Aug 19th, 2010 by இரா. செல்வராசு
இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்)
நேரம்: மாலை 4 மணி
இடம்: சக்தி மசாலா அறை, கொங்கு கலையரங்கம், சம்பத் நகர், ஈரோடு.
வெளியிடுபவர்:
திரு. காசி ஆறுமுகம், கோவை, நிறுவனர், தமிழ்மணம் திரட்டி
பெறுநர்:
பேராசிரியர் R. சண்முகம், பாரதியார் பல்கலைக் கழகம், கோவை.

இவ்விழாவில் வெளியாகும் பிற நூல்கள்:
முதலீட்டுக் கடலில் முத்தெடுத்த வல்லுநர்கள் - முனைவர். கு. பாலசுப்ரமணி
வெளியீடு: திரு. க. பரமசிவம், மகாராஜா குழுமம்.
பெறுதல்: திரு. ப. பெரியசாமி, லோட்டஸ் ஏஜென்சி
Financial Markets & Institutions – Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. கருணாகரன், துணை வேந்தர், அண்ணா பல்கலை. கோவை
பெறுதல்: திரு. அரங்கண்ணல், ஞானமணி குழுமம், ராசிபுரம்
Futures & Options - Dr. K. Balasubramani & Dr. T. Chandra Kala
வெளியீடு: திரு. C. சுவாமிநாதன், துணை வேந்தர், பாரதியார் பல்கலை. கோவை
பெறுதல்: திரு. C. ராஜா, DSP, திருப்பூர்.
Tags: Book Release, புத்தக வெளியீட்டு விழா
Posted in இணையம், இலக்கியம், வாழ்க்கை | 16 Comments »
Jun 15th, 2010 by இரா. செல்வராசு

அப்பப்பத் தொத்திக்கும் பரபரப்புல எம் புள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக் குடுக்க எறங்கிருவேன். இதத் தொடர்ந்து செய்யணும்னு வருசத்துக்கு ஒருதரம் நெனச்சு அப்புறம் விட்டுப் போயிர்றது ஒரு குறை தான். அத விடுங்க.
ரெண்டு நாள் முன்னால சில தமிழ் வார்த்தைங்க அச்சடிச்ச தாள் ஒண்ணக் காட்டிப் பெரியவளப் படிக்கச் சொன்னேன். ‘கேள்’னு ஒரு வார்த்தை இருந்துச்சு. அதக் ‘கேன்’னு படிச்சுது பொண்ணு.
என்னடான்னு எட்டிப் பாத்தப்போ அந்தச் சின்ன அச்சுல ளகர மெய்யும் னகர மெய்யும் அவளக் குழப்பி விட்டுருச்சுன்னு தெரிஞ்சுது. அசப்புல பாத்தா ளகர மெய்யும் னகர மெய்யும் கொஞ்சம் ஒரே மாதிரியாத் தான இருக்கு. இதெல்லாம் பயபுள்ளைங்க படிக்கறதுக்குக் கஷ்டம் இல்லியா?
தனி ஒருத்தனுக்குச் சோறில்லைன்னா உலகத்தையே அழியுங்கன்னு பாரதி சொன்னானேங்கறதுக்காக அவனுக்குச் சோறு கெடைக்க வழி பண்ணாம, உலகத்த அழிக்க எது வசதி, என்ன பண்ணலாம்னு யோசிக்கற வம்சம் இல்லியா தமிழன்?
அயல்நாட்டுல பகுதிநேரமாத் தமிழ் படிக்கிற கொழந்தைக்குக் கஷ்டம்னு ஆயிரம் ஆண்டா இருக்கற எழுத்த மாத்தி உகர ஊகாரத்த ஒடச்சிச் சீர்திருத்தம் பண்ணிடலாம்னு ஒரு கூட்டம் துடிச்சுக்கிட்டு இருக்கு. அவங்க கிட்ட எம்புள்ள ஒரு நாள் காலைல பள்ளிக்கூடத்துக்குப் போற அவசரத்துல ளகரத்தையும் னகரத்தையும் போட்டுக் கொழப்பிப் பட்ட கஷ்டத்த யாராவது பாத்தா எடுத்துச் சொல்லுங்க. கையோட இதையும் மாத்திச் சீர்சீர்திருத்தம் செஞ்சுரட்டும். Lன்னு ளகரத்துக்கு வச்சுக்கிட்டா ஆங்கில எழுத்துப் படிக்கிற அவளுக்கு சுலபமா இருக்கும். அடடா… டகரத்தோடு கொழம்பீருமா? சரி டகரத்த Tன்னு மாத்தீரலாமே. ‘உகர ஊகார டகர னகர ளகரச் சீர்திருத்தம்’ ன்னு சொன்னாக் கேக்கறதுக்குக் கூட நல்லா ஒரு கவிதையாட்ட இருக்குல்ல!
ஓரத்துல இருக்கறவன் சும்மா இருங்கப்பா. ஒழுங்காச் சொல்லிக் கொடுத்தா ரெண்டு நாள்ல எல்லா எழுத்தையும் சரியாப் படிச்சுக்கும்னு உங்கள யாரு நூணாயம் பேசச் சொன்னது?
என்னது? இத்தன காலமா அச்சடிச்சு வச்சுருக்குற புத்தகமெல்லாம் வீணாப் போகுமா? யாருக்கும் புரியாமப் போயிருமா? இப்போ இதுக்கெல்லாம் தேவை இல்லியா? எழுத்த மாத்தறதுனால எந்தப் பயனும் இல்லைனு அறிஞர்கள் அனுபவத்துல சொல்லி இருக்காங்களா? சைனா, சப்பான்காரனெல்லாம், படம் படமாப் போட்டு ஆயிரக்கணக்குல எழுதிக்கிட்டு இருக்கானே அவனுக்கு இல்லாத கஷ்டமான்னு கேக்கறீங்களா?
சும்மா இருங்கப்பா. உங்கள எல்லாம் யாரு கேட்டா? கேள்வி கேக்க வந்துட்டீங்க? எங்கைய்யா பெரியாரே சொல்லீட்டுப் போயிட்டாரு. என்னது? நான் சொன்னேங்கறதுக்காகச் செய்யாதீங்க. அது சரின்னு உங்களுக்குப் பட்டாச் செய்யுங்கன்னும் அவரே சொல்லியிருக்காரா?
அடப் போங்கப்பா. கை துருதுருங்குது. எதையாச்சும் செஞ்சே ஆகணும். பெரியாரு பேரச் சொன்னாவாச்சியும் கேள்வி கேட்காமப் போயிருவீங்கன்னு பாத்தா, உடமாட்டேன்னு நிக்கறீங்களே?
தமிழ் என்ன உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா?
* * * *
சிறிது தொடர்புடைய இடுகை: கையெழுத்துத் தமிழ்
Tags: எழுத்துச்சீர்திருத்தம், சீரழிப்பு
Posted in தமிழ் | 14 Comments »
Jun 15th, 2010 by இரா. செல்வராசு
அதரி, மூடிதழ், ஓரதர், தடுக்கிதழ், வாவி, ஊடிதழ், அடைப்பிதழ், மடிப்பிதழ் என்று நான் அடுக்குவதைப் பார்த்து ஏதோ திட்டுகிறேன் என நினைத்துவிடாதீர்கள். அண்மையில் தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகள் எழுதப் போன நான், valve என்பதற்கான கட்டுரை ஒன்றை எழுத எண்ணித் தேடியபோது வந்து விழுந்த சொற்கள் தாம் இவை.

தஞ்சைப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலி அதரி என்பதை முன்வைக்கிறது. முதலில் இது எனக்குப் புரியவில்லை என்றாலும், கனடாவில் உள்ள பேரா.செல்வா ‘அதர்’ என்றால் வழி என்பதை வைத்து அதரி என்று வழிப்படுத்தும் கருவியைச் சொல்லலாம் என்று ஓரிடத்தில் விளக்கியிருந்ததை வைத்துப் புரிந்து கொள்ள முடிகிறது.
Valve என்னும் கருவியின் வேலை அது தானே. புழம்பு (பைப்புன்னும் சிலர் சொல்லுவாங்க:-)) ஒன்றின் இணைப்பாக இருந்து அதில் பாயும் பாய்மத்தை தடுத்து நிறுத்தவோ, வேகம்/அழுத்தம் குறைக்கவோ, ஒருவழிப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ பயன்படுத்தப் படும் கருவியே வால்வு.
Continue Reading »
Tags: Valve, தடுக்கு, வால்வு
Posted in பொது, வேதிப்பொறியியல் | 8 Comments »
Apr 9th, 2010 by இரா. செல்வராசு
வருந்துவதற்கும் புலம்புவதற்கும் காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன வாழ்வில். செய்யாத காரியங்கள், செல்லாத பயணங்கள், கிட்டாத வெற்றிகள், பிடிக்காத மனிதர்கள், ஒவ்வாத கருத்துக்கள் என்று துவளவும் உண்டு வழிகள் பல.
அவையெல்லாம் ஒரு பொருட்டா என்று நீலத்தில் தெளிந்து நிற்கிறது வானம். திட்டுப்படலமாய் மேகங்கள். அவற்றிற்கு வெளிச்சச் சாந்து பூசி வீசும் கதிரொளி. நறுமணம் வீசும் தென்றல். அதன் சிறுகுளிர்ச் சிலிர்ப்பைப் போக்கும் இளஞ்சூட்டுக் கதிர்.
புதிய இலைகளும் பூக்களுமாய்க் குலுங்கி நிற்கும் மரங்கள். இவை எல்லாமுமாய், எல்லாச் சலிப்புக்களையும் கலைத்தெறிந்து வாழ்க்கையைக் கொண்டாடப் பல்லாயிரம் காரணங்களைச் சொல்லி அமைகிறது வசந்தம்.
கடுங்குளிரில் வீட்டினுள் சிறு தொட்டியினுள் வாடியிருந்த சின்னஞ்சிறு செடி ஒன்றும் கூட அழகானதொரு பூவினைப் பூத்துக் கொண்டாடுகிறது. ஓக் மரங்களின் மகரந்தப் பெருவெடிப்பில் ஒவ்வாமை வந்து சேரும் ஒரு நாள் என்றாலும், இன்று இக்கணம் தன்னைக் கொண்டாடும் வசந்தத்தைக் கொண்டாடுகிறேன்.
இக்கணம் ஒவ்வொன்றும் மந்திரத் தன்மை வாய்ந்தது. இந்தக் கணத்தின் சிறு துளியில் உயிருடன் இருப்பதற்கு மகிழ்கிறேன். நன்றியுடையவனாக இருக்கிறேன். நிறைவடைகிறேன்.
Tags: வசந்தம்
Posted in பொது | 8 Comments »
Sep 30th, 2009 by இரா. செல்வராசு
இத்தனை நாள் இல்லாமல் இப்போ மட்டும் எதுக்கு இந்த உறவு என்று ‘வாழத்தோட்டத்து’ப் பெரியப்பாவைப் பார்க்கத் தான் வருவதாயில்லை என்று அடம் பிடித்தான் சிவக்குமார். பெரியப்பா என்று கூடச் சொல்ல அவனுக்குப் பிடிப்பதில்லை. ‘வாழத்தோட்டத்தார்’ என்று தான் குறிப்பிடுவான்.
வருடம் ஒருமுறையேனும் அவர்கள் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அருகே இருந்த சொந்த ஊருக்குச் சென்று பங்காளி சொந்தமெல்லாம் பார்த்து வருவது இப்போது வழக்கமாகி இருந்தது. ஈரோட்டில் இருந்தவரை சிவக்குமாரும் தவறாமல் எல்லா வருடமும் ஊருக்கு வந்து போயிருக்கிறான். பள்ளி முடிந்து கல்லூரியில் பொறியியல் படிக்கக் கோவைக்குப் போன காலத்தில் இருந்து அவன் ஊருக்கும் கோயிலுக்கும் போவது கொஞ்சம் குறைந்து தான் போனது.
“இந்தத் தடவ உன் பெரியப்பா வீட்டுக்கும் போயிட்டு வரோணும்ப்பா” என்று அப்பா தான் ஆரம்பித்தார். “நாலு மாசம் முன்னாடி உங்க அண்ணன் தோட்டத்துல பாம்பு கடிச்சுச் செத்துப்போயிட்டான்”.
“ஆமாப்பா. என்ன தான் சண்டையினாலும், இதுக்கு நீயும் வந்து ஒரு வார்த்த கேட்டுட்டுத் தான் வரணும்” என்று அம்மாவும் கூடச் சேர்ந்து கொண்டார்கள்.
“ஏம்மா… உங்களை அத்தனை அவமானப் படுத்துனவங்க வீட்டுக்கு எப்படிங்கம்மா போகணும்னு சொல்றீங்க?” என்று கேட்டாலும், ஒரு மரணம் மன உறுதியைச் சற்று வலுவிழக்கத் தான் செய்கிறது. ஒரு சாவினால் பிறவற்றை மறந்துவிடவேண்டுமா என்று கேள்வி எழும்பினாலும், அது பக்குவமான கேள்வியில்லை என்று தயங்க வைத்து, ஒரு கணம் நின்று மறுபக்கத்தின் நிலையையும் யோசிக்கவே வைக்கிறது.
“சரி விடுங்க. போய்ட்டுத் தான் வரலாம்”.
Continue Reading »
Tags: சிறுகதை, புனைவு
Posted in சிறுகதை | 11 Comments »