இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

தமிழ்மணமும் கருத்துச் சுதந்திரமும்

January 27th, 2006 · 22 Comments

ஆகா, புல்லரிக்கிறது! கருத்துச் சுதந்திரக் காவலர்கள் உருவிய வாளுடன் களத்தில் குதித்து விட்டார்கள். தாறுமாறாய்க் காற்றில் வீசிக் கொண்டு அவர்கள் போடுகிற சத்தத்தில் எதைச் சொன்னாலும் காதில் விழாமல் போகிற இக்கு இருக்கிறதென்றாலும் சில தெளிவுகளை முன்வைக்க வேண்டும். முதலில், ஒரு சக வலைப்பதிவாளராகவே இதனை எழுதுகிறேன்.

உங்களது சுதந்திரத்திற்கு இப்போது என்ன ஐயா ஊறு நேர்ந்துவிட்டது? பதிவுகளின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது உங்கள் கொள்கைக்குப் புறம்பானது என்றால் விட்டுவிடுங்கள். யாரும் குரல்வளையைப் பிடித்துக் கொண்டு மிரட்டவில்லையே!

உங்களுக்கு என்று ஒரு உரிமை இருப்பதைப் போலத் தமிழ்மணம் என்கிற அமைப்பிற்கும் தனது கொள்கைகளை நிர்ணயித்துக் கொள்ளவும், வேண்டும் போது மாற்றிக் கொள்ளவும் உரிமையும் சுதந்திரமும் இருக்கிறது என்பதை நியாயம் உணர்ந்த எவரும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அந்த நியாயம் உணராதவர்கள் இவ்வமைப்பில் இணைத்துக் கொண்ட போது ஒப்புக் கொண்ட Terms and Conditions-ஐ மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளும்படி நினைவுறுத்திக் கொள்கிறேன்.

உண்மை தான். மட்டுறுத்தல் முறையில் சில வசதிக் குறைவுகள் இருக்கத் தான் செய்கின்றன. பின்னூட்டங்களை அனுமதிக்க முன்பை விடச் சற்று அதிகம் வேலை செய்ய வேண்டும். இன்னும் கற்பனையில் உதித்தவை பல வசதிக் குறைவுகளாகவே இருக்கலாம். குறைகளாகச் சித்தரிக்கப் படுகிற சில எனக்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், அவ்வாறு கருதுவது உங்கள் உரிமை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதே சமயம், பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாத பதிவுகளில் தமிழ்மணத்தின் கொள்கைகளுக்கு ஏற்புடையதாய் இல்லாதவை சிலசமயம் இடம்பெறுகின்றன என்றோ (ஆபாசம்), வேறு நுட்பக் காரணங்களுக்காகவோ (எரிதம்), (காரணமே ஏதுமில்லாமலேயோ கூட இருக்கலாம்), சில கொள்கை முடிவுகளைத் தமிழ்மணம் எடுத்திருக்கிறது. என்ன அது? ‘மறுமொழியப்பட்ட பதிவுகள்’ என்று முகப்புப் பக்கத்தில் முன்னிலைப்படுத்தும் தமிழ்மண வசதியைப் பயன்படுத்த விரும்புவோர் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்து கொள்ள வேண்டும் என்பது.

இங்கே இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, இந்தக் குறிப்பிட்ட வசதி வேண்டுமென்று விரும்புபவர்கள் பின்னூட்ட மட்டுறுத்தலை நிறுவிக் கொள்ளலாம். இல்லை, மட்டுறுத்தல் ‘எங்க சாமிக்குச் சேராதது’ என்று எண்ணுகிறீர்களா? நன்று. இந்த வசதியைப் பயன்படுத்த வேண்டாம். இதில் யார் சுதந்திரத்திற்குப் பங்கம் வந்தது? இதற்குக் கூடக் கோனார் தெளிவுரை தேவையா?

தமிழ்மணத்தின் இந்தக் கொள்கை முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் அதனைப் புரிந்து கொள்வதாகவும், தான் இனி இந்த வசதியைப் பயன்படுத்தவில்லை என்றும் சரியானபடி முடிவு செய்தவர்களும் இங்கு இருக்கிறார்கள் என்பது ஆறுதலாய் இருக்கிறது. நான் அறிந்து அப்படி முடிவு செய்தவர் ஒரே ஒருவர் தான் என்பது மட்டும் தான் சோகம்! (யார் என்று வெளிப்படையாகச் சொன்னால் அவர் பதிவில் ஒரு ஆபாசக் குண்டுவெடிப்பு இக்கு இருக்கிறது என்பதால் தவிர்க்கிறேன்).

அவரைப் போன்றே, மட்டுறுத்தல் செய்ய விருப்பம் இல்லை என்பவர்கள் இருந்து கொள்ளலாம். அவரவர் பின்னூட்டங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு களையெடுத்துக் கொண்டு இருப்பதைத் தமிழ்மணம் ஆட்சேபிக்கவில்லையே. அப்படி ஒரு நிலையில் சில ஆபாசப் பின்னூட்டங்கள் நீக்கப் படாமல் இருக்கும் நிலையில் அந்தப் பதிவுகளே தமிழ்மணத்தில் இருந்து நீக்கப் படும் என்பதும் ஒரு முடிவாக இன்று வந்த மின்மடல் தெரிவிக்கிறது. தமிழ்மணத்தில் இணைந்திருப்பதற்கான சில சட்ட திட்டங்கள் இவை. ஏற்புடையதாய் இல்லை எனில் ஒரு வந்தனமிட்டு வெளியே சென்றுவிடலாமே. எது ஆபாசம் என்று எப்படி யார் நிர்ணயிப்பது என்றெல்லாம் கேள்வி எழுப்பாதீர்! இவை எல்லாம் அறியாத சிறு குழந்தைகளா நீங்கள்?

இதைவிட வேடிக்கை என்னவென்றால், நிர்ணயிக்கப் படுகிற சட்ட திட்டங்கள் தனக்கு ஏற்புடையாதாய் இல்லையென்றாலோ, முன்பு இருந்தவற்றை மாற்றி வேறு சொன்னாலோ, தமிழ்மண நிர்வாகி அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம்! ஐயா, இது முழுச் சுதந்திரம் உள்ள ஒரு அமைப்பு. தனது விருப்பு வெறுப்புப்படி முடிவுகளை எடுத்துக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் முழு உரிமையும் உள்ள ஒன்று என்பதை மறந்து விடவேண்டாம்.

ஹாட்மெயில் கணக்கில் இருக்கும் மடல்கள் எல்லாம் ஒரு மாதம் நுழையாதிருந்தால் அழிக்கப் படும் என்றொரு விதி இருந்தது (இன்னும் இருக்கிறதா தெரியவில்லை). அந்த விதி ஏற்படுத்தப் பட்டபோது எம் உரிமைக்குப் பங்கம் வந்ததே என்று யாரும் குதித்தீர்களா என்ன? அவ்வளவு ஏன்? பெரும்பாலான வலைப்பதிவுகளை அமைக்க இலவசமாய் இடம் கொடுத்த பிளாக்கரின் உரிமையாளர் கூகிள் Dont Be Evil என்னும் motto வைத்திருந்தாலும் ஏறுகிற சந்தை மதிப்பில் அதை மறந்து ‘இனி இலவச இடமில்லை’ என்றோ, ‘ஒரு நாளைக்கு ஒரு பதிவு தான் போட வேண்டும்’ என்றோ சட்டம் கொண்டு வந்தால் இப்படி மாற்றம் கொண்டு வந்ததற்காக, லேரி பேஜும், செர்கே ப்ரின்னும் காலில் விழ வேண்டும் என்று கேட்பீர்களோ?

ஒரு அமைப்பின் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொண்டு அதன் வரையறைகளுக்குள் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது அவை ஏற்புடையதாய் இருக்கும் வரை ஏற்றுக் கொள்வதும், இல்லையெனில் துறந்துவிட்டு வெளியேறிவிடுவதும் அப்படி என்ன புரியாத சூத்திரங்களா? சற்று யோசித்துப் பார்த்தாலோ, தமிழ் வலையுலகில் நடப்பதைத் தொலைக்காட்சித் தொடர்களைப் போல் விட்டுவிட்டுப் பார்த்திருந்தாலோ கூட இந்த முடிவுக்கான காரணங்கள் தெரிந்திருக்குமே?

இலவசப் பதிவிடம் இல்லை என்று என்னிடம் சொன்னால், பிளாக்கருக்கோ, வேறு பதிவு நிறுவனத்திற்கோ அழ வேண்டியதை அழுதுவிட்டு இருந்து கொள்வேன். இல்லையெனில் இதுவரை இடம் கொடுத்ததற்கு நன்றி சொல்லி விட்டு, வெற்றுத் தாளையும் சீவிய பென்சிலையும் எடுத்துக் கொண்டு எனக்குப் பிடித்த வீட்டு மூலையில் உட்கார்ந்து என் எழுத்தைத் தொடர்வேன். அந்த எழுத்தின் வீரியத்தில் தான் இருக்கிறது கருத்துச் சுதந்திரம்.

இறுதியாக, இந்தப் பதிவைத் தமிழ்மணத்தின் இணை-நிர்வாகி என்கிற முறையிலும் எழுதுகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

Tags: இணையம்

22 responses so far ↓

  • 1 krishnamurthy // Jan 27, 2006 at 1:27 am

    Appadi Podu! Enge selvajkkula irukkum singam kilambaliyennu parthen. seerip purappatuvittathu! Jokes apart, this new step taken is very much required to control the obscene comments. Your clarification, although a bit harsh to your level, is well written.

  • 2 Manian // Jan 27, 2006 at 2:42 am

    எழுத்தின் அழுத்தம் மன அழுத்தத்தின் வெளிப்பாடோ ? சொன்னதும் சரி, செய்ததும் சரி.
    எதிர்வினையாய் பதிவிடுவதற்கு பதிலாக மின்னஞ்சலிலோ, இல்லை,அதற்கு முன்பாக தனிப் பதிவாகவோ காரணங்களை முன்னிறுத்திருக்கலாம்… உட்கார்ந்து விமரிசிப்பது வேறு, காரியமாற்றுவது வேறுதான்.

  • 3 அனானி // Jan 27, 2006 at 3:02 am

    உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு வரும் என்று எதிர்பார்த்ததுதான். வேற என்ன சொல்ல !

    வழமையான பச்சை கலரு, மஞ்ச கலரு
    🙁

  • 4 ramachandran usha // Jan 27, 2006 at 4:14 am

    இதை கொஞ்சம் முன்னாடியே செய்திருக்கலாம். நேற்று இருந்த மனநிலையில் தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு இந்த விதியை ஏன் கட்டாயம் ஆக்கக்கூடாது என்ற கோரிக்கையை விடலாம் என்று நினைத்திருந்தப் பொழுது, நிர்வாகிகளிடமிருந்து மடல் வந்தது.

  • 5 Thangamani // Jan 27, 2006 at 4:41 am

    Thanks Selvaraj. Your clarification has come when it is needed.

  • 6 இளவஞ்சி // Jan 27, 2006 at 5:21 am

    சரியானதொரு விளக்கம்!

  • 7 ஜோ // Jan 27, 2006 at 5:23 am

    நல்லதொரு விளக்கம்

  • 8 காசி // Jan 27, 2006 at 5:39 am

    மிக்க நன்றி செல்வராஜ். தெளிவாகவும் செறிவாகவும் இருக்கிறது உங்கள் சொல்.

  • 9 கோ.இராகவன் // Jan 27, 2006 at 6:35 am

    சரியாகச் சொன்னீர்கள் செல்வராஜ். இந்தச் சூழ்நிலையில் இது தேவையான முடிவென்றே தோன்றுகிறது. கடந்த சில நாட்களாகவே என்னுடைய மனதில் இருந்த எண்ணந்தான். தமிழ்மணமே அதை நடைமுறைப் படுத்த முனைந்ததில் மகிழ்ச்சியே.

  • 10 Padma Arvind // Jan 27, 2006 at 8:35 am

    செல்வராஜ்
    நன்றி. இரண்டு நாட்களாக தமிழ்மணம் பக்கம் வர இயலவில்லை. மடல்களையும் பார்க்க இயலவில்லை. இன்று உங்கள் பதிவை படித்ததும் தான் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

  • 11 Anonymous // Jan 27, 2006 at 9:12 am

    Well said selvaraj…

  • 12 சதயம் // Jan 27, 2006 at 9:45 am

    எதற்கோ பயந்து வீட்டைக் கொளுத்துவது போல..ன்னு சொல்வாங்களே அதான் நினைவுக்கு வந்தது.இருந்தாலும் உங்களுடைய செய்கைகளை நியாயப் படுத்த terms and conditions வரை போக வேண்டிய அவசியம் வந்ததே அதுவே என் போன்றோரின் வாதத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்.

  • 13 arul // Jan 27, 2006 at 11:12 am

    மிகச் சரியான முடிவு.
    இந்தத் திரட்டியில் எந்த அடிப்படையில் நாம் இணைகிறோம் என்று புரிந்துகொள்ள செலவழிக்க கொஞ்சம் நேரமில்லாதவர்களுக்கு பதில் கூடச் சொல்லத் தேவையில்லை. எல்லோரும் போட்டு விளக்கு விளக்கு என்று இன்னும் எத்தனை தடவைதான் விளக்குவது.

    அருள்

  • 14 DesiPundit » செம ஹாட் மச்சி // Jan 27, 2006 at 11:42 am

    […]

  • 15 Dubukku // Jan 27, 2006 at 11:43 am

    I have linked this post in DesiPundit
    http://www.desipundit.com/2006/01/27/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae-%e0%ae%b9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/

    Hope you dont have any objections. thanks.

  • 16 சிங். செயகுமார். // Jan 27, 2006 at 11:56 am

    “ஹாட்மெயில் கணக்கில் இருக்கும் மடல்கள் எல்லாம் ஒரு மாதம் நுழையாதிருந்தால் அழிக்கப் படும் என்றொரு விதி இருந்தது (இன்னும் இருக்கிறதா தெரியவில்லை). அந்த விதி ஏற்படுத்தப் பட்டபோது எம் உரிமைக்குப் பங்கம் வந்ததே என்று யாரும் குதித்தீர்களா என்ன?”

    செல்வராஜ் சரியானதொரு விளக்கம்.

  • 17 Bala Subra // Jan 27, 2006 at 11:56 am

    தங்களின் எண்ணங்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறேன்.

    —கூகிள் Dont Be Evil என்னும் motto வைத்திருந்தாலும் ஏறுகிற சந்தை மதிப்பில் அதை மறந்து —

    கூகிள் ப்ரைவசி @ சீன நுழைவு, சோனி இசைத்தட்டு ரூட்கிட் என்று பெரிய நிறுவனங்களின் தகிடுதத்தங்கள் மிகக் கடுமையாக நாளிதழ்களிலும், சஞ்சிகைகளிலும் விமர்சிக்கப்படுகிறதே 🙂

    பொதுசேவையில் இருப்பவர்களின் செய்கைகள் அதீதமாக கவனிக்கப்படுகிறது. புகழுக்கு கொடுக்கும் விலை? மாற்றங்களை (நல்லதுக்காகவே இருந்தாலும்) மனம் விரும்புவதில்லை. Status quo rocks.

  • 18 john // Jan 28, 2006 at 12:55 pm

    good view

  • 19 Mathy Kandasamy // Jan 29, 2006 at 2:16 am

    Selvaraj,

    Quite timely Selva!

    I haven’t read all the posts and mails in thamizmanam google group yet. Have just skimmed thru.

    I would have written a similar post myself as a fellow blogger and admin @ thamizmanam too.

    Thanks for the timely post.

    -Mathy

  • 20 enRenRum anbudan BALA // Jan 29, 2006 at 6:18 am

    Selva,
    I agree with you (200%) on this. I wish to republish what I wrote in Sadhayam’s post at
    http://sadhayam.blogspot.com/2006/01/blog-post_26.html

    இந்தப் பிரச்சினை குறித்து பலரும் நிறைய அலசியாகி விட்ட நிலையில் என் கருத்து:

    1. டோண்டு அவர்களின் சில செயல்பாடுகளினால், பிரச்சினை பெரிதாகிப் போனது என்பதில் எனக்கும் உடன்பாடே.
    2. இப்போது நிலவும் அவலச்சூழலைப் பார்த்த பின்னும், இந்த மட்டுறுத்தலை “ஜனநாயக வழிமுறைக்கு எதிரானது” என்று சிலர் நிறுவ முயற்சிப்பது, மிகுந்த அயற்சியைத் தருகிறது.
    3. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளும் அளவு நம்மிடையே ஒரு புரிந்துணர்வு மிக அவசியமாகிறது.
    4. தமிழ்மணம் என்னும் இலவச சேவை, சில காரணங்களுக்காக, ஒன்றை வலியுறுத்தும்போது இவ்வளவு வாதம்-பிரதிவாதம் செய்யும் நாம், பிளாகர் இது போன்று ஒரு நடவடிக்கை எடுத்தால், இவ்வளவு பேச மாட்டோம் என்றும் தோன்றுகிறது.

    என்றென்றும் அன்புடன்
    பாலா

  • 21 Manikandan // Jan 29, 2006 at 10:28 am

    Selvaraj,
    Good post.

  • 22 அன்பு // Jan 30, 2006 at 12:04 am

    செல்வா,

    சரியான நேரத்தில் சரியான பதிவு – வழக்கம்போல உங்களிடமிருந்து. ஆனால் இதுபோன்ற மேம்பாடு நடக்கும்போதெல்லாம் ஒரு பாட்டம் இரைச்சலும், அதற்கு விளக்கமென்று நேரவிரயமும் செய்யவேண்டியிருப்பது அயற்சியாகவே இருக்கிறது. ஆனால், அதையும் மீறி நல்லதொரு விளக்கத்துக்கு நன்றி.