தமிழ்மணம் – சில குறிப்புகள்
Jul 12th, 2005 by இரா. செல்வராசு
தமிழ்மணம் பற்றிய அடிப்படையைப் பலர் (பெரிய தலைகளும் கூட) தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது. அது திரட்டி மற்றும் சில வசதிகள் மட்டும் தான் என்று மீண்டும் மீண்டும் விளக்கம் அளிக்க ஆயாசம் தான் மிஞ்சுகிறது. அதனால் மீண்டும் அது பற்றி விளக்க நான் முற்படப் போவதில்லை. அவரவர் ‘புரிதலில்’ அவரவர் உறுதியாய் இருக்கும்போது எந்த விளக்கமும் வீண்.
யாருக்கேனும் தமிழ்மணம் பற்றிய கேள்விகள் கருத்துக்கள் இருப்பின் தமிழ்மணத்தின் வாசகர் மன்றத்தில் எழுப்பினால் அதனைக் கவனிக்க முடியும். மன்றத்தில் நிர்வாகிகள் மட்டுமன்றி தெரிந்த பலரும் பதில் அளிக்க ஏதுவாய் இருக்கும். அது போலப் பல வாசகர்கள் இப்போது செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவன்றி பிற பதிவுகளிலும் பதிவுகளின் பின்னூட்டங்களிலும் எழுதிவிட்டுப் பதிலை எதிர்பார்த்திருப்பது நியாயமற்றது. இது ஒரு நிறுவனம் என்பதல்லாமல் ஒரு கூட்டமைப்பு என்று கொள்ள வேண்டும்.
தமிழ்மணத்தில் பதிவு செய்து கொள்வதால் பரவலான வாசகர்கள் கிடைக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதாகவும், அதே சமயம் யாராவது அவதூறாய் எழுதிவிட்டால் அதுவும் பரவலாய் அறியப்படுவதால் அது விரும்பத்தகாததாகவும் இருக்கிறது என்பது முரணானது. ஒரு வகையில் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்றது. அதுவும் தமிழ்மணத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று அது என்பதும் நினைவில் கொள்ள வேண்டும். தனித்தனிப் பதிவர்கள் நுட்ப உதவி கொண்டோ, பிற நண்பர்கள் உதவிகொண்டோ, அல்லது மூக்கன் சொன்னது போல் நேரடியாகப் பேச்சுவார்த்தையின் மூலமோ சக பதிவர்களுடன் உண்டாகும் பிரச்சினைகளைச் சரி செய்து கொள்ள வேண்டுமே தவிர, அந்தச் சுமையையும் அதிகாரபூர்வமாகத் தமிழ்மணத்தின் மீதேற்றி நசுக்கிவிடக்கூடாது. தமிழ்மண நிர்வாகிகளும் வலைப்பதிவர்கள் தான் என்பதால் நட்புறவுக்காகத் தெரிந்த வகையில் உதவ முன்வருவோம்.
சில பதில்கள்.
பிளாக்கர் மட்டுமல்ல, தமிழ்மணத்தில் செய்தியோடை வசதி கொண்ட எந்தப் பதிவும் சேர்த்துக்கொள்ள முடியும் என்பது ஆரம்பநாட்களில் இருந்தே இருக்கிறது. rediffblogs, blogdrive, போன்றவையும், movable type, wordpress, nucleus, blog:cms, livejournal போன்ற பல வகைகளும் தமிழ்மணத்தில் இணைந்திருக்கின்றன. Yahoo360யும் செய்தியோடை இருக்கும் பட்சத்தில் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் செய்யவும் பட்டிருக்கிறது. மற்றவற்றைப் போல் அதுவும் ஒரு வலைப்பதிவு நிரலி/வசதி. அதிலுள்ள நிறை குறை கருதி விருப்பம் இருப்பவர்கள் மாறிக் கொள்ளலாம். ஆரம்ப நாட்களிலேயே பிளாக்கரில் இருந்து மூவபிள் டைப் அதன் பின் வோர்ட்பிரஸ் என்று நான் மாறிக் கொண்டது போல். அதற்காக எல்லோரும் மாறிக் கொள்ள வேண்டும் என்று ஏன் விவாதங்கள் எழ வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியான பிரசங்கங்களைக் கேட்டு மாற விரும்புவர்கள் நிறை குறைகளை யோசித்துச் செய்து கொள்ளவும். எனக்கோ தமிழ்மணத்திற்கோ எந்தவொரு வசதி மேலும் சார்பில்லை. (தனிப்பட்ட முறையில் எனக்கு வோர்ட்பிரஸ் பிடித்திருந்தாலும் அதை யார் மீதும் திணிக்கும் எண்ணம் இல்லை).
இல்லை, இந்தப் பிரச்சினைகளால் தமிழ்மணத்தில் இருந்து யாராவது பதிவை விலக்க வேண்டுமானால் ஒரு மடல் அனுப்பினால் போதும், அதற்காக பதிவுச் செயலியை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லையே!
தமிழ்மணம் வேறு வலைப்பதிவுகள் வேறு. தமிழ்மணம் வேறு பிளாக்கர் வேறு. தமிழ்மணம் வேறு யாஹூ360 வேறு. தமிழ்மணம் வேறு வோர்ட்பிரஸ் வேறு.
சென்னைக் கூட்டத்தில் பேசியது போல் முடிந்த வழிவகைகளில் தமிழ்மணம் உதவியாய் இருக்கும். மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப் படும். அதற்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். தமிழ்மண நிர்வாகிகளின் நேர நெருக்கடிகளை உணருங்கள். குறிப்பாகச் சமீப கால மாற்றங்கள். மற்றபடி தார்மீகப் பொறுப்பு என்றெல்லாம் பெரிய வார்த்தை சொல்ல வேண்டாம். என்றும் ஒரு நட்பு நிலையிலேயே விவாதித்துக் கொள்ளலாம். உணர்ச்சிப் பெருக்கை எல்லோரும் கட்டுப் படுத்திக் கொண்டு கொஞ்சம் நீர் மோர் குடித்து வரலாம். வாருங்கள்.
நன்றி.
/மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப் படும்./
எனக்கு இன்று 2115 மறுமொழிகள் வந்த பொறாமையிலே நீங்கள் இப்படியாகச் செய்வது புரிகின்றது. பொறாமைபிடித்தவர்கள்!! 😉
மிகுதிப்படி, இந்தக்குறிப்பினை நீங்கள் இன்றைக்கு மட்டும் போட்டால், போதாது. மாதாமாதமோ கிழமைக்குக் கிழமையோ போட்டுக்கொண்டிருக்கவேண்டுமென்பதே நிதர்சனமெனத் தோன்றுகிறது. 🙁
//தமிழ்மணத்தில் பதிவு செய்து கொள்வதால் பரவலான வாசகர்கள் கிடைக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதாகவும், அதே சமயம் யாராவது அவதூறாய் எழுதிவிட்டால் அதுவும் பரவலாய் அறியப்படுவதால் அது விரும்பத்தகாததாகவும் இருக்கிறது என்பது முரணானது. ஒரு வகையில் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்றது. //
மேற்கண்ட கருத்துடன் நான் ஒத்துப் போகிறேன்.
அன்புடன்,
கணேசன்
பெரிய தலைகளுக்கே புரியாதபோது உங்களின் இந்தப்பதிவு யாருக்குப் புரியப்போகிறது!?
//மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப் படும்
ஏன் நீக்கவேண்டும்? அதை நீக்குவதால் என்ன சாதிக்கமுடியும். அதை நீக்கினாலும், நான் உங்கள் பதிவில் வந்து பின்னூட்டம் கக்க முடியும்… அதை சுட்டி கொடுத்து போறவற இடங்களிலெல்லாம் போடமுடியும்.
அதனால் சிரமப்பட்டு செய்தவசதிகளை – மீண்டும் நேரம் செலவழித்து நீக்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
மற்றப்படி உங்களின் இந்தப் பதிவினால் (தேவையானவர்களுக்கு புரியவே போவதில்லை என்பதாலும் அல்லது அவர்கள் மிகவும் தெளிவாக இருப்பதாலும்) எந்த பயனும் இல்லை…:) இருந்தாலும் உங்கள் நேரத்துக்கும், எண்ணத்துக்கும் நன்றி.
நீர்மோர் பந்தல் எங்க இருக்குது!?
//மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப் படும்
அதற்கு மாற்றாக…
அது தங்களுக்கு தேவையில்லாததாக இருக்கும்பட்சத்தில் அவரவரது பின்னூட்ட வசதியை நீக்கிக்கொள்ளட்டும்…
எனக்கு பயங்கர ‘ஜல்பு’ ஆக இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அதை அதிகப்படுத்துவதற்காகவே நீங்கள் நீர் பீர்… ஓ.. ஸாரி… நீர் மோர் குடிக்க கூப்பிடுகிறீர்கள்…இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். (அது சரி.. பார்சல் உண்டா?!)
அன்புள்ள செல்வராஜ்,
தங்கள் விளக்கங்கள் ஆறுதல் அளிக்கின்றன. நன்றி.இப்போது பிரசினைக்கு தீர்வு குகையின் இறுதியில் தெரியும் ஓர் ஒளிக்கீற்றாகத் துலங்குகிறது.செயலியை மாற்றிக் கொள்ளச் சொல்வது ‘யாம் பெற்ற ………” அடிப்படையில் சொல்லப்படும் ஓர் ஆலோசனைதான். அதை அவரவர் ஏற்கலாம் நிராகரிக்கலாம். தலைவலியில் துடிக்கும் சக அலுவலக ஊழியருக்கு தைலம் தடவு, மாத்திரை சாப்பிடு என்று சொல்வதில்லையா அது போலத்தான் இது. அது ஏன் ஒரு பிரசினையாகப் பார்க்கப்படுகிறது என்றுதான் புரியவில்லை
மறுபடியும் நன்றி
அன்புடன்
மாலன்
>>>>மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப் படும்.
செல்வராஜ்
மறுமொழி எண்ணிக்கை வசதி நீக்கப்படுவது தேவையற்றதாகவேபடுகிறது. உருப்படியான நல்ல பதிவுகளை அடையாளம் காணும் ஒரு வசதியாகத்தான் இதை பலர் பயன்படுத்துவதாக அறிகிறேன். இதையும் நீக்கிவிட்டால் நல்ல பதிவுகள் பல கவனிப்பின்றி மறைந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.
யோசித்துப்பாருங்கள், மின்மடல் வசதி கிடைத்ததும் பலர் அதன் மூலம் ஜோக்குகளையும், வைரஸ் வார்னிங்களையும் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆனால் சில காலம் உபயோகித்து தெளிந்தபின்னர் மின்மடல்களை பார்வர்ட் செய்வதை பயனர்கள் தவிர்ப்பதை அனுபவத்தில் கண்டிருப்போம். அதைப்போலத்தான் வலைப்பதிவுகளும். முதல் வெளிச்சத்தில் சில முக்கியத்துவமற்ற பதிவுகள் வரத்தான் செய்யும், ஆனால் பதிவர்கள் தெளிவுற துவங்கியதும் நல்ல பதிவுகளை நாம் எதிர்பார்க்கலாம். அதற்காக அருமையான (பல தமிழ்மண பயனர்களும் ஏற்றுக்கொண்ட) ஒரு வசதியை தனிநபருக்காக நீக்குவது தேவையற்றதாகவேபடுகிறது.
மேலும் பின்னூட்ட எண்ணிக்கையை நீக்குவதால் என்ன பயன். யாஹ¥வில் (360) template மாற்றும் வசதிகிடையாது. அதனால் பின்னூட்ட எண்ணிக்கை மற்றும் நட்சத்திர எண்ணிக்கை நிரலை இணைக்கும் வசதி அதில் கிடையாது. அதனால்தானோ என்னவோ யாஹ¥ பதிவர்களில் சிலர் இந்த வசதியை நீக்க கோருகின்றனர். ஆனால் அது முறையானதாகப்படவில்லை. அவர்கள் யாஹ¥விடம் template மாற்றும் வசதியை கோருவதுதான் முறையாகும். அவ்வசதி வந்ததும் அவர்களுக்கு விருப்பம் இருக்கும் பட்சத்தில் பின்னூட்ட எண்ணிக்கை நிரலை இணைத்துகொள்ளட்டும்.
மேலும் அவர்களுக்கு பின்னூட்ட எண்ணிக்கையை பார்க்க பிடிக்காத பட்சத்தில் archieve பகுதியில் உள்ள பதிவுகளை காணலாமே? (http://www.thamizmanam.com/tamilblogs/archive.php?date=20050713)
அதனால் பின்னூட்ட எண்ணிக்கை நீக்கப்படுவது குறித்து மறுபரிசீலிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வாக்கெடுப்பாவது நடத்தினால் மகிழ்ச்சியடைவேன்.
.:டைனோ:.
அருணா அவர்களின் Alaigal: வலைப்பதிவில் அவதூறு – தொடர்ச்சி… என்ற பதிவுக்காக எழுதிய பின்னூட்டம், தேவை கருதி இங்கே:
ஒரு விவாதம் திசை திரும்புகிறது என்று புரிந்தவுடனேயே அந்தப் பதிவில்
உள்ள விரும்பத்தகாத பின்னூட்டங்களை பதிவாளர் பொறுப்பாக நீக்கினால்
பிரச்சனையில்லை. ஆனால் அவரும் சேர்ந்து வாதத்தை வளர்க்கும்போது பதிவு
நீக்கப்பட்டால் அது தவறில்லை என்பது என் கருத்து.
நீங்கள் தொடர்ச்சியாக கவனித்திருந்தால்… யாருமே அவர்களுடைய
சொந்தப்பதிவில் எந்தவிதமான அபாண்டமும் செய்யவில்லை. பிறருடைய பதிவின்
பின்னூட்டமாகத்தான் – ஏதோ ஒரு பெயரில் சேற்றை வாரியிறைத்தனர். இங்கே… சம்பந்தப்பட்ட பதிவர்கள் அவர்களுடைய
பதிவிலுள்ள அசிங்கமான பின்னூட்டத்தையோ அல்லது அந்தப் பதிவையோ நீக்குவது
எளிதா அல்லது தமிழ்மணத்தில் வேலையில்லாது இருப்பவர்கள் இங்கேயே
உட்காந்திருந்து யாராவது எங்கேயாவது எழுதியிருக்கிறார்களா,
பின்னூட்டமிட்டிருக்கின்றார்களா என்று தேவுடுகாப்பது எளிதா?
அதிலும் சம்பந்தப்பட்டர்வர்கள் அனைவரும், IP சேகரிக்கிறேன், பின்னூட்டம்
சேமிக்கிறேன், கையும் களவுமாய் பிடிப்பதற்கு அனாமதேயம் அனுமதிக்கிறேன்,
அவர்கள் கக்கிய வாந்தியை நான் மட்டுமல்லாமல் நாலுபேர் பார்க்க
விட்டுவைத்திருக்கிறேன் என்ற் தொனியில்தான் அறிவிப்பு
வெளியிட்டு வந்தார்கள்.
இந்த நேரத்தில், தமிழ்மணத்தின் வெட்டிக்கூட்டம் – இதில் புகுந்து என்ன
செய்யமுடியும். முன்னர் அந்த “தடை” செய்யக்கோரும் வசதியிருந்தது –
பின்னர் வடிவம் மாற்றியமைக்கப்பட்டபோது நீக்கப்பட்டுவிட்டது.
மேலும் நீங்கள் கேட்கும் Abuse Policyகூட தமிழ்மணத்தில் இருந்து அந்த
பதிவை தமிழ்மணத்தின் பட்டியிலில் இருந்துதான் நீக்க செய்ய முடியும்.
மற்றப்படி அந்தப்பதிவு, அந்த வலைப்பதிவில் இருக்கத்தான் செய்யும்.
வேண்டியவர்கள் அங்கு சென்று சண்டையிடமுடியும். ஆங்காங்கே அதற்கு சுட்டி
கொடுத்து ….இங்க சென்று பாத்தீங்களா சண்டை நடக்குது… என்று கண்ட
இடத்தில் பின்னூட்டமுடியும் அதைப்பற்றி ஒரு பதிவு போட்டு – வரும்
பின்னூட்டங்களால் அரட்டையடித்து – புண்ணியமிருந்தால் அங்கும் சகதிச்சண்டை
ஆரம்பிக்கமுடியும்.
அதனால்தான் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்… இதில் மற்றவர்களை விட
சம்பந்தப்பட்டவர்கள்தான் அதிகம் செய்யமுடியும் – ஆனால் அதை ஆக்ககரமாக
செய்யாமல் – எண்ணெய் ஊற்றி திரியைத்தீண்டி விட்டு விட்டார்கள் – நெருப்பு
பரவிவிட்டது.
இப்போது அடுத்தகட்டம்… இது சம்பந்தமா நீ ஏதாவது செஞ்சருக்கனுமா இல்லியா… நீ ஏன் பேசாது இருந்த… என்ற அடுத்தகட்டப்போர்… அதற்கு வாதப்பிரதிவாதங்கள். எப்படியோ வலைப்பதிவு நடந்துகொண்டேயிருக்கிறது…
கவலையே படாதீர்கள், உணர்ச்சிவயப்பட்வே தேவையில்லை… அதுவே
அணையும்…
இது போன்ற தருணத்தில் நீர்மோரை விட கரும்புச்சாறு அருந்துவதே சிறந்தது என்பது எனது கருத்து. இதற்காகவே நான் கரும்புஜூஸ் ஃபேக்டரி ஒன்றையும் கட்டி வைத்துள்ளேன்.
தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும், இது எனது கருத்து மட்டுமே. நான் யாரையும் கரும்புச்சாறு குடிக்க வற்புறுத்தவில்லை. மன்னிக்கவும்.
எழுதவிட்ட இன்னொரு கருத்து…
> ஒரு விவாதம் திசை திரும்புகிறது என்று புரிந்தவுடனேயே அந்தப் பதிவில்
> உள்ள விரும்பத்தகாத பின்னூட்டங்களை பதிவாளர் பொறுப்பாக நீக்கினால்
> பிரச்சனையில்லை. ஆனால் அவரும் சேர்ந்து வாதத்தை வளர்க்கும்போது பதிவு
> நீக்கப்பட்டால் அது தவறில்லை என்பது என் கருத்து.
ஏற்கனவே நான் சொன்னதுபோல் இதை மென்மேலும் வளர்த்தவர்களே
சம்பந்தப்பட்டவர்கள்தான். அந்தநேரத்தில் நீங்கள் சொல்வதுபோல் தமிழ்மணம்
நிர்வாகம் அந்த பதிவை பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கினால்,
“நீக்கியதுக்கு விளக்கம் கேட்டு நாலு பதிவும், வேறு சில பதிவுகளை ஏன்
நீக்கவில்லை என்று மேலும் நாலு பதிவும் – இரண்டுக்கும் பின்னூட்டங்களாக
ஒரு சில நூறும்தான் எஞ்சும்.”
இதுதான் இங்கே நடக்கிறது. அதைவிட்டு உங்களைப்போன்ற பெரியவர்கள் கருத்து
சொல்லலாம். அதைக்கேட்டு நடப்பவர்கள் இங்கு ஏன் இவ்வளவு பிரச்னை
செய்கின்றார்கள்… அதனால்தான் பலரும் துஷ்டனைக்கண்டு தூர
விலகுகிறார்கள்.
செல்வராஜ்,
உங்கள் விளக்கம் அருமை.
இன்னமும் ப்ளாக்கர்/யாஹூ போன்ற சேவைகளை தமிழ்மணத்துடன் குழப்பிக் கொள்பவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.
அன்பு,
நான் சொல்ல நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்
நன்றி
பெயரிலி அன்பு நன்றி. இங்கும் பிற இடங்களிலும் மிகவும் தெளிவாக விளக்க முற்பட்டிருக்கிறீர்கள். இதுபோல் எல்லோர்க்கும் ஒரு தெளிவு இருப்பின் நன்றாய் இருக்கும். தெரியாதவர்களும் முன்சார்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் அறிந்து கொள்ள முயற்சி செய்தால் நலமாய் இருக்கும்.
அன்பு, மாயவரத்தான், நீர்மோர் பற்றிய ஒரு சிறு குறிப்பு அடுத்த பதிவில். ஆகாயப் பந்தல். மாயவர் – பார்சல் கூட உண்டு.:-)
செல்வராஜ்
நன்றாக படித்து சிந்தித்து இருப்பவர்களிடையே கூட காவலர் வேலை தேவையய் இருப்பது கடினமான செய்தி.இத்தனை வேலைக்கு நடுவேயும் விளக்கம் கொடுத்து புரியவைக்க முயன்றதற்கு நன்றி.சினம் அதிகமாகௌம் போது கணினியைவிட்டு விலகிபோனாலே இந்த சங்கடங்கள் தீர்ந்துவிடும்
அன்புள்ள செல்வராஜ்,
உங்கள் கட்டுரையில் எனக்கு முழு ஒத்துழைப்பு உண்டு. தமிழ்மணம் வலைப்பூவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளம் அவ்வளவே. இங்கே நடக்கும் இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் டோண்டு அவர்கள்தான்.
பின்னாளில் மாயவரத்தானும் விஜயும் எஸ்கேயும் திருமலைராயனும் தூபம் போடவே பெருந்தீயாகப் பற்றிக் கொண்டது.
என்னைக் கேட்டால் உங்களைப் போலவே இருபுறமும் கூப்பிட்டு சமாதானம் செய்வதே சரி என்று நினைக்கிறேன்.
பத்மா நன்றி. ஒருவகையில் வெறும் எழுத்தாய் மட்டும் பார்க்காமல் மறுபக்கமும் ஒரு உயிருள்ள மனிதர் என்கிற அளவில் பார்த்தால் இந்தப் பிரச்சினைகள் கொஞ்சம் குறையலாம். சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. பதிவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு இதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான படைப்புக்களைத் தொடரலாம்.
well said!!!
/சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. /
செல்வா, மனதின் இருண்ட பகுதிகள் போதிய சுதந்திரம் கிடைக்கும்போதுதான் வெறியாட்டம் போடுகின்றன. அந்த விதத்தில் இப்படி பலரை புரிந்துகொள்ள தமிழ்மணம் உதவுகிறது. ஆபாச_முகமூடிகள் யார் என்று தெரியும்போது அவர்களைப்பற்றியும் இப்படி புரிந்துக்கொள்ளலாம். ஆனாலும், அது அவரின் ஒரு பகுதி மட்டுமே என்பதையும் மறந்துவிடக்கூடாது.
நீங்கள் வெளிநாடு சென்றிருக்கும் போதும், இதற்காக நேரம் செலவழிக்க வேண்டியுள்ளதே… ‘தமிழ்மணம’் தமிழ் பதிவுகளை திரட்டி, ஒரே இடத்தில் படிக்க வசதி செய்து தருவதற்காக உள்ளது என்பதை புரிந்து கொள்வதில் என்ன சிரமம் பலருக்கு..புரிந்து கொள்ள முடியவில்லை.
உங்களது இந்திய பயணம் நல்ல முறையில் அமைய வாழ்த்துகள்.
////(பெரிய தலைகளும் கூட) தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்///
Selvaraj, All of us are having same size of head only. The thing is what we are doing sensibly with the inner part called ‘Brain’. :-)))
– Suresh Kannan
அன்பில் செல்வராஜ்,
நீங்கள் கூறியுள்ள அனைத்தும் முற்றிலும் சரியே ! சம்மந்தப்பட்டவர்கள் தாங்களே செயலில் இறங்காமல், தமிழ்மண நிர்வாகிகளிடம் கூப்பாடு போடுவது எந்த வகையிலும் நியாயம் இல்லை !
மேலும், அன்பு கூறியது போல, மறுமொழி எண்ணிக்கை வசதியை நீக்குவதால் அவதூறு / ஆபாசம் குறித்த பிரச்சினைகள் நிச்சயம் தீரப் போவதில்லை ! அவ்வசதியால் பயன் விளைந்தது என்பது நிதர்சனம், என் போன்ற பல சாதாரணர்களின் வலைப்பதிவுகள் வாசிக்கப்பட்டன, வாசிக்கப்படுகின்றன !!!
அவ்வசதியை நீக்கக் கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள். நீக்குவதா / வேண்டாமா என்பதை பல பதிவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து (எப்படி என்பதை நீங்களே தீர்மானியுங்கள்), ஆலோசித்து தாங்கள் (நீங்கள், காசி, மதி) முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
//
இல்லை, இந்தப் பிரச்சினைகளால் தமிழ்மணத்தில் இருந்து யாராவது பதிவை விலக்க வேண்டுமானால் ஒரு மடல் அனுப்பினால் போதும், அதற்காக பதிவுச் செயலியை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லையே!
//
தமிழ்மணத்தின் மறுமொழி எண்ணிக்கை வசதி தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்று நினைப்பவர்கள், நீங்கள் சொல்வது போல (சிறிது காலம்!) தமிழ்மணத்திலிருந்து பதிவை விலக்க மடல் அனுப்பலாமே !!!
தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்
பாலா
பின்னூட்டமிட்ட நண்பர்கள் பலருக்கும் நன்றி. பலரின் கருத்துக்கள் ஏதோ காரணத்தால் எரிதக் கட்டுப்பாட்டில் முடக்கி வைக்கப் பட்டிருந்ததை இன்று தான் பார்த்து விடுவித்திருக்கிறேன். குழப்பத்திற்கு மன்னிக்க. (அது தானியங்கியாய்ச் செயல்படுவது தான் என்பதால் எந்தச் சார்நிலையும் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்:-)).
தமிழ்மண மாற்றங்கள் குறித்த வாத விவாதங்கள் பல திசைகளில் நடப்பதாலும், பல கருத்துக்கள் இருப்பதாலும், இப்போதைக்கு எந்த மாற்றங்களும் இல்லை. ஏற்கனவே காசி செய்ய நினைத்திருக்கும் மாற்றங்களுக்கே (இவ்விவாதங்கள் தொடங்கும் முன் இருந்த மேம்பாட்டு யோசனைகள்) இன்னும் இயலவில்லை. எதையும் நீக்க வேண்டாம் என்று எழும் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப் படும்.
அதானே பார்த்தேன்… இன்னிக்கு வந்து பார்த்து திடுக்கிட்டேன்: எப்படி இடையில இடையில பலரது பின்னூட்டமென்று…!?
(குறிப்பா… கிருபாவோட இந்த பின்னூட்டம் படித்து சிரிச்ச ஞாபகம் இல்லியேன்னு தலையப்பிச்சுண்டுருந்தேன்:)
இது போன்ற தருணத்தில் நீர்மோரை விட கரும்புச்சாறு அருந்துவதே சிறந்தது என்பது எனது கருத்து. இதற்காகவே நான் கரும்புஜூஸ் ஃபேக்டரி ஒன்றையும் கட்டி வைத்துள்ளேன்.
தவறாகச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும், இது எனது கருத்து மட்டுமே. நான் யாரையும் கரும்புச்சாறு குடிக்க வற்புறுத்தவில்லை. மன்னிக்கவும்.