Feed on
Posts
Comments

2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு.

அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன்.

வலைப்பதிவு மற்றும் இதர இணையத் தளங்களுக்கும் இவனைத் தொலைத்து விடுவோமோ என்னும் கவலைக்கும், நன்றாகவும் நிறையவும் எழுத ஊக்குவிக்க வேண்டுமென்னும் ஆர்வத்திற்கும் இடையில் ஊசலாடும் மனைவியின் நிலை பற்றியும் அறிவேன். வளர்ந்து வரும் மக்களின் நல்வாழ்விற்கும் இனிய அனுபவங்களுக்கும் அவர்களோடு கழியும் நேரங்களும் தவிர்க்கக் கூடாதவை.

நாம் வாழ்ந்த காலத்தின் நினைவுகளும் எண்ணங்களும் கூட நமது காலத்திலேயே வெறும் புகையாய்க் கலைந்து போகும் முன்னே அவற்றுள் சிலவற்றையேனும் எழுத்தில் ஆவணப் படுத்தி வைக்க முடியுமா என்னும் ஆதங்கமும் ஒருபுறம். என்னுடைய துறைசார் விவரங்களை எளிமையாகவும் சுவையாகவும் (அல்லது இவ்விரண்டும் இல்லாவிட்டாலும் சரி) கொஞ்சம் எழுத முயலலாம் என்றும் எண்ணம்.

இவற்றினிடையே தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா, வள்ளுவன் தமிழ் மையம், போன்ற தன்னார்வப் பணிகளுக்கு என்னுடைய நேரத்தில் சிறு பங்கை அளித்து வருகிறேன். அவற்றையும் திறனோடு தொடர விருப்பம் உண்டு. (இதில் அமெரிக்கத் தமிழ்க்கல்விக்கழகமும் சேர்ந்து கொள்ள வாய்ப்புண்டு). தமிழா கட்டற்ற தமிழ்க்கணிமை குழுவிலும் பணியாற்ற விருப்புடன் சேர்ந்து இன்னும் மறைவாய் இருக்கிறேன் :-).  இவையன்றி மேலும் வரும் சில வேண்டுகோள்களை மறுத்து வருகிறேன்.

இவை அனைத்தும் ஒரு சமன்பட்ட ஈடுபாட்டில் இயன்றவரை செய்ய முடியுமா என்று இவ்வாண்டும் தொடர்ந்து முயல்வேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பொங்கல் வாழ்த்துகளும் புதிய ஆரம்பங்களுக்கான வாழ்த்துகளும்.

புதிய ஆரம்பங்கள் புத்தாண்டின் போது மட்டும் தான் ஆரம்பிக்க வேண்டுமென்பதில்லை.

 

நினைவு நல்லது வேண்டும்

நெருங்கின பொருள் கைப்படவேண்டும்.

ஓம் ஓம் ஓம்!

குறிப்பு: வள்ளுவன் தமிழ் மையம் தமிழ்ப்பள்ளியின் சார்பாகச் சென்ற வாரம்  நடந்த தமிழர் திருநாள் விழாவில், சலங்கை ஆர்ட்சு அகிலா சுப்ரமணியம் அவர்களின் வழிப்படுத்தலில் என் மகள்கள் இருவரும் பங்கு கொண்ட குழு நடனம்.

செய்யவேண்டிய செயல்கள் எனப் பட்டியல் போடும் பழக்கம் ஏதோ ஒரு வகையில் எனக்குப் பல காலமாக, பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே இருக்கிறது. அவ்வேலைகள் திறம்படச் செய்யப்படுகின்றனவா என்பது வேறு விசயம். மேலும் அது பற்றிப் பேசும் முன் ஒரு சிறு கிளைக்கதைக்குள் நுழைந்து வருவோம்.

ஈரோட்டில் முக்கியமான ஒரு சந்திப்பான பன்னீர்செல்வம் பூங்காவிலிருந்து கச்சேரி வீதி வழியாகப் போனால், அருகில் காரை பெயர்ந்த சுற்றுச்சுவரோடு தாசில்தார்வட்டாட்சியர் அலுவலகம் வரும். அதன் எதிரே வரிசையாகச் சில நகலெடுக்கும் கடைகள் (xerox) இருக்கும். நகலாக்கும் கடைகள் என்றாலும் அவை இன்னும் பல சேவைகளை அளித்து வரும். அரசுக்கு விண்ணப்பிக்க வேண்டிய படிவங்கள் விற்பனைக்குக் கிடைக்கும். மற்றும் ஆவணங்கள், கடன்பத்திரங்கள், அவற்றிற்கு ஒட்டவேண்டிய வருவாய்த்தலைகள் (revenue stamps) முதலியனவும் கிடைக்கும். அவற்றை எழுதிக் கொடுப்போர், ஆலோசனைகள் சொல்வோர் என்று பலரும் அங்கு இருப்பர். வரிசையாகப் பல தட்டச்சும் தாவணிப் பெண்கள் அக்காலத் தட்டச்சிகளில் தட்டச்சிக் கொண்டு சில வினாடிகளுக்கு ஒருமுறை அதன் நெம்புகோலை (lever) ஒரு முனையில் இருந்து மறு முனைக்குத் தள்ளிக் கொண்டிருப்பர்.

அக்கடைகளில் தட்டச்சவும் பிற ஆவணங்கள் எழுதவும் தேவையான தாள்களை மொத்தமாகப் பெரிய அளவில் வாங்கி, சரியான அளவில் (A4 முதலியன) தேவைப்படும் அளவில் வெட்டி வைத்துக் கொள்வர். வெட்டியது போக எஞ்சி இருக்கும் துண்டுத் தாள்கள் நிறையக் கிடைக்கும். சுமார் இரண்டு அல்லது மூன்று அங்குல அகலமும், எட்டு/ஒன்பது அங்குல நீளமும் உள்ள அத்துண்டுகளைக் குத்துப்புள்ளித் தாள்கள் என்பர். ஒரு குடும்ப நண்பர் வைத்திருந்த கடையில் சொல்லி வைத்திருந்தால் அந்தத் துண்டுத் தாள்களை எறிந்துவிடாமல் எடுத்து வைத்துத் தருவார்கள். அதை எனது வீட்டிலும், தாத்தா/மாமாவின் கடையிலும், ஏதேனும் பட்டியல் போட, குறிப்புகள் எழுத, சிறு கணக்குகள் எழுத என்று பயன்படுத்துவார்கள்.

"நடராசு, அப்புறமா நீங்க இங்க வர்றப்பக் கொஞ்சம் குத்துப் புள்ளித் தாள் இருந்தா எடுத்துட்டு வாங்க"

"சரிங்கையா"

Continue Reading »

புவியீர்ப்பு விசையின்றி மிதக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தன் விருப்பமொன்றை முன்பொரு நாள் வெளிப்படுத்தினாள் நிவேதிதா. "It will be so cool! "

பள்ளியில் ஏதேனும் விண்வெளி வீரர் விண்கலத்தினுள் மிதக்கும் அசைபடங்கள் காட்டப் பட்டிருக்கலாம். இல்லை அவளாகவே எங்காவது படித்திருக்கலாம். அப்போலா-13 படத்தை வலுக்கட்டாயமாகப் பார்க்க வைத்த அன்று கூடக் குப்புறப் படுத்துத் தூங்கினார்களே இருவரும்? ஒருவேளை வான்வெளியில், விண்கலத்தினுள் ஆள்களும் பொருள்களும் மிதக்கும் அக்காட்சி வரும்போது விழித்துத் தான் இருந்தார்களோ?

clip_image001

"அந்த மாதிரி எடம் அமெரிக்கால எங்கயோ இருக்குடா. போய்க் கொஞ்சம் நேரம் அப்படி ஈர்ப்புச்சக்தி இல்லாம மெதக்க முடியும்னு நினைக்கறேன்"

Continue Reading »

"ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க", என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் வைப்பார்கள். முழுதாக அதே பெயர் இல்லை என்றாலும் அதில் ஏதேனும் ஒரு பகுதியோ, எழுத்தோ இருக்கும். அப்படித் தான் என் பெயரிலும் ஒரு ராசு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

clip_image001

அப்பேர்ப்பட்ட எங்கள் சாமி ராசாவையனைக் கூட இப்போது யாரோ ராஜலிங்கமூர்த்தி என்று பெயரை மாற்றி விட்டார்கள். பத்தாததுக்கு முன்னாலே ஒரு ஶ்ரீயையும் போட்டு வைத்து விட்டார்கள். யார் இப்படி மாற்றியது எனத் தெரியவில்லை. ஆனாலும் எனக்குத் தெரிந்ததெல்லாம் என் அம்மா, அப்பா, ஊர்ச்சனம் எல்லாம் சொல்லித்தந்த ராசாவையன் தான்.

Continue Reading »

எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு.

image

Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் என்பது முழுதும் தொடர்பில்லா எச்சுத் தகவல்கள்.

கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் பிறந்து வளர்ந்த எர்ணான்டொ டேய்யசு இளம் வயதிலேயே பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் எழுதி வந்தாலும், தனது நாற்பதுகளில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பிறகே மிகவும் அறியப்பட்டிருக்கிறார். பின்னர், கொலம்பிய அரசிலும், ஐக்கிய நாடுகள் சபையிலும் பணி புரிந்திருக்கிறார். இவர் வாழ்ந்த காலத்தில் கொலம்பியா பல உள்நாட்டுப் போர்களும், இராணுவக் கெடுபிடிகள், வன்முறை, போன்றவற்றைச் சந்தித்திருக்கிறது. தனது பிறந்த மண்ணின் சோகங்களையும் சோதனைகளையும், நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும் ஊன்றிக் கவனித்து அதையொட்டிய கதைகளைத் தனது எழுத்தின் மூலம் அலங்கரித்திருக்கிறார் - என்னும் இவ்விவரங்கள் எல்லாம் பொதுவில் ஒரு கூகுள் தேடலிலோ விக்கிப்பீடியாவின் மூலமோ எளிதில் தெரிந்து கொள்ளலாம். வரலாற்றின் மாணவராக இருந்து இவர் முந்தைய நூற்றாண்டுகளில் நடந்த மூன்று புரட்சிப்போர்களால் வெனிசுவேலா, எக்குவடோர் நாடுகள் கொலம்பியாவில் இருந்து பிரிந்து போனதைப் பற்றியும் நன்கு புரிந்து வைத்திருந்தார் என்கிறது விக்கி.

Continue Reading »

Older Posts »