண்டுகொள்ளவில்லை. (நாஸாவை நான் குறை கூறவில்லை).
அன்று சுமார் ஐந்து நிமிடம் தான் அவரோடு பேசி இருப்பேன். அதிலேயும் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகள் பற்றிக் குறிப்பிடத் தவறவில்லை அவர். “தண்ணீரின் அழுத்தத்தை வைத்தே ராக்கெட் விட முடியுமா என்பது பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்துல் கலாமிற்கும் எழுதி இருக்கிறோம். பார்க்கலாம்” என்றார். அவருடைய ஆய்வு முயற்சிகள் பற்றி எனக்கு முழுமையாய்த் தெரியவில்லை. ஆனால், கனவுகளுக்கும், கற்பனைகளுக்கும் அவரிடம் பஞ்சமில்லை என்பது மட்டும் தெரிகிறது.
நாஸாவோ வேறு எவரேனுமோ அவரைக் கண்டு கொள்ளவில்லை என்றால் தான் என்ன ? இந்தக் கனவுகளும் கற்பனைகளும் அவற்றைப் பகிர்ந்து கொள்ள மாணவர்களும் இருக்கும் வரை அது அவருடைய வெற்றி தானே !
ஆசிரியர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு நம் நன்றி. ம்…எனக்கு வாய்த்த இயற்பியல் வாத்தியார்கள் ‘இனி இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காதே’ என்பது மாதிரியான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தினார்கள் 🙂
எனக்கும் என் ஆசிரியர்கள் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ஆனால், சொந்தக்கதை சொல்லாமல் அது முடியாது என்பதால் ஓரமாக வைத்துவிட்டேன் 🙂
அது சரி, யார் அந்த (கண்ணாடி போடாத)பாக்யராஜ்? (மைக் முன்னாடி) :-)))
கொடுத்து வைத்தவர்தான்.
அப்புறம் போட்டோ ரகசியம்?
நன்றி சுந்தர், பரி, காசி. அந்தப் படம் “மாடர்ன் மகாபாரதம்” நாடகத்தில் இருந்து. மைக் முன்னாடி இருப்பவர் (நானில்லை) எனது மாமா சகுனி(!)தற்போது பால்டிமோரில் ஒரு Architectஆக இருக்கிறார். அவர் சகுனி மாமாவானால் நான் யார் ?