இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

மச்சினிக்கு ஒரு மங்கல வாழ்த்து

May 16th, 2004 · 11 Comments

இன்று என் மச்சினிக்கு, மனைவியின் தங்கைக்கு, தமிழகத்திலேதிருமணம். வானத்துக் கோள்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எங்களால் விமானம் ஏறிப் போக முடியவில்லை. தொலைதூரத்தில் இருந்து வாழ்த்து மட்டுமே சொல்ல முடிந்தது. அய்யர் வரும் வரையில் அமாவாசை காத்திருப்பதில்லை. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமணம், அக்கா வரும் வரை எல்லாம்காத்திருப்பதில்லை. எங்கிருந்தாலும் எங்களின் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து கொண்டு எங்கள் எண்ணங்கள் அவர்களைச் சென்றடையும்.

இப்படித்தான் இளவேனிற்காலத்தில் ஒரு நாள் – இதேவைகாசிமாதம்- நானும் என் மனைவியும் மணம் செய்துகொண்டோம். அதே ஊர். அதே மண்டபம். அப்படியே தான், அன்று போல் இன்றும்இனிமையாய் நடந்து முடிந்திருக்கும் இவர்களின்திருமண வைபவமும்…

* * *


இந்நாள் நாயகனும் நாயகியும், கனவுகளும், கற்பனைகளும், கலப்பட உணர்ச்சிகளும், பரவசமுமாய்க் கண் விழித்திருப்பர். காலையில் பெண் வீட்டுச் சுற்றங்கள் சென்று மாப்பிள்ளையை அழைத்து மண்டபத்திற்கு வந்திருப்பர். நெருங்கிய சுற்றம் சூழ மணப்பெண்ணும் பிறகு மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருப்பார். ஓரிரு வார்த்தைப் பரிமாற்றங்கள் இருந்திருக்க்லாம். வேற்றறையில் இருக்கும் அவர் என்ன செய்கிறார் என்று எண்ணம் மற்றவர் பின்னே சென்று சுற்றிக் கொண்டிருக்கும். முன்னிருப்பவர் யாரோ கூறும் மொழி ஏதோ கேட்டுத் தலை மட்டும் தனியாய் ஆடிக் கொண்டிருந்திருக்கும்.

ஊருக்குச் சென்றிருந்தால், உண்மையான மலர்ச்சியை முகத்தில் தேக்கித் தன் தங்கையின் கூடவே என் மனைவி இருந்திருக்கக் கூடும். தங்கையின் தேவைகளைக் கவனித்துக் கொண்டு, சற்றே கிண்டல் செய்து கொண்டு, இயற்கையாய் அவர் முகத்தில் செம்மை பரவச் செய்து, “பாருங்க்கா இப்படிப் பண்ணிட்டாங்க…” என்கிற அவரின் வேடிக்கைப் புலம்பல்களுக்குத் தோள் கொடுத்து ஆதரவாய் அருகே இருந்திருக்கக் கூடும். எம் சுட்டிப் பெண்கள் இருவரும் காந்தமாய் அனைவர் கவனத்தையும் ஈர்த்து முறையே “சித்தி… சித்தி…” என்று அங்கே வளைய வந்திருக்க முடியும்.

இன்று உடன் இல்லை எனில் என்ன? இரு வாரங்களில் அவர்களே அமெரிக்கா வந்துவிட வாய்ப்பு இருக்கிறதே !

வாழை மரங்கள் தோரணங்கள் வாயிலில் வரவேற்றிருக்கும். மத்தளம் நாதசுரம் மற்றபிற வாத்தியங்கள் மங்கல ஒலியை மன்றில் நிறைத்திருக்கும். மெல்ல நட்பும் சுற்றமும் சூழத் தொடங்கி இருக்கும். வண்ணங்கள், சுகந்தங்கள், இனிமைகள் காற்றில் கலந்திருக்கும். வளையல்களும் கொலுசுகளும் சப்தமிட, அங்கே சீர்களும் சிறப்புக்களும், சீரோடும் சிரிப்போடும் காலத்தோடும் கலந்து நடந்திருக்கும்.

அந்த இரவு உறங்காமலே மீண்டும் ஒரு காலை பிறந்திருக்கும்.

புதிது கட்டி, தோழர் தோழியர் புடைசூழ, மங்கல வாத்தியங்கள் இசைக்க, மணமக்கள் மணவறைக்கு வந்திருப்பர். விடலைத் தம்பியர் தாமும் வேட்டி கட்டிப் பெரும் தோரணை காட்டியிருப்பர். பட்டம் கட்டி மாமன் வீட்டார் பொட்டு வைத்து அனுப்ப, பூசைகள் நடக்கும். பாட்டுக்கள் கேட்கும். எல்லாவற்றின் ஊடேயும் இவரருகில் நான், இனி என்ன என்று இருவர் மனதில் ஒரு நாடகம் அரங்கேறி இருக்கும். கெட்டி மேளச் சத்தம் நிஜத்திற்கு அழைத்து வர, மங்கல நாண் கழுத்தேறும். மாலைகள் இடம் மாறும். பெற்றவர் மகிழ, சபையினர் அட்சதை தூவ, உணர்ச்சிகளில் பல கண்கள் பணிக்க, அனைவரும் வாழ்த்த, இன்னுமொரு இளஞ்சோடி அங்கே வாழ்க்கைப் பாதையில் கரம்சேர்த்து மனம்சேர்த்து பயணத்தைத் தொடங்கியிருக்கும்.

மங்கலக்காரன் வந்து கணீர்க்குரலில் மங்கல வாழ்த்துச் சொல்லி இருப்பான். மத்தளம் ஒத்துப் பாடி இருக்கும். டும் !

புதிய மணமக்களே – உமது பயணம் சிறக்க, பலகல்வி கற்க, ஏற்ற இறக்கங்களில் பாங்குடனே செலுத்திக் கொள்ள, எந்நாளும் இனிமை சேர, எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு !

“…
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி !

கொங்கு நந்நாட்டுக் குடிகளும் வாழி !

இந்தப் பாட்டுக் கேட்டவர் வாழி !
…”

Tags: கொங்கு · வாழ்க்கை

11 responses so far ↓

  • 1 ராஜா // May 17, 2004 at 1:05 pm

    உங்கள் மகிழ்சியில் நாங்களும் பங்கெடுத்து கொள்கிறோம்.

    மண மக்கள் எல்லா இன்பங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • 2 Tulsi Gopal // May 17, 2004 at 10:05 pm

    MaNamakkaLukku idhO oru vaazhththu, from New Zealand

    IndRupOl endRum vaazhga!!!!!!!

  • 3 -/இரமணிதரன், க. // May 18, 2004 at 2:05 am

    appidiyE

  • 4 Vassan // May 19, 2004 at 12:05 am

    வாழ்த்துகள் செல்வராஜ்.

    புலம் பெயர்தலால் நாமே ஏற்படுத்திக் கொள்கிற நட்டங்களில் ஒன்று,குடும்ப திருமணங்களுக்கு போக இயலாமற் போவது.என் திருமணத்திற்கு தம்பி ( தமிழகம்)வர முடியவில்லை.நான் அவரது திருமணத்திற்கு (தமிழகம்)போக இயலவில்லை.

    !அருமைக்காரர் என்பதற்கு கொங்குத்தமிழில் பொருள் என்ன..? நன்றி.

    அண்ணனின் மனைவியை அருமையாள் என்றழைப்பது எமது குடும்ப வழக்கம்.

  • 5 Dubukku // May 19, 2004 at 7:05 am

    வாழ்த்துக்கள் செல்வராஜ்

  • 6 krishnamurthy // May 20, 2004 at 12:05 am

    Convey my best wishes for a very happy and purposeful married life to the new couple. Karthi must be feeling very much for missing this occasion. BAck home your in laws must be missing u all a lot. What to do. Heavy prices taken from us for this life! Only on these occasions we do the soul search of our acts in coming here. Globalised village concept/thinking alone can make us get a solace. To a greater extent we get somewhat satisfied with our foreign life. But what about our parents?

  • 7 Anbu. S // Jul 20, 2004 at 11:07 am

    வாழ்த்துக்கள். ஈரோடில் படித்ததால் அருமைக்காரர் என்றால் என்னவென்று தெரியும். தெக்கத்தி பாசைல ‘அம்பலகாரர்’ என்று சொல்லுவோம். அவர்தான் எங்க பக்கம் திருமணத்தை முன்னின்று நடத்திவைப்பார். நன்றி.

  • 8 M.sekar // Feb 16, 2010 at 2:26 pm

    vy good i want mangala vaalthu audio

  • 9 M.sekar // Feb 16, 2010 at 2:29 pm

    i want kongu mangala vaalthu audio

  • 10 bharathi // Jan 20, 2011 at 2:48 pm

    i want marriage mangalavalthu audio& this audio

  • 11 இரா. செல்வராசு // Jan 20, 2011 at 6:49 pm

    மங்கல வாழ்த்து ஒலிக்கோப்பும் உரையும் இப்பதிவில் இருந்து பெறலாம்.
    http://sundardiary.blogspot.com/2009/05/mangala-vazhthu-download-here.html