இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

வசந்தம் 2010

April 9th, 2010 · 9 Comments

வருந்துவதற்கும் புலம்புவதற்கும் காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன வாழ்வில். செய்யாத காரியங்கள், செல்லாத பயணங்கள், கிட்டாத வெற்றிகள், பிடிக்காத மனிதர்கள், ஒவ்வாத கருத்துக்கள் என்று துவளவும் உண்டு வழிகள் பல.

Spring 2010அவையெல்லாம் ஒரு பொருட்டா என்று நீலத்தில் தெளிந்து நிற்கிறது வானம். திட்டுப்படலமாய் மேகங்கள். அவற்றிற்கு வெளிச்சச் சாந்து பூசி வீசும் கதிரொளி. நறுமணம் வீசும் தென்றல். அதன் சிறுகுளிர்ச் சிலிர்ப்பைப் போக்கும் இளஞ்சூட்டுக் கதிர்.

புதிய இலைகளும் பூக்களுமாய்க் குலுங்கி நிற்கும் மரங்கள். இவை எல்லாமுமாய், எல்லாச் சலிப்புக்களையும் கலைத்தெறிந்து வாழ்க்கையைக் கொண்டாடப் பல்லாயிரம் காரணங்களைச் சொல்லி அமைகிறது வசந்தம்.

கடுங்குளிரில் வீட்டினுள் சிறு தொட்டியினுள் வாடியிருந்த சின்னஞ்சிறு செடி ஒன்றும் கூட அழகானதொரு பூவினைப் பூத்துக் கொண்டாடுகிறது. ஓக் மரங்களின் மகரந்தப் பெருவெடிப்பில் ஒவ்வாமை வந்து சேரும் ஒரு நாள் என்றாலும், இன்று இக்கணம் தன்னைக் கொண்டாடும் வசந்தத்தைக் கொண்டாடுகிறேன்.

இக்கணம் ஒவ்வொன்றும் மந்திரத் தன்மை வாய்ந்தது. இந்தக் கணத்தின் சிறு துளியில் உயிருடன் இருப்பதற்கு மகிழ்கிறேன். நன்றியுடையவனாக இருக்கிறேன். நிறைவடைகிறேன்.

Tags: பொது

9 responses so far ↓

  • 1 திகழ் // Apr 9, 2010 at 2:35 am

    இயற்கை ஒப்பனை செய்து கொண்டு இலவசமாக ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது.நமக்கோ திரையில் ஒப்பனை செய்து ஒளி வீசும் தாரகைகளைப் பார்க்க பணம் கொடுத்து ஒடுகின்றோம். இப்படி தான் இருக்கிறது வாழ்க்கை? என்ன செய்ய

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இடுகை

    வாழ்க்கையையும் வசந்தத்தையும் கொண்டாடுவோம்

    அன்புடன்
    திகழ்

  • 2 Balaji-paari // Apr 13, 2010 at 11:16 am

    Arumai. Niraivaaga irukindrathu. Oru puthu thuvakkam pola irukkindrathu.
    Nandrigal.
    (PS: Thanglish-kku mannikavum)

  • 3 yozen balki // Apr 26, 2010 at 1:47 pm

    நான் ஒரு மனோதத்துவ தொழிலன்! எப்படியோ உங்கள் வலைத் தளத்தை பார்க்க நேர்ந்தது! நல்ல தமிழ் எழுதும் நெஞ்சை வாழ்த்தாமல் எப்படிப் போவது? அதென்ன முழு நேர எழுத்துத் தொழிலை உதறிவிட்டு பகுதி நேரமாய் “கூழுக்கு வேலை” பார்க்கிறீர்களா? சும்மா-ஒரு இதுக்குச் சொன்னேன்! உண்மையில் உங்கள் எழுத்துக்கள் சொல்ல வேண்டிய செய்தியை நயமாகவும், நறுக்கென்றும் தலை சிறந்த எழுத்தளர்களுக்கு நேர்வைத்துச் சொல்லிவிடுகிறது! அடுத்த ஜன்மத்தில் நீங்கள் பிரம்மச்சாரி எழுத்தாளராகஇருந்து நிறைய தமிழ்ச் சமூகத்துக்கு எழுதி கதி மோட்சம் அடையக் கடவது! நிறைந்த அன்பும் வாழ்த்துக்களும்!
    visit my blog http://www.yozenbalki.blogspot.com

  • 4 Sivasankar // Apr 26, 2010 at 11:36 pm

    Selva: Beautiful. When I look at our small garden, I am amazed at the plants and trees – each have a very unique pattern for growing, each have great resilience – they withstand rains, hot sun, hail stones, dusty strong winds, dry/cold weathers.. It is nice to touch them, feel them.. They allow life to grow on them, around them.. We just need to take some time to observe them.. I sometime feel that we really don’t have to go very far.. We just need to learn to observe.. I enjoyed your smooth and beautiful writing.. Keep going..

  • 5 kadambari // Apr 27, 2010 at 2:04 am

    i just went through your blog sometime last month.nice. but what is the symbol coming in all your post?(an yellow round with eyes)suppose to be a smiling face is it?- kadambari

  • 6 இரா. செல்வராஜ் // Apr 27, 2010 at 8:51 am

    kadambari – நீங்கள் எதைப்பற்றிக் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. எனக்கோ வேறு யாருக்குமோ அப்படித் தோன்றுவதாகத் தெரியவில்லை. முன்னர் உங்களது பின்னூட்டத்தை எரிதம் எனக் கருதி விலக்கி விட்டேன். மீண்டும் நீங்கள் சொல்வதால் எரிதமல்ல என நினைக்கிறேன். மற்றபடி உங்கள் நற்கருத்துக்களுக்கு நன்றி.

    சங்கர் – மிக்க நன்றி. சரியாக உள்வாங்கி இன்னும் அழகாக இக்கருத்தினை வெளிப்படுத்தி இருக்கிறாய். ஆண்டாண்டுகளின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி.

    yozen balki – உங்களின் கனிவுக்கு நன்றி. உண்மை தான். முழு நேர எழுத்தாளன் இல்லாமல் வேறு வேலைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இருப்பினும், அதையும் சமன்படுத்தி எழுத்தில் ஈடுபடவும் வேண்டும். இவை தவிர, தமிழ்மணம் முதலான இன்னும் சில ஈடுபாடுகள் இருப்பதாலும் நேரக் குறை. பிரம்மச்சரியம் நேரத்தை இன்னும் கொஞ்சம் தரலாம் என்றாலும் 🙂 எனது எழுத்துக்கான உந்துதலைத் தரும் உற்றம் சுற்றம் இல்லையெனில் சிறப்பிருக்குமா எனத் தெரியவில்லை. உங்கள் தளத்திற்கும் சென்று சிறிது பார்த்தேன். அறிதுயில் குறித்த ஜெயா செவ்வியையும் கண்டேன். சுவாரசியமாக இருந்தது. எனது ஆர்வத்திற்குக் காரணம் பள்ளி/கல்லூரி நாட்களில் பல காலம் (ஆண்டுகள்) தொடர்ந்து ஆழ்நிலைத் தியானம் செய்ய முற்பட்டது உண்டு. கால ஓட்டத்தில் தொலைத்தவற்றுள் இதுவும் ஒன்று.

    பாலாஜி-பாரி, திகழ், உங்கள் கருத்துக்களுக்கும் அன்பிற்கும் எனது காலந்தாழ்த்திய நன்றியும்.

  • 7 SRK // Apr 27, 2010 at 11:21 am

    //kadambari – நீங்கள் எதைப்பற்றிக் கூறுகிறீர்கள் எனத் தெரியவில்லை. எனக்கோ வேறு யாருக்குமோ அப்படித் தோன்றுவதாகத் தெரியவில்லை//

    அனேகமாக உங்கள் தளம் வர்ட் பிரஸ்ஸில் இயங்குகிறதென்று நினைக்கிறேன். தள பார்வை தகவல்களை திரட்ட வர்ட் பிரஸ் ஒரு சிரிப்பான் படத்தை ஒவ்வொரு பக்கத்திலும் சொருகுகிறது. அதை உங்கள் ஒவ்வொரு வலைப்பக்கத்தின் அடியிலும் காணலாம். காதம்பரி அதைத்தான் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

    கீழே உள்ள சுட்டி அந்த சிரிப்பானுக்கான தொடுப்பு.

    http://stats.wordpress.com/g.gif?host=blog.selvaraj.us&rand=0.8689789902418852&blog=1949327&v=ext&post=0&ref=http%3A//blog.selvaraj.us/archives/324

  • 8 இரா. செல்வராஜ் // Apr 27, 2010 at 9:25 pm

    சத்யராஜ்குமார், தகவலுக்கும் சுட்டிக்கும் நன்றி. இது எனது வோர்ட்பிரஸ் அறிவு பின் தங்கிப் போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஸ்டாட்ஸ் பற்றிக் கொஞ்சம் பார்த்ததில் இந்தச் சிரிப்பானுக்கு (சிரிப்பாளுக்கு) ஏஞ்சலா என்றும் பெயரிட்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. இத்தனை நாள் இவற்றைப் பார்க்கவும் இல்லையே என நினைத்துக் கொண்டேன்.

    காதம்பரி, இந்த மஞ்சள் நிறப் படத்தை மறைக்க உதவும் ஒரு வரியைச் சேர்த்திருக்கிறேன். மீண்டும் இப்பக்கம் வந்தால் வேலை செய்கிறதா என்று சொல்லுங்கள். (உங்கள் முதல் பின்னூட்டத்தில் faces என்பதில் பிழையாக aவுக்கு பதில் e வந்து விழுந்ததில், (அதுவும் மஞ்சள் நிறம் என்று!) முழுதாய்ப் பொருளே மாறிப் போய் 🙂 ஏதோ எரிதம் என நினைத்துவிட்டேன். மன்னிக்க. )

  • 9 mohamedalijlnnah // Dec 26, 2010 at 10:08 am

    வசந்த காலம் தொடர்ந்து நீடிப்பதில்லை அது போல் வாழ்விலும் வசந்தம் தொடர்ந்து இருந்துதான் ஆக வேண்டும் என்று எண்ணாமல் கிடைத்த காலத்தினை அனுபவித்து மகிழ்வதுதான் சிறப்பு